Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2020|
Share:
(பாகம்-16f)

முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

கேள்வி: (சென்ற இதழ் தொடர்ச்சி) நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும்?

கதிரவனின் பதில் (தொடர்ச்சி):
சென்ற பகுதிகளில், பெருநிறுவனங்களில் வேலை நிலையானது என்று எண்ணி அதனால்மட்டும் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்றும் பல விதமான காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரிடலாம் என்றும் பட்டியலிட்டோம்.

ஆனால், சிறிய ஆரம்பநிலை நிறுவனத்தில் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என்பது உண்மைதான். ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை வெற்றியடைவதில்லை. பலதரப்பட்ட இடையூறுகளைச் சந்தித்து, திறம்படச் செயல்பட்டு, அது மட்டுமல்லாமல், பல அதிர்ஷடங்களையும் பெற்ற நிறுவனங்கள்தாம் அதிக அளவில் வெற்றியடைகின்றன. மூலதனம் கிட்டாமலோ, தொழில்நுட்ப அல்லது வணிகரீதியான தடங்கல்களைச் சமாளிக்க முடியாமலோ, அல்லது குழு உள்பூசல் போன்ற மற்ற காரணங்களாலோ தோல்வியடையும் நிறுவனங்களே அதிகம்.

ஆனாலும் அப்படிப்பட்ட அபாயங்களையும் மீறி பலர் நிறுவனங்களை ஆரம்பித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். நல்ல வேலையை விட்டுவிட்டு அத்தகைய நிறுவனங்களில் ஆரம்பகால ஊழியர்களாகச் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை நன்கு உணர்ந்துகொண்ட பின்பே உங்கள் கேள்விக்குத் தக்க விடை காண இயலும்.

எனவே, ஆரம்பநிலை நிறுவனங்களில் சேருவதில் அனுகூலங்கள் என்ன என்று பட்டியலிடுவோம்:

முதலும் மிக முக்கியமானதும் உங்கள் நிறுவனக் குழுவே ஒன்றை உருவாக்கும் திருப்தி. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து நிறுவனத்தை ஆரம்பித்து வளர்க்கும் சாதனை உணர்வு. இது பெருநிறுவன சக்கரத்தில் ஒரு கம்பியாக இருப்பதில் கிடைக்காது.

அடுத்து நிச்சயமாக, நிறுவனம் மிக வெற்றிபெற்று பொதுப்பங்கு விற்பனை நிலை அடைந்தாலோ, அல்லது ஓரளவாவது வளர்ந்து ஒரு பெருநிறுவனத்தால் வாங்கப்பட்டாலோ அதிகப் பணம் கிடைக்கிற வாய்ப்பு. அதற்காக மட்டுமே ஆரம்பிப்பது என்பதில்லை. ஆனால் அதுவும் ஒரு மிக முக்கியமான காரணம் என்பதில் ஐயமே கிடையாது!
மற்றொரு காரணம், உங்கள் வயதையும் குடும்ப நிலையையும் பொறுத்த, அபாயம் குறித்த கவலையற்ற நிதி நிலை. ஒன்று நீங்கள் மிக இளவயது வாலிபராக, குடும்பப் பொறுப்பு அதிகமற்றவராக இருக்கலாம். அல்லது உங்கள் இல்லத் துணைவர் அல்லது துணைவி நல்ல பெருநிறுவனப் பதவியில் நல்ல வருமானத்தோடு இருப்பதால், கவலையின்றி ஆரம்பநிலை நிறுவன அபாயத்தைச் சந்திக்கும் மனப்பாங்கு இருக்கக்கூடும். அல்லது வேலைக் காலத்தின் மறு எல்லையாக, உங்கள் குடும்பக் கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டு நல்ல நிதிநிலையில் ஏற்கனவே இருப்பதால் வேலையிழப்புபற்றிக் கவலைப்படாதிருக்கலாம்.

எனக்குத் தெரிந்து பலர் இந்த நிலையில் இருக்கும்போதுதான் தாங்களே நிறுவனம் ஆரம்பிக்கிறார்கள்! ஸிஸ்கோ, இன்ட்டெல், கூகிள் போன்ற பெருநிறுவனங்களில் பல வருடங்களாகப் பங்குகள் நிறையக் கிடைத்ததால் பெருநிதி சேமித்து, பணக்கவலையே இல்லாத நிலை அடைந்தபின் வேலையிழப்புக் கவலையின்றி முயன்று பார்க்கும் ஊக்கம் வருவதைக் கண்டுள்ளேன்.

இவ்வாறு பல காரணங்களால் துணிச்சல் வருவதால் என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் ஆரம்பநிலைக் களத்தில் சிலர் இறங்கக்கூடும்.

பெருநிறுவனத்தில் பதவி உயர்வு வெகுநாட்களாக அடையாமலிருப்பது இன்னொரு காரணம். மேலே போகப்போக மேலிருக்கும் பதவிகள் குறைந்துவிடுவதால் அடுத்த பதவி உயர வெகு நாளாகும் அல்லது கிடைக்கவே கிடைக்காது என்னும் பட்சத்தில், ஆரம்பநிலை நிறுவனத்தில் முயன்று அதன் வெற்றியோடு வேகமாக உயரமுடியும் என்ற நம்பிக்கையில் நிறுவனராக இல்லாவிட்டாலும் ஆரம்ப காலத்தில் சில பேர்களே உள்ள நிறுவனத்தில் சேரலாம். சக நிறுவனராகும் வாய்ப்பு என்றால் அது இன்னும் ஈர்ப்புள்ளதாகக் கூடும்.

பெருநிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் பலர் இத்தகைய வாய்ப்பால் ஆரம்பநிலை நிறுவனத்துக்கு ஈர்க்கப்படுகிறார்கள். துணைத்தலைவராக வெகுகாலம் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு உயர்வதற்கு வாய்ப்புக் குறைவு என்பதால் ஆரம்பநிலை நிறுவனம் ஒன்றின் தலைமைப் பதவி கிடைத்தால் அதற்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள்.

அதேபோல் பெருநிறுவனத்தில் இன்னும் துணைத்தலைவர் பதவி கிட்டாமல் வெகுகாலமாகக் காத்திருக்கும் பலர் ஆரம்பநிலை நிறுவனத்தில் தலைவர் பதவி இல்லாவிட்டாலும், துணைத்தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பால் ஈர்க்கப் படுகிறார்கள்.

அவ்வாறு பதவி உயர்வு ஈர்ப்பால் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேரும் அவர்கள் வெற்றியடைவார்களா, பெருநிறுவனத்தில் ஊறிய மனப்பாங்கு ஆரம்பநிலை நிறுவனத்தின் ஊசலாட்டத்துக்கும் வேகத்துக்கும் ஒத்துவருமா என்பது வேறு விஷயம். அதைப்பற்றிப் பின்னர் எப்போதாவது விவரிக்கலாம்.

அடுத்த பகுதியில், ஆரம்பநிலை நிறுவனங்களைச் சேர்வதற்கான காரணங்களையும், பிரதிகூலங்களையும் பட்டியலிடுகிறேன். இரு பக்கங்களையும் அலசி உங்கள் கேள்விக்கு நீங்களே எவ்வாறு விடை காண்பது என்று பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline