|
|
|
 |
"ரஞ்சிதம், பசிக்கிறது. சீக்கிரம் இலையைப் போடு. கை கால் கழுவிட்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டின் பின்பக்கம் சென்றார்.
ரஞ்சிதம் முகத்தில் ஒரு புன்னகை. கணவர் கோயம்புத்தூரில் 'ஆனந்தாஸ் ஹோட்டலில்' சர்வராக வேலை பார்த்தாலும், அங்கு சாப்பிட விரும்பாமல் தினமும் மூன்று வேளையும் வீட்டிற்கு இத்தனை ஆண்டுகளும் சாப்பிட வந்து விடுகிறார். ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்து வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், ராமகிருஷ்ணனுக்கு மனைவி ரஞ்சிதம் சமைத்த உணவுதான் விருப்பமாக இருந்தது. அதிலும் மனைவி பரிமாறிச் சாப்பிடுவது மனதுக்கும், வயிற்றுக்கும் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லுவார்.
ராமகிருஷ்ணன் ரஞ்சிதம் தம்பதியருக்கு ரம்யா, சௌம்யா என்று இரண்டு பெண் குழந்தைகள். ரஞ்சிதத்தைப் போலக் குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு என்று ராமகிருஷ்ணன் அடிக்கடி நினைத்துக் கொள்ளுவார்.
ரஞ்சிதம் உணவு பரிமாறிக் கொண்டே, "என்னங்க, ராகவன், மைதிலி இருவரும் உங்கள் ஹோட்டலுக்கு வந்தாங்களா? அவங்க மகன் ரமேஷ் திருமணத்திற்குச் சம்மதித்தாங்களா? ஒரு வாரமா அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?" என்று கேள்விகளை அடுக்கினாள்.
ராமகிருஷ்ணன், "ரஞ்சிதம்! ராகவன், மைதிலி இருவரும் படித்தவர்கள்; இருவருமே டாக்டர்கள்; தனியாக கிளினிக் வைத்திருக்கிறார்கள்; பணத்திற்கோ, வசதிகளுக்கோ கொஞ்சமும் குறைவில்லை. ஒரே மகன் ரமேஷ் தன்னுடன் பாங்கில் வேலை பார்க்கும் காயத்ரியைத் திருமணம் செய்து கொள்வதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. அவர்கள் இருவரும், மகன் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதற்குத் தடை ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் காயத்ரி ஒரு விதவை என்பதால்தான், அவன் காயத்ரியைக் காதலிப்பதை இருவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை" என்றார்.
ரஞ்சிதம், "என்னுடைய மனதுகூட இந்தத் திருமணத்தை ஆதரிக்குமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ராகவனும், மைதிலியும் கூடக் காதல் திருமணம்தான் செய்து கொண்டதாக நீங்கள் முன்னமேயே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் தங்கள் மகன் ரமேஷ் காயத்ரியைக் காதலிப்பதையும் அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புதையும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணம் இருக்கத்தானே செய்கிறது" என்றாள்.
ராமகிருஷ்ணன், "என்னைத் தன் சகோதரன்போல் நினைப்பதாக ராகவன் அடிக்கடி சொல்வார். அதனால் அவர் தன்னுடைய பிரச்சனைகளை என்னிடம் மனம் விட்டுப் பேசுவதாகவும் சொல்வார். அதனால் இந்த விஷயத்தில் அவருக்கு நாம் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது என்று புரியவில்லை. ரஞ்சிதம், உன்னிடம்தான் நான் இந்தப் பிரச்சனை முழுவதையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கிறேன். நீதான் ஒரு நல்ல யோசனை சொல்லேன்" என்றார்.
ரஞ்சிதம், "ராகவன், மைதிலி இருவரும் ரமேஷின் முடிவுக்கு சம்மதிக்காததற்கு ஒரே ஒரு காரணம்தான். அது நமக்கு நல்லாவே தெரியும். காயத்ரிக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் கணவன் கார் விபத்தில் இறந்துவிட்டான். அவளுடைய கணவன் வேலை பார்த்து வந்த அந்த பாங்கிலேயே காயத்ரிக்கு வேலை கிடைத்தது. காயத்ரிக்கும் ரமேஷைப் பார்க்கும்வரை மறுமணத்தைப் பற்றிச் சிந்தனையே இல்லை. தன்னிடமும் மற்றவர்களிடமும் ரமேஷ் பழகும் விதத்தையும், அவனுடைய நல்ல குணங்களையும் பல நாட்கள் கவனித்து வந்திருக்கிறாள். ரமேஷ் தன்னுடைய காதலை மிகவும் தயக்கதுடன் வெளியிட்டு, அவளைத் திருமணம் செய்துகொள்வதில் தான் உறுதியாக இருப்பதாகச் சொன்னதைப் பற்றிப் பலமுறை யோசித்துப் பார்த்துத்தான் காயத்ரி ரமேஷின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்" என்றாள்.
ராமகிருஷ்ணன், "ரஞ்சிதம், நீ சொல்வது முற்றிலும் சரி. போன வாரம் நாம் இருவரும் காயத்ரியின் வீட்டிற்குச் சென்று, காயத்ரியின் பெற்றோரிடம் விரிவாகப் பேசினோம். காயத்ரி அவர்களின் ஒரே பெண். அவள் தங்கள் காலத்திற்குப் பிறகு எந்த ஆதரவுமில்லாமல் தனியாகக் கஷ்டப்படக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில்தான் ரமேஷ், காயத்ரி திருமணத்திற்கு அவர்கள் தடை சொல்வில்லை; ரமேஷுடைய பெற்றோர்களின் தயக்கம்தான் இப்போது பிரச்சனை" என்றார்.
மேலும் ராமகிருஷ்ணன், "ரஞ்சிதம், வருகிற ஞாயிறன்று ராகவன், மைதிலி இருவரின் 25ஆம் ஆண்டு திருமண நாளுக்கு நம்மை மட்டும் அழைத்திருக்கிறார்கள். அன்று சந்தர்ப்பம் பார்த்து நாம் இருவரும் அவர்களிடம் பேசலாம்" என்றார். ஞாயிறு மாலை ராகவன், மைதிலி தம்பதியினரைப் பார்த்து, வாழ்த்துச் சொல்லிவிட்டு வரலாம் என்று ராமகிருஷ்ணன், ரஞ்சிதம் இருவரும் புறப்பட்டார்கள்.
ஹாலில் இருந்த கேக்கை தம்பதியினர் வெட்டி, வாழ்த்துச் சொன்ன பிறகு, ரமேஷ் பெற்றோரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். சிறிது நேரம் இருந்து விட்டுப் பிறகு நண்பர்களுடன் சினிமாவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்று விட்டான்.
ராமகிருஷ்ணன், "ராகவன் சார், மைதிலி மேடம்! எங்கள் இருவரையும் உங்கள் குடும்பத்தினராகக் கருதுவதாகப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்த உரிமையுடன் இன்று உங்கள் இருவரிடமும் ரமேஷ் திருமணத்தைப் பற்றி நாங்கள் பேசலாம் என்று நினைக்கிறோம்" என்றார்.
ராகவன், மைதிலி இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
ரஞ்சிதம், "நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன். ராகவன் அண்ணா, நீங்களும் மைதிலி அண்ணியும் நினைப்பது சரிதான். உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கும்போது, உங்க பையன் காயத்ரியைத் தேர்ந்தெடுப்பானேன்? காயத்ரி ஒரு விதவை என்று தெரிந்தும், அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வானேன்? காரணங்கள் நமக்குத் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். ரமேஷ் காயத்ரியின் அழகைப் பார்த்தோ, காயத்ரி ரமேஷின் அழகைப் பார்த்தோ ஒருவருக்கொருவர் விரும்பவில்லை. இருவருமே மற்றவர் பழகும் விதம், அன்பான பேச்சு, மற்ற குணங்களையெல்லாம் பார்த்துத்தான் திருமணம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரு விஷயத்தில் இருவரும் தீர்மானமாக இருக்கிறார்கள்; அதாவது, இருவருமே பெற்றோர் சம்மதத்தோடுதான் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறார்கள்" என்றாள்.
மைதிலி, "ரஞ்சிதம், ஒருவேளை நாங்கள் இருவருமோ, அல்லது காயத்ரியின் பெற்றோரோ சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வார்களாம்?" என்று ஒருவிதக் கவலையுடன் கேட்டாள்.
ராமகிருஷ்ணன், "ராகவன் சார், ரஞ்சிதம் ஆலோசனைப்படி சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை நாங்கள் இருவரும் காயத்ரியின் வீட்டிற்குச் சென்று அவளுடைய அப்பா, அம்மா இருவரிடமும் பேசிவிட்டு வந்தோம். முதலில், காயத்ரியின் மறுமணத்திற்கு அவர்கள் சம்மதிக்கவே இல்லை. உற்றார், உறவினர் என்ன சொல்வார்களோ என்று தயங்கினார்கள். 'நாலுபேர் என்ன நினைப்பார்கள், நாலுபேர் என்ன சொல்வார்கள்' என்று தயங்கினார்கள்.
அப்போது நான் கேட்டேன், "அதாவது நாலுபேர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள் என்பதற்காகத்தான் காயத்ரியின் திருமணத்திற்கு, அதாவது, மறுமணத்திற்கு பயப்படுகிறீர்கள் அல்லது தயங்குகிறீர்கள், இல்லையா? ஒருவேளை காயத்ரி மறுமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், இதே நாலு பேரும் அப்போதும் ஏதாவது தவறாகச் சொல்ல வாய்ப்புண்டு, இல்லையா என்று கேட்டேன்" என்றார்.
மைதிலி, ராமகிருஷ்ணனைப் பார்த்து, "ராமு அண்ணா, அவர்களுக்கென்ன, பெண்ணைப் பெற்றவர்கள், தங்கள் விதவைப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு நல்ல பையன் கிடைத்துத் திருமணம் ஆகிவிட்டால் நிம்மதி என்றுதான் நினைப்பார்கள். ஆனால் எங்களுக்கு இருப்பது ஒரே பையன். பாங்கில் ஆபீசர். கை நிறைய சம்பளம் வாங்குகிறான். இந்த நிலையில், நாங்கள் ஏன் எங்க பையனுக்கு ஒரு விதவையைத் திருமணம் செய்து வைக்க வேண்டும்?" என்றாள்.
ராமகிருஷ்ணன் பதில் சொல்வதற்கு முன் ரஞ்சிதம், "நீங்கள் கேட்பது மிகவும் நியாயமாகப்படுகிறது. ஆனாலும் பெண் என்ற முறையில் நீங்களும், நானும் அந்தக் காயத்ரியைப் பார்த்துப் பரிதாபப் படத்தான் வேண்டியிருக்கிறது. பொதுவாக ஒருவன் எதற்காக ஒரு விதவைப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை" என்றாள்.
ராமகிருஷ்ணன், "அவர்களிடம் பேசியதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ரமேஷும், காயத்ரியும் மனதார விரும்புகிறார்கள்; கடற்கரை, ஹோட்டல், சினிமா என்றெல்லாம் சுற்றக்கூடிய சாதாரணமான காதலர்களாக அவர்கள் இல்லை. திருமணம் செய்து கொண்டு, உறவினர்களோடு கலந்து நல்ல வாழ்க்கை வாழும் குறிக்கோளுடன்தான் பழகி வருகிறார்கள். இவர்களைப் போன்று இந்த நாட்களில் பிள்ளைகளைப் பார்ப்பது மிகவும் அரிது" என்றார்.
ராகவன், "கதைகளில் இதுபோல வருவதும், நாம் பேசுவதும் இயற்கைதான். ஆனால் அவரவர் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் வரும்போது எதிர்கொள்வதுதான் பிரச்சனையே, இல்லையா ராமகிருஷ்ணன்?" என்று கேட்டார்.
ராமகிருஷ்ணன், "நீங்கள் சொல்வது உண்மைதான்; அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்போது என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில், எனக்கு ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'நாம் எல்லோரும் கடவுளிடம் கருணை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம், இல்லையா? அதேபோல் நம்மிடம் கருணை வேண்டி நிற்பவர்களிடம் நாம் கருணை காட்ட வேண்டியது அவசியமாகிறதல்லவா? கருணை அளிப்பவர்களும், அந்தக் கருணையைப் பெறுபவர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று சொல்கிறார். மேலும் அவர், 'ஒருவேளை, நாம் பிறரிடம் கருணை காட்ட மறுத்தாலோ, தயங்கினாலோ, நாம் பிரார்த்திக்கும் கருணையை அந்தக் கடவுளிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்?' என்றும் கேட்கிறார். எது எப்படியோ, இந்த உலகத்தில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். நான் சொன்னது கிருஷ்ணர் சொன்ன கீதை வாக்கியம் மட்டுமல்ல. உண்மையும் அதுதான்" என்று முடித்தார்.
ராமகிருஷ்ணன் சொல்லி முடித்ததும், ராகவன், மைதிலி இருவர் முகத்திலும் தெளிவு பிறந்ததுபோல இருந்தது. ஆனால் சிறிதுநேரம் ஒன்றுமே பேசவில்லை.
ரமேஷும், காயத்ரியும் மண்டியிட்டு, தங்களிடம் கருணையை எதிர்பார்த்து வணங்குவதுபோல இருவருக்கும் சில வினாடிகள் தோன்றியது.
ராகவன், மைதிலியின் முகத்தைப் பார்த்தவாறே, "இப்போது நாங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ராமகிருஷ்ணன், "ராகவன் சார், மைதிலி மேடம், எங்களைவிட நீங்கள் இருவரும் நிறையப் படித்தவர்கள்; வாழ்க்கை அனுபவம்தான் எங்கள் படிப்பு. நம்முடைய பிள்ளைகளுடைய மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைதான் முக்கியம். அதுதான் நம்முடைய இலட்சியமும்கூட. உங்கள் மகன் ரமேஷின் விருப்பத்தை நிராகரித்துவிட்டு, அவனுக்கு வேறொரு பெண்ணைக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கலாம். உங்கள் பேச்சைத் தட்டாமல் ரமேஷும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் ரமேஷுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா? காயத்ரியிடம் அன்பு செலுத்தித் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டோமே என்கிற குற்ற உணர்வு ரமேஷிடம் நீண்ட காலம் இருக்கும், அல்லவா? இந்த உலகில் நியாயமான எந்த முடிவையும் எடுத்து, சுதந்திரமாக எடுத்து வாழ, நமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு உரிமை உண்டு. இன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு சிந்தனை பரவலாக இருக்கும்போது, ரமேஷ், காயத்ரி இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு நீங்கள் இருவரும், பெற்றவர்களாக இருந்தாலும், எப்படிக் குறுக்கே நிற்க முடியும்?" என்று கேட்டார்.
ரஞ்சிதம், "மனைவியை இழந்த ஓர் ஆண், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதைப் பற்றி யாரும் குறை சொல்வதில்லை, இந்த உலகம் மிகச் சுலபமாக அதை ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம், கணவனை இழந்த ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை நெருங்கிய உறவினர்கள், ஏன் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களே, ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால் இன்று உலகம் மாறி வருகிறது. அதற்கேற்ப மனிதர்களுடைய சிந்தனைகளும் மாறி வருகின்றன. எனவே ரமேஷ், காயத்ரி இருவருடைய முடிவை நாம் எல்லோரும் மனதார வரவேற்போம். திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைப்போம் என்பது என்னுடைய கருத்து. இன்று உங்கள் வீட்டிற்குள் நுழையும்போது என் மனம் குழப்பத்தில்தான் இருந்தது. இவ்வளவு நேரம் நாம் இந்த விஷயத்தைப் பேசி முடித்தபின் என் மனம் தெளிவு பெற்று விட்டது" என்றாள்.
ராமகிருஷ்ணனுக்கு ஒரே ஆச்சரியம். தன்னுடைய மனைவி ரஞ்சிதமா இந்தளவு பேசுகிறாள் என்று எண்ணிப் பெருமையுடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
ராகவன், "என்ன மைதிலி? ரமேஷ் காயத்ரியைத் திருமணம் செய்துகொள்வது உனக்கு முழுச் சம்மதம்தானே? உனக்குச் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்தான்" என்றார். மைதிலியின் கண்களில் சம்மதம் தெரிந்தவுடன், "அப்படியென்றால் இந்த நல்ல செய்தியை ரமேஷிடம் எப்போது தெரிவிக்கப் போகிறாய்?" என்று கேட்டார்.
மைதிலி, "ரமேஷ் சினிமா பார்த்துவிட்டு வரட்டும். நாம் இருவரும் சேர்ந்தே சம்மதம் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு நிபந்தனை. ராமகிருஷ்ணனும், ரஞ்சிதமும் மகிழ்ச்சியான அந்தத் தருணத்தில் நம்முடன் இருக்க வேண்டும், என்ன சரிதானே?" என்று கேட்கிறாள்.
ராமகிருஷ்ணன், ரஞ்சிதம் இருவரும் ஒரே குரலில், "கண்டிப்பாக நாங்கள் இருப்போம். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் நிச்சயம் கலந்து கொள்கிறோம்" என்றார்கள். |
|
|
K.S. கோபாலகிருஷ்ணன், கோவை |
|
|
|
|
|
|
|
|
|
|
|