Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நலம்வாழ
உயர் ரத்த அழுத்தம்: மௌனமான உயிர்க்கொல்லி
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeசமீபத்தில் எனது நெருங்கிய தோழியின் 37 வயது அண்ணன் இந்தியாவில் காலமானான். இது தவிர்க்க முடிந்த ஒரு நோயினால் என்று அறியும்போது, மனம் வேதனையில் விம்முகிறது. ரத்த அழுத்தம் இருப்பதாக இரண்டு வருடங்கள் முன்பு கண்டுபிடிக்கப் பட்டது. மருந்து கொடுக்கப்பட்டது. திடுமென்று ஒரு நாள் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதுதான் நோயின் தீவிரம் உணரப்பட்டது. மூளையில் ஒரு முக்கியமான பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. இந்தியாவில் தலைசிறந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்தார்.

ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைப் பகுதியில் வைத்தியம் செய்தபோதும் மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற நோயாளிகளை அடிக்கடி நாம் காண்கிறோம். ஆனால் அது நம்மை, நமது நெருங்கிய சொந்தத்தை, சினேகத்தைத் தாக்காது என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் உலவி வருகிறோம். செய்தித் தாள்களிலும், மருத்துவ வலைத் தளங்களிலும், தென்றல் போன்ற பத்திரிகைகளின் மருத்துவப் பகுதியிலும் படிக்கும்போது யாருக்கோ அறிவுரை என்று விட்டு விட்டால், அதன் பின்விளைவுகளை நாம்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளங்களில் உள்ள ரத்தத்தின் அழுத்தம், ரத்தம் பாயும் இதயத் துடிப்பின் அளவுக்கும் (systolic) இதய தசை விரிவடையும் அளவுக்கும் (diastolic) ஏற்ப மாறுபடுகிறது. இதுவே ரத்த அழுத்தமாக கணிக்கப்படுகிறது. இரண்டு எண்களும் முக்கியமானவை.

எந்த வயதினரையும் ரத்த அழுத்த நோய் தாக்கவல்லது. ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரைப் பார்க்கவேண்டும்
ரத்த அழுத்தம் ஏன் ஒரு மௌன உயிர்க்கொல்லியாகக் கருதப்படுகிறது?
ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும்வரை அறிகுறிகள் தெரிவதில்லை. தலைவலி, கண்வலி, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் ரத்த அழுத்தத்தின் பின் விளைவாக ஏற்படுகின்றன. எனவே அவை தெரியவரும் போதே, அழுத்தம் நமது உறுப்புகளை பாதிக்கத் தொடங்கி நாளாகியிருக்கிறது. ரத்த அழுதத்தின் அறிகுறிகள் தெரியும்வரை காத்திருக்காமால், வருடா வருடம் மருத்துவரை நாடி ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்ளுங்கள். மருந்துக் கடையிலும் மளிகைக் கடையிலும் ஏன், உங்கள் வீட்டில் நீங்களே கூட ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளலாம். அது அதிகமாகக் காணப்பட்டால், மருத்துவரை உடனே நாடுங்கள்.

ரத்தஅழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?
சமீபத்தில் 'Joint National Commission-JNC-8' அறிக்கையில் ரத்த அழுத்தம் பற்றி விரிவாக விவரிக்கப் பட்டிருக்கிறது. இதன்படி ரத்த அழுத்த நிலை அதன் அளவின்படி பிரிக்கப்படுகிறது.

ரத்த அழுத்த நிலை சிஸ்டாலிக் டயஸ்டாலிக்
சரியானது 120க்குக் கீழ் 80க்குக் கீழ்
முற்பட்ட நிலை 120-139 80-89
முதல் நிலை 140-159 90-99
இரண்டாம் நிலை 160க்கு மேல் 100க்கு மேல்

இந்தப் பாகுபாட்டின்படி முற்பட்ட நிலையிலேயே வாழ்முறையை மாற்றியமைப்பதன் மூலம் அபாயத்தைத் தவிர்க்கலாம். இதில் முக்கியமாக உப்பைக் குறைத்து உண்பது, தகுந்த உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் ரத்த அழுத்தம் அடுத்த நிலைக்குப் போகாமல் தடுக்க முடியும்.

முதல் நிலையில் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்துகள் தேவைப்படும். இரண்டாவது நிலையில் இருப்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தேவைப்படலாம். இவர்கள் மருந்து உட்கொள்வதைத் தாமதித்தால் நிலமை கட்டுக்கடங்காமல் போகலாம். ரத்த அழுத்தம் அதிகமாக ஆக, அதன் பின்விளைவுகள் அதிகரிக்கும்.
Click Here Enlargeரத்த அழுத்தத்தின் பின்விளைவுகள்
சிறுநீரகப் பாதிப்பு
இருதய அடைப்பு
ரத்த நாளங்கள் பாதிப்பு
கண் பார்வை பாதிக்கப்படுதல்
பக்க வாதம்
மூளையில் ரத்தக் கசிவு

சிறுநீரகப் பாதிப்பு
சிறுநீரகம் செயல்படாதபோது ரத்த அழுத்தம் உண்டாகலாம். ரத்த அழுத்தம் அதிகமாவதாலும் சிறுநீரகச் செயல்பாடு குறையலாம். இவர்களுக்கு Dialysis தேவைப்படலாம்.

இருதய அடைப்பு
உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் Atherosclerosis என்று சொல்லப்படும் அடைப்புக்கு ஆளாகிறார்கள். இந்த அடைப்பு இருதய ரத்த நாளங்களைத் தாக்கலாம். மேலும் கை கால் போன்ற உறுப்புகளின் ரத்த நாளங்களைத் தாக்கலாம். கண்களின் பின்னால் இருக்கும் விழித்திரையில் (Retina) ரத்தக் கசிவு ஏற்படலாம்.

பக்கவாதம்
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிகரிக்கிறது. இந்த வகைப் பக்கவாதம் திடுமென ஏற்பட்டாலும், உயிர் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கலாம்.

மூளையில் ரத்தக் கசிவு
இது ஒரு மௌன உயிர்க்கொல்லி. மேற்கூறிய பின்விளைவுகள் பெரும்பாலும் சிறுகச் சிறுகப் பாதிப்பை உண்டு செய்ய வல்லது. ஆனால் மூளையில் ரத்தக் கசிவு திடுமெனத் தாக்கி மரணத்தை உண்டு செய்ய வல்லது.

இதன் வகைகளாவன:

Hemorrhagic stroke:
உயரழுத்தத்தில் ரத்தம் ஓடுகையில் மூளையின் ஒரு சில பாகங்களில் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. Sub arachnoid Hemorrhage: இந்த வகையில் மூளையின் வெளிப்பாகத்தில் இருக்கும் அடுக்குகளில் (layers) ரத்தக் கசிவு ஏற்படும். இது பெரும்பாலும் ரத்த நாளங்கள் வீங்கி (Aneurysm) திடுமென உடைவதால் ஏற்படுகிறது.

Intra cerebral Hemorrhage:
இது நீண்ட நாளாக ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்காததனால் உயரழுத்தம் தாங்காமல் மூளையின் முக்கிய பாகங்களில் ரத்த நாளங்கள் உடைந்து கசிதல்.

இரண்டு வகையிலும் கசிந்த ரத்தம் அதிவேகமாகப் பரவுவதால் உயிர் தப்புவது கடினம். உயிர் பிழைத்தாலும் செயல்பாடு குறையும் வாய்ப்புகள் அதிகம். உடனடி அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை செய்தாலும் உயிர் தப்பும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆனாலும் இதைத் தடுப்பதே சாலச் சிறந்தது.

மூடநம்பிக்கைகள்
1. எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. நான் மிகவும் நலமாக இருப்பதால் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் வராது.
2. நான் மிகவும் படபடப்பாக இருந்ததால் மருத்துவர் சோதிக்கும்போது உயர் ரத்த அழுத்தம் காட்டியது. மற்ற வேளைகளில் என் ரத்த அழுத்தம் கட்டுக்குள் உள்ளது.
3. எனக்குத் தெரிந்த பல பேருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. ஆகையால் கவலையில்லை.
4. இது ஆண்களையே தாக்க வல்லது. பெண்ணாகிய எனக்குக் கவலை யில்லை.
5. நாற்பது அல்லது ஐம்பது வயதைத் தாண்டியவர்களே ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
6. என் உடல்நிலை சரியாக இருக்கிறது. மாத்திரைகள் இப்போது தேவையில்லை. நானாகவே என் மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ளலாம், நிறுத்தவும் செய்யலாம்.

இவை யாவும் தவறானவை. எந்த வயதினரையும் ரத்த அழுத்த நோய் தாக்கவல்லது. ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரைப் பார்க்கவேண்டும். அவ்வப்போது மருத்துவரிடம் பரிசோதிப்பதின் மூலம், ரத்த அழுத்தம் அதிகமானால் அதற்கேற்ப மாத்திரைகளை அதிகரிக்க முடியும். ரத்த அழுத்தம் அவரவர் நிலையை பொறுத்தபடி அதிகமாகும் வாய்ப்புகள் உண்டு. அதனால் அப்படியே விடாமல் மாத்திரைகளைக் கூடவும் குறைக்கவும் வேண்டும். பின்விளைவுகள் ஏற்பட்டாலும் அவற்றை ஆரம்ப நிலையிலே அறிய முடியும்.

நினைவில் நிறுத்த
1. உயர் ரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். தினசரி மருந்து சாப்பிட்டால் மேற்கூறிய அத்தனை பின்விளைவுகளையும் தவிர்க்க முடியும்.
2. பழக்க வழக்கத்தை மாற்றுதல் முக்கியம். அதிலும் உணவில் உப்பைக் குறைத்தல் மிகவும் அவசியமானது.
3. அவசரப்படாதீர்கள். மருந்துகள் வேலை செய்ய அவகாசம் தாருங்கள்
4. மருத்துவரின் ஆலோசனையைக் கடைப்பிடியுங்கள்
5. கூடுமானவரை ஒரே மருத்துவரின் ரத்த அழுத்தக் கருவியைப் பின்பற்றுங்கள்.
6. தீயதே செய்து வந்த நரகாசுரனே மனம் திருந்தி தீபாவளித் திருநாளாகக் கொண்டாட வேண்டிநின்றான். நம்மில் இருக்கும் சில கெட்ட பழக்க வழக்கங்களை இந்த தீபாவளியில் இருந்து மாற்ற முயற்சிப்போம். உண்ணும் உணவுகளில் எவ்வளவு உப்பு கலந்திருக்கிறது என்று கவனிப்போம். முதல் படியாக, இன்று இரவு உணவில் அந்த ஊறுகாய் வேண்டாமே!

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline