Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பொய்தேவு
- க.நா.சுப்ரமண்யம்|அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeபள்ளிக்கூடத்துநிழல் 'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது.

மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது 'உடையவர்கள்' வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி அவனுக்குப் புது ஆடைகள் உடுத்தி தெருவிலுள்ள சிறுவர்களை எல்லாம் கூப்பிட்டுக் கை நிறையப் பொரிக் கடலை கொடுத்து, ஊரிலுள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பாயாசம் வடையுடன் விருந்து செய்வித்து, ஏகப்பட்ட தடபுடல்களுடன் ஊரிலுள்ள ஒரே பள்ளிக் கூடத்துக்குப் பையனை அனுப்பி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று வருஷங்கள் அந்தப் பள்ளிக் கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும், ''படிப்பால் என்ன பிரயோசனம்'' என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள். வீட்டையோ வயலையோ கடையையோ கண்ணி யையோ பார்த்துக் கொள்வது படிப்படைவிட லாபமாக இருக்கும் என்று பையனைப் பள்ளி யிலிருந்து நிறுத்திவிடுவார்கள். விடாமல் படித்துப் புரட்டியவர்கள் பலருடைய பிற்காலத்து வாழ்க்கை யைக் கவனிக்கும் போது உண்மையிலேயே படிப்பை நிறுத்திவிட்டதுதான் சரியான காரியம் என்று ஒப்புக்கொள்ள யாருக்குமே ஆ§க்ஷபம் இராது. பள்ளிக்கூடத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் படித்து அறிந்து கொண்ட எல்லாவற்றையும் பையன் இரண்டு மூன்று வராங்களிலே மறந்து விடுவான். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள்தாம். சாத்தனூர்ப் பள்ளிக்கூடத்தை முடித்துக் கொண்டு, கும்பகோணத்துக்குக் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய்ப் பெரிய பள்ளியிலே படிப்பார்கள். அதிலும் படித்துப் பாஸ் பண்ணிய பிறகு பட்டணம் கோயம்புத்தூர் என்று எங்கெங்கேயோ வேலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, படிக்காமல் ஊரிலேயே தங்கிவிட்டவர்கள் சுலபமாகவே நல்ல லாபம் அடைவார்கள். கும்பகோணத்தில் பெரிய பள்ளிப் படிப்புப் படித்து முடித்த பின்கூடத் திருப்தி அடையாமல் தஞ்சாவூர், பட்டணம் என்று போய் இன்னும் மேலான படிப்புப் படித்தவர்களும் சர்வமானிய அக்கிரகாரத்துப் பையன்களிலே சிலர் உண்டு.

ஆனால் மேட்டுத் தெருக் கறுப்ப முதலியின் மகனாக வந்து பிறந்துவிட்ட சோமுவுக்கு இதெல்லாம் கிட்டுமா? கிட்டும் என்று அவன் கனவிலாவது கருதி ஆசைப்பட்டிருக்க முடியுமா?

ஏதோ ஒருநாள் பிள்ளையார் தெருவிலே பையனைப் பள்ளிக்கு அனுப்பும் கல்யாணம் ஒன்று நடந்தது. தெருவில் தூரத்தில் நின்றபடியே அந்தக் கல்யாணத் தைப் பார்க்கும் பாக்கியம் சோமுவுக்குக் கிட்டியது. பிள்ளைமார் தெருப் பணக்காரர்கள் வீட்டுப் பையன் ஒருவனை அன்று, நாள் பார்த்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிகாலை யிலிருந்து நண்பகல் வரையில் மேளக்கார ராமசாமி ஊதித் தள்ளிவிட்டான்; தவுல்காரன் தவுலைக் கையாளும் கோலாலும் மொத்தித் தள்ளி விட்டான். பொரியும் கடலையும் - இது ஒரு பதக்கு, அது ஒரு பதக்கு - கலந்து போன இடம் தெரியாமல் போய்விட்டன. இரு நூறு பேருக்கு மேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள்.

தெருவிலே தூரத்தில் இருந்தபடியே ஐந்தாறு வயசுப் பையன் ஒருவன், நாய்கள் பார்ப்பதுபோல ஆவலுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறானே, அவனைக் கூப்பிட்டு ஒரு பிடி பொரி கடலை கொடுக்கலாம் என்று கல்யாணத்திற்கு வந்திருந்த பக்கத்துக் கிராமத்து மிராசுதாரர் ஒருவர் அவனை அழைத்துக் கை நிறையப் பொரியும் கடலையும் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு என்றும் இல்லாத தன் அதிர்ஷ்டத்தைப் பாராட்டி வியந்து கொண்டே சோமு தன்னுடைய பழைய இடத்துக்குத் திரும்புகையில் கல்யாண வீட்டுக்காரர் அவனைப் பார்த்துவிட்டார். ''அந்தச் சோமுப் பயலை யாருடா இங்கே வரவிட்டது? கறுப்பன் மவன்தானேடா அவன்? ஏதாவது சமயம் பார்த்து அடிச்சுண்டு போய் விடுவானேடா! சந்தனப் பேலா எங்கே? இருக்கா...சரி... அடிச்சு விரட்டு அந்தப் பயலை!'' என்று ஊரெல்லாம் கேட்கும்படியாகக் குரல் கொடுத்தார் அவர்.

சோமு திரும்பி ஒரு விநாடி அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். ஆட்கள் யாராவது வந்துவிடும் வரையில் அங்கே காத்திருக்க அவன் தயாராக இல்லை. யாரும் தன்னை நோக்கி வருமுன் ஒரே பாய்ச்சலில் பந்தலுக்கு வெளியே போய்விட்டான். மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தான். தன் கையிலிருந்த அவர்கள் வீட்டுப் பொரியையும் கடலையையும், மண்ணை வாரி இறைப்பது போலப் பந்தலுக்குள் எறிந்தான். அவர்களுடைய சொத்தில் எதுவும் தன் கையில் ஒட்டிக்கொண்டிருப்பதில்கூட அவனுக்கு இஷ்டமில்லை போலும். கையோடு கையைத் தட்டித் தேய்த்து இடுப்பிலே கட்டியிருந்த வேட்டியிலே துடைத்துக் கொண்டான். தன்னுடைய பழைய இடத்திற்கு நகர்ந்தான்.

இவ்வளவையும் கவனித்துக் கொண்டே உட்கார்ந் திருந்த அயலூர்காரர் மறுபடியும் சோமுவைக் கூப்பிட்டு பொரியையும் கடலையையும் கொடுத்தார். தமக்குள் சொல்லிக் கொண்டார். ''கெட்டிக் காரப்பயல்! ரோஷக்காரப் பயல்! பின்னர் பெரிய மனுஷ்யன் ஆனாலும் ஆவான்! அல்லது குடித்து ரெளடியாகத் திரிந்துவிட்டு உயிரைவிடுவான். உம்... இந்தப் பயலைப் படிக்கவச்சால் உருப்படுவான்... உம்... அவனைக் கண்டாலே இப்படிப் பயப் படுகிறார்களே! பலே பயல்தான் போலிருக்கு!'' என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் அவர். ஆனால் அடுத்த இரண்டொரு வினாடிகளுக் குள்ளாகவே அந்தப் பயலுடைய ஞாபகம் அவருக்கு அற்றுப்போய்விட்டது. அதற்குள் அவரைச் சாப்பிட அழைத்துப் போய்விட்டார்கள்.

அந்தத் தெருவில் அந்த வீட்டில் விருந்து சாப்பாடு நடக்கிறது என்று தெரிந்து கொண்டு குறவர் குறத்தியர் பலர் எச்சிலை பொறுக்குவதற்கு வந்து கூடியிருந்தார்கள். தெருக்கோடியில் தெரு நாய்கள் ஏழெட்டு என்ன நடக்கிறது என்பதை அறியாதன போல, ஆனால் எச்சிலைகள் விழுகிற சப்தம் கேட்டவுடனே எழுந்து பாய்ந்து ஓடிவரத் தயாராகப் படுத்துக் கிடந்தன. சோமு, நாய்களுடைய கூட்டத்திலும் கலக்கவில்லை. குறவர் குறத்தியர் கூட்டத்திலும் கலக்கவில்லை. இரண்டும் இடையே தெரு ஓரமாக வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே கால் கடுக்க நின்று கொண்டிருந்தான் அவன்.

எவ்வளவு நேரம் சாப்பிட்டார்கள் விருந்தாளிகள்! ஒன்றரை நாழிகை நேரம் சாப்பிடும்படியாகப் பலமான விருந்து தான் போலும்! எச்சிலைகள் வந்து விழுந்த உடனே குறப் பாளையத்துக்கும் நாய் மந்தைக்கும் பாரதப் போர் தொடங்கியது. குறப்பாளையந்தான் இறுதி வெற்றி அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாரதப் போரின் சுவாரசியத்திலே ஈடுபட்டு நின்றான் சோமு.

அதற்குள் கலியாண வீட்டிலே மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கிவிட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக் காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். விருந்து சாப்பிட்ட சிரமத்தைப் பொருட்படுத்தாத சில விருந்தாளிகளும் திண்ணை யை விட்டு இறங்கி தெருவிலே நின்றார்கள். பள்ளிக்கூடத்தில் சேரவேண்டிய பையன் வந்து நின்றான். மாங்காய் மாங்காயாச் சரிகை வேலை செய்த சிவப்பு பட்டு உடுத்தியிருந்தான் அவன். மேலே ஒரு சீட்டித் துணிச்சொக்காய் - அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. அவன் தலையை படிய வாரிச்சீவிப் பின்னி லிட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்பு நூல் அலங்கரித்தது. பையனுடைய கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பதுபோல ஒரு மல்லிகைச்சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால் பெண் ஒன்று. அது அவன் அக்காளாக இருக்கும். பையன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப்போய்விட்டாள். பையன் மிரள மிரள நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான்.

கால் நடையாகவே ஊர்வலம் கிளம்பியது. பள்ளிக்கூடம் பக்கத்துத் தெருவிலேதான் இருக் கிறது. சர்வமானியத் தெருவின் மேலண்டைக் கோடியில் உள்ள மாடி வீடுதான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தின் சொந்தக்காரர், ஹெட்மாஸ்டர், பிரதம உபாத்தியார் எல்லாமே சுப்பிரமணிய ஐயர் என்பவர்தாம். அவருக்கு உதவி செய்ய இன்னோர் உபாத்தியாயரும் இருந்தார். ஆனால் அவர் அவ்வளவாக உதவி செய்தார் என்று சொல்வதற் கில்லை. சுப்பிரமணிய ஐயருடைய வீட்டு மாடிதான் சாத்தனூர்ப் பள்ளிக்கூடம். அதே வீட்டில் கீழ்ப் பகுதியில் அவர் வாசித்து வந்தார். பள்ளிக்கூடத்திலே சுமார் ஐம்பது அறுபது பையன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயசி லிருந்து பதினைந்து வயசு வரையில் இருக்கும்.

பள்ளிக்கூடத்துப் பையன்கள் எல்லோரும் அன்று தங்களுடன் வந்து சேர இருந்த புதுப் பையனைப் பார்ப்பதற்கு ஆவலாக, தெருவிலே மேளச் சப்தம் கேட்டவுடன், மாடி ஜன்னல்கள் மூன்றையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள். புதுப்பையன், பணக்கார வீட்டுப் பையன் அன்று வந்து சேரப் போகிற செய்தி காலையிலேயே சுப்பிரமணய ஐயருக்குத் தெரியும். ஆகவே அவர் பள்ளிக்கூடத்தையும் பையன்களையும் தம் உதவி உபாத்தியாயரிடம் ஒப்பித்துவிட்டுப் பிரம்பும் கையுமாக வீட்டுத் திண்ணையில் வந்து நின்றார் - புதுப் பையன் ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொண்டு.

ஊர்வலம் மாடி வீட்டு வாசலில் வந்தவுடன் திண்ணையிலிருந்து சுப்பிரமணிய ஐயர் இறங்கி ஆளோடியில் இரண்டடி முன்வந்து, ''வா! ராமசாமி, வா!'' என்று பையனின் தகப்பனை வரவேற்றார். அந்தப் பையனின் தகப்பன் ராமசாமியும் பல வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய ஐயரிடம் படித்தவன்தான். கையில் சந்தனப் பேலாவை எடுத்து அவருக்குச் சந்தனம் கொடுத்தார் ராமசாமி. பிறகு ஒரு வெற்றிலைத் தட்டில் நிறைய வெற்றிலையும் பாக்கும் மஞ்சளும் வைத்து அதிலே ஒரு ஜோடி சேலம் பட்டுக்கரை வேட்டியும் சாத்தனூர்ப் பட்டுப் புடவை ஒன்றையும் ரவிக்கை ஒன்றையும் வைத்து அவரிடம் கொடுத்தார். வாத்தியார் ஐயா தட்டுடன் அதை வாங்கித் திண்ணையில் தம் பக்கத்தில் வைத்துக் கொண்டு பையனையும் பையனின் தகப்பனாரையும் ஆசீர்வதித்தார். புதுப்பையனும் அவனுடைய தகப்பன் ராமசாமியும் சுப்பிரமணிய ஐயரை விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். மீண்டும் ஒருமுறை அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சந்தனமும் சர்க்கரையும் வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டன. வாத்தியார் ஐயாவால் அல்ல - பையனின் செலவில் அவரால்தாம். பிறகு பள்ளிக்கூடத்துப் பையன் களுக்கென்று கொண்டு வரப்பட்டிருந்த பதக்குப் பொரியும், கடலையும் மாடிக்குக் கொடுத்தனுப் பப்பட்டன. சற்று நேரத்துக்கெல்லாம் மாடி ஜன்னல்கள் ஒன்றிலும் பையன்கள் யாரும் இல்லை என்பதில் ஆச்சரியம் என்ன?

இவ்வளவையும் கவனித்துககொண்டே சோமு நெருங்கி வரப் பயந்தவனாக எதிரே இருந்த வேலியோரமாக ஒரு பூவசர மர நிழலில் நின்றான். பூவரச மரக்கிளை ஒன்றிலிருந்து அவன் தலைக்கு நேரே நூல் விட்டுக் கொண்டு ஒரு கம்பளிப் பூச்சி ஊசலாடிக்கெண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை.

புதுப் பையனைப் பள்ளியில் சேர்த்துவிட வந்தவர்கள் எல்லோரும் அரை நாழிகை நேரத்திற்குள் கிளம்பி விட்டார்கள். புதுப் பையனை தம்முடன் அழைத்துக் கொண்டு சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார். நடுப்பகல் நல்ல வெயில் தகித்துக் கொண்டிருந்தது. தெருவிலே ஜனநடமாட்டமே இல்லை. வேலையுள்ளவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டார்கள். வேலையில்லாமல் வீட்டிலே தங்கியிருந்தவர்கள் உண்ட களை தீரப்படுத்து உறங்கிக் கொண்டிருந் தார்கள். சோமு என்கிற மேட்டுத் தெரு பையனைத் தவிர தெருவிலே அப்பொழுது யாருமே இல்லை. அவன் மாடிப் பள்ளிக்கூடத்தண்டைபோய் மாடியை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வெகுநேரம் நின்றான். சற்று நேரம் கழித்து வெயில் அதிகமாக இருக்கிறதே என் நிழலில், மாடி வீட்டின் நிழலில், மாடிப் பள்ளிக்கூடத்தின் நிழலில் ஒதுங்கி நின்றான். மாடியிலிருந்து என்ன என்னவோ சப்தங்கள் ஒலித்தன. பையன்கள் எல்லோரும் ஏககாலத்தில் சந்தை வைத்து உரக்க என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்லிக் கொண்டிருந் தார்கள் என்பது சோமுவின் காதில் தெளிவாக விழவில்லை. உபாத்தியாயரும் உதவி வாத்தியாரும் நடு நடுவே உரத்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய குரல்தான் சோமுவின் காதுக்கு எட்டியது. வார்த்தைகள் தெரியவில்லை. சில சமயம் ஒரு பையனுடைய பெயரைச் சொல்லித் தலைமை உபாத்தியாயர் கூப்பிட்டார். அந்தக் கூப்பாட்டிற்கு இரண்டொரு வினாடிகளுக்கப பிறகு, 'ஐயோ அப்பா! ஸார் ஸார்! வேண்டாம் ஸார்! இனிமேல் இல்லை ஸார்!'' என்று பையன் யாராவது அலறுவது சோமுவின் காதில் விழுந்தது. அதற்கடுத்த வினாடி பலர் 'கலகல' வென்று பேசுவதும் சிரிப்பதும் அவன் காதில் விழுந்தன. அந்தப் பள்ளிக்கூடத்துச் சப்தம் முழுவதுமே இசைந்து இன்ப ஒலியாகச் சோமுவின் காதிலே விழுந்தது.

சாத்தனூர் மாடிப் பள்ளிக்கூடத்து நிழலிலே சுவரில் சாய்ந்து கொண்டு நின்றபடியே பகற்கனவுகள் காணத் தொடங்கினான் சோமு. அவன் அப்பொழுது கண்ட கனவுகளை விவரிப்பதென்பது ஆகாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். அவனுடைய வாழ்க்கையிலே முதல் ஆசை, முதல் லக்ஷ்யம் உருவாகிவிட்டது. அவ்வளவு சிறு வயசிலேயே அவன் தனகென்று ஒரு லக்ஷ்யத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டான். பள்ளியிலே தானும் படித்துப் பெரியவனாகி...
படித்துப் பெரியவனானபின் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் அவன் நின்றபடியே கண்களை மூடிவிட்டான். பகற்கனவுகளிலிருந்து உண்மைக் கனவுகளுக்குத் தாண்டிவிட்டான்.

இப்படிச் சுவரில் சாய்ந்தபடியே நின்றுதூங்கிக் கொண்டிருக்கும் பையனைக் கண்டால் எந்த உபாத்தியாயரானாலும் என்ன செய்வாரோ அதைத் தான் அரை நாழிகை நேரம் கழித்துக் கீழே இறங்கி வந்த சுப்பிரமணிய ஐயர் செய்தார். தம் பள்ளிக் கூடத்தைச் சேர்ந்த சோப்பேறிகளில் அவனும் ஒருவன் என்று அவர் எண்ணியதில் தவறில்லை.

சோமுவின் இன்பக் கனவுகளைப் கிழித்துக் கொண்டு 'சுளீர்' என்று ஒரு சப்தம் கேட்டது. 'பளீர்' என்று ஓர் அடி முதுகிலே விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டு சோமு எதிரே பிரம்பும் கையுமாக நின்ற சுப்பிரமணிய ஐயரை ஒரு தரம் பார்த்தான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டதே தவறு. பள்ளிக்கூடத்தின் நிழலிலே ஒதுங்கிச் சிறிது நேரம் நின்றதுகூடத் தவறு என்று ஒப்புக்கொண்டவன் போல, வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல, 'ஜிவ்'வென்று பாய்ந்து ஓடி, சர்வமானிய அக்கிரகாரத் தெருத் திரும்பி மறைந்துவிட்டான்.

தம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அல்ல அவன் என்று சுப்பிரமணிய ஐயருக்குத் தெரிய இரண்டு வினாடி நேரம் ஆயிற்று. அதற்கு இரண்டு விநாடி கழித்துத்தான் அப்படித் தம்மிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடிப்போனது மேட்டுத் தெருக் கறுப்பன் மகன் சோமு என்பதை உணர்ந்தார். முதலில் இவர் அதைக் கவனித்திருந்தாரானால் அவனை அடித்தே இருக்க மாட்டார். அவனிடமும் கறுப்ப முதலியிடமும் உபாத்தியார் சுப்பிரமணிய ஐயருக்கு எப்பொழுமே கொஞ்சம் அநுதாபம் உண்டு. அவர் 'உடையவர்கள்' கோஷ்டியைச் சேர்ந்தவர் அல்ல. ஊரில் மற்றவர் களெல்லோரும் கறுப்பன் மகன் என்பதற்காகச் சோமுவை எப்படி நடத்தினார்கள், என்ன என்ன சொன்னார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவனை அவர் அப்படி அடித்திருக்க வேண்டியதில்லை! அடி என்னவோ அவரையும் மீறியே பலமாகத்தான் விழுந்துவிட்டது.

சிரித்துக் கொண்டே தம் வீட்டுக்குள் போனார் சுப்பிரமணிய ஐயர். ''அடியே!'' என்று தம் மனைவியைக் கூப்பிட்டார். ''இதோ பார்!... அந்த மேட்டுத் தெருக் கறுப்பன் பிள்ளை சோமு எப்பவாவது இந்தப் பக்கம் வந்தானானால் சாதம் கீதம் மிச்சம் இருந்தால் போடு! பாவம்; சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படறதுகளோ என்னவோ!'' என்றார்.

''வள்ளியம்மை அந்த ரங்கராயர் ஆத்திலே வேலை செய்கிறாள். சாப்பாட்டுக்கு ஒரு குறைவும் வைக்க மாட்டார் அந்த ராயர். ஆனால் இப்போ என்ன அந்தப் பயலைப்பற்றி ஞாபகம் வந்தது உங்களுக்கு?'' என்று விசாரித்தாள் அவர் மனைவி ஜானகியம்மாள்.

சற்றுமுன் நடந்ததைச் சொன்னார் சுப்பிரமணிய ஐயர். அவர் சிரித்துக் கொண்டேதான் சொன்னார் என்றாலும், அனாவசியமாக ஒரு சிறு பையனை அடித்து விட்டதைப் பற்றி எவ்வளவு வருத்தப்பட்டார் என்பது அவர் சொன்ன மாதிரியிலிருந்தும் குரலிலிருந்தும் நன்கு தெரிந்தது.

''ஐயோ பாவம்!'' என்றாள் ஜானகியம்மாள். சற்று நேரம் கழித்து அவள், ''நல்ல வாத்தியார் வேண்டியிருக்கு! எப்போ பார்த்தாலும் பிரம்பும் கையுமக!... இப்படிக் கொடுங்கோ பிரம்பை - அதை முறித்து அடுப்பிலே போட்டுவிடறேன்!'' என்றாள்.

''கண்ணை மூடிண்டு எதிர்ப்படறவா எல்லோரையும் என்னிக்காவது ஒருநாள் இந்தப் பிரம்பால் வெளுத்து வாங்கி விட்டால் தேவலை என்றிருக்கிது எனக்குச் சில சமயம்'' என்றார் சுப்பிரமணிய ஐயர்.

''ஆத்திலே ஆரம்பிச்சுடாதேயுங்கோ! மாடிக்குப் போங்கோ!'' என்றாள் அவர் சகதர்மிணி.

''ஆத்திலே ஆரம்பிக்கிறதாகத்தான் உத்தேசம்! அதுகாகத்தான் இப்போ கையோடு பிரம்பைக்கூடக் கொண்டு வந்திருக்கேன்'' என்று சொல்லிக் கொண்டே சிரித்துக் கொண்டு தன் மனைவியை அணுகினார் சுப்பிரமணிய ஐயர்.

''எங்கள் வாத்தியார் ஐயாவுடைய சமத்தைப் பார்த்து யாராவது நாப்பு காட்டப் போறா! அசடு வழியாம போங்கோ'' என்று சொல்லிவிட்டு ஜானகியம்மாள் சமையலறைக்குள் போய்விட்டாள்.

சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார்.

க.நா.சுப்ரமண்யம்
Share: 




© Copyright 2020 Tamilonline