Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
"பல்கலைக் கழகக் கல்வியை விட அனுபவம் சிறந்தது"! - காஞ்சனா தாமோதரன்
- மனுபாரதி|மே 2003|
Share:
Click Here Enlargeகாஞ்சனா தாமோதரன் - இந்தப் பெயர் தமிழ் எழுத்துலகில் கடந்த ஆறேழு வருடங்களாகப் பிரசித்தி பெற்று வரும் பெயர். நம் தென்றல் வாசகர்களுக்குக் கூட இப்பெயர் நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது. இவர் எழுதிய 'நதி' என்ற சிறுகதையும், 'வரம்' சிறுகதைத் தொகுப்பிற்கான விமர்சனமும் தென்றலில் பிரசுரமாயிருக்கின்றன.

1998 முதல் தமிழில் கதை, மற்றும் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர், கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியிலும், கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். தவிரவும், இவர் தமிழில் எழுதிய சிறுகதைகள் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இவருடைய சிறுகதைகள் 'வரம்' என்ற தொகுப்பாக 2000ல் வெளிவந்தன. தமிழ்நாடு மற்றும் ஐரோப்பாவில் தமிழ் சிறுகதைத் தொகுப்புகளில் இவருடையதும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் வார இதழ் கல்கியில் 2001-2002-இல் "இக்கரையில்.." என்ற தொடர்கதையை எழுதி நிஜமான அமெரிக்க வாழ்க்கையின் பல கூறுகளை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இந்தக் காரணங்களால் மட்டும் தென்றல் வாசகர்களுக்கு இந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்த நினைக்கவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பிறந்து, ஐ.ஐ.டி-யில் பொறியியல் படிப்பு, அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பொறியியல் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு, தொடர்ந்து பல வருடங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாகம், இப்பொழுது சுயதொழில்கள் - என்று இந்தியாவிலிருந்து அமெரிக்கக் கனவுகளோடு வருபவருக்குச் சாத்தியமான பயணப்பாதைகளில் ஒன்றில் பயணித்து வந்த இந்த இருபத்தி மூன்று வருட அமெரிக்கவாசி எழுத்தாளாராய்ப் புதிய பரிமாணம் பெற்றிருக்கிறார் என்பதுதான் தென்றல் வாசகருக்கு அறிமுகப்படுத்தத் தோன்றிய முதல் காரணம்.

வாஷிங்டன் அருகே கணவர் டாக்டர் தாமோதரனுடனும், மகளுடனும் வசித்து வரும் இவர், எழுத்தைத் தவிர இன்னும் நிறைய நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பார்க்க மிகவும் எளிமையாய், நம்மைப் போன்ற ஓர் அமெரிக்கவாசி என்று தோன்றும்படி தான் இருக்கிறார். எப்பொழுதும் ஒரு துடிப்பும் துள்ளலும் தெரிகிறது இவர் குரலில். தென்றலுக்கான பேட்டி என்றவுடன் "என்னைப் பெரிய மனுஷியாக்கக் கூடாது" என்ற அன்புக்கட்டளையுடன் ஒத்துக்கொண்டார். நம் சாதாரண நிலையிலிருந்து மேலெழ ஒரு அகத்தூண்டலையும் (Inspiration), நம்பிக்கையையும் பெறத்தக்க இவரது வாழ்க்கையிலிருந்து சில சுவாரஸ்யமான கணங்களை நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

கே : முதலில் பாராட்டுக்கள்.. கடந்த காலத்தை அசை போடும்போது என்ன உணருகிறீர்கள்?

ப : நன்றி. இப்போதுதான் இந்த மண்ணில் கால் பதித்தது போலிருந்தது. 23 வருடங்கள் ஓடினதே தெரியாமல், ஆயுளில் பாதிக்கும் மேல் இங்கே கழிந்து விட்டது. செய்ய வேண்டியது எல்லாவற்றையும் செய்து முடித்தது போலவும், அதே சமயத்தில் இன்னும் செய்ய விரும்புவது நிறைய இருப்பது போலவும் உணருகிறேன். நிறைவும் தேடலும் கலந்த மனநிலை.

கே : எல்லாருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைந்தது பற்றிச் சொல்ல நிச்சயம் ஒரு கதை இருக்கும். நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் நீங்கள். ஐ.ஐ.டிக்கும் அமெரிக்காவிற்கும் வந்தது பற்றிய கதை...

ப : நம்மூர் கல்வித் திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இளங்கலைப் பருவத்திலேயே தொழிற்படிப்பை நிச்சயம் செய்து விடுகிறோம். கணக்கு, வேதியியல், ரசாயனம் எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்ததால் பொறியியல் போகலாமே என்று தோன்றியது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன், பெண்கல்வியைப் பெரிதாக நினைக்காத என் சமூகப் பின்னணியில், இது ஒரு பெரிய மாற்றம்தான் - என் குடும்பத்தில் எதிர்ப்புகள் இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி, சிபாரிசும் பொன்முடிப்பும் தேவைப்படாத ஐ.ஐ.டி.யில் சேர முடிந்தது. ஆனால், படிப்பை முடித்ததும் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் காலத்தில், பெண் பொறியியலாளர் என்று வெளிப்படையாகவே ஒதுக்கி வைப்பதும் நடந்தது. (இப்போது இந்த நிலை மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்). தாயகத்திலேயே தங்கி வேலை பார்ப்பது என் முதல் விருப்பமாகவும், அமெரிக்காவில் மேல்படிப்பு என்பது இரண்டாவது விருப்பமாகவும் இருந்தன. நீங்களே ஊகித்திருப்பீர்கள். இரண்டாம் விருப்பம்தான் நிறைவேறியது.

இங்கே வந்து பொறியியல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு, வேறு துறையிலும் தேர்ச்சி பெற்று என் கல்வியறிவை விரித்துக் கொள்ள விரும்பினேன். அதனால், வணிக நிர்வாகத்தில் பி.எச்டி.யைத் தொடர்ந்தேன். வணிகம்-பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பாடங்கள் தவிர, சமூகவியல், உளவியல், விஞ்ஞான அறிதலின் தத்துவம், கணினியில் செயற்கை அறிவு, பொதுநல விதியமைப்பு என்று பல்துறைப் பாடங்கள் படித்தது என் எல்லைகளை விரித்த முக்கியமான கல்வி அனுபவம். தொடர்ந்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை.

கே : பன்னாட்டு நிறுவன நிர்வாக அனுபவம் எப்படியிருந்தது? எதிர்ப்புகள் ஏதாவது சந்தித்தீர்களா? சுவாரஸ்யமான அனுபவங்கள்..?

ப : பல்கலைக்கழகக் கல்வியை விட, வேலை செய்வதன் மூலம் கற்றுக் கொண்டது அதிகம். அந்த அனுபவம் விலைமதிப்பற்றது.

தொழில் சூழலில் எதிர்ப்புகள் பற்றிக் கேட்டீர்கள். போட்டிகள் நிறைய உண்டு. துரிதமாகப் பதவி உயர்வுகள் கிடைத்து முன்னேறும் போது, அதற்கு நம் திறமையைத் தவிர மற்ற எல்லாக் காரணங்களையும் கற்பிக்கப் பார்ப்பது மனித இயல்பு - எல்லாத் துறை களிலும் நடப்பது இது. பெண், அதுவும் வெள்ளைத் தோல் இல்லாத பெண் என்றால் கேட்க வேண்டுமா? பெண்கள் இரண்டு மடங்கு உழைத்துத் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டியிருந்தது என் காலத்திய யதார்த்தம்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், நம் திறமை, உழைப்பு, நேர்மை மேல் நமக்கு நம்பிக்கையிருப்பதே முக்கியம் என்ற மனோபலம் ஏற்படுகிறது. இது அகங்காரம் இல்லை, தன்னம்பிக்கை, சுயமரி யாதை. நான் சந்தித்த எதிர்ப்புகளும் போட்டங்களும் என்னை வளர்ப்பதற்கே உதவின, தளர வைக்கவில்லை. தொழில் முறையில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை வைத்து ஒரு தலையணைப் புத்தகமே எழுதி விடலாம். கலி·போர்னியா வாழ் 'ஹிஸ் பானிக்' மக்களைப் புரிந்து கொள்வதற்காகப் பல வாரங்கள் அங்கு தங்கி, அவர்கள் வீடுகளுக்குச் சென்று பேசிப் பழகியது ஒரு வித்தியாசமான அனுபவம். பல கலாச்சாரப் பின்னணிகளையும் சார்ந்த மக்களைச் சந்திக்கையில், நமக்கும் அவர்களுக்குமிடையே வேறுபாடுகளை விட ஒற்றுமைகளே அதிகம் இருப்பது போல் தெரிகிறது.

கே : வேலை, குடும்பம் - இரண்டையும் எப்படிச் சமாளித்தீர்கள்?

ப : நான் வேலை பார்த்த இரண்டு பெரிய நிறுவனங்களுமே, பெண்கள் வேலை பார்க்கச் சிறந்த நிறுவனங்கள் என்று அமெரிக்காவின் '·பார்ச்சூன்' வர்த்தகப் பத்திரிகை பட்டியலிடும் நிறுவனங்கள். வேலை பார்ப்பவர்களுக்குக் குடும்ப அக்கறையும் உண்டு என்பதைப் புரிந்து, அதற்கேற்ற வசதிகளை முடிந்த அளவு செய்து தரும் நிறுவனங்கள். கணவரின் ஒத்துழைப்பும் பெரிய உதவி. இவையெல்லாம் இருந்தும் கூட, குடும்பத்தையும் வேலையையும் சமநிலையில் நடத்திக் கொண்டு போவது எளிதில்லை. குழந்தையை அடுத்தவர்கள் பராமரிப்பில் விட்டுப் போவதில் எங்கள் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கிடையாது.

மகளின் சிறுகுழந்தைப் பருவத்தில், எங்கள் நிறுவனங்களின் '·ப்ளெக்ஸ்-டைம்/·ப்ளெக்ஸ்-லொக்கேஷன்' சலுகைகளைப் பயன்படுத்தி, நாங்களே அவளைக் கவனித்துக் கொண்டோம். எங்கள் இருவரின் வேலைகளுமே வெளியூர்/வெளிநாட்டுப் பயணங்கள் அடங்கியவை; ஒருவர் வெளியூருக்குப் போனால் மற்றவர் அப்போது பயணம் செய்யாமல் மகளுடன் இருக்கும்படித் திட்டம் போட்டுக் கொள்வோம். இந்த மாதிரி பல விஷயங்களில் அனுசரித்துப் போனதால்தான், பலவும் சாத்தியமாயிற்று. கூட்டு முயற்சி வாழ்க!

கே : சாதாரண நிலையில் இருந்து மேலெழுவது என்பது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. குடும்பம், வேலை இவற்றைச் சுற்றியே சுழன்ற உங்கள் கவனம் எழுத்து பக்கம் திரும்பியது எப்படி? உங்கள் படைப்புக்குத் தூண்டலாய் இருந்தது எது?

ப : இதற்குச் சற்றே பெரிய பதில்தான் சொல்ல வேண்டும். சிறு வயதிலிருந்தே நான் தீவிர வாசகி. கல்வி, குடும்பம், தொழில் முதலான பொறுப்புகளின் நடுவிலும் வாசிப்பை இழக்கவில்லை; ஆனால், எழுதுவதற்கு அப்போது நேரம் இருந்ததில்லை. பிறகு, இரண்டு மாறுதல்கள் நிகழ்ந்தன. முதலாவதாக, எங்கள் மகள் தன் காலிலேயே நிற்க விரும்பும் பருவம் வந்ததும், குழந்தைப் பராமரிப்புக்காக நான் ஒதுக்க வேண்டிய நேரம் குறைந்தது.

இரண்டாவது முக்கியமான மாறுதல், இணையத்தில் தமிழ் என்பது. முத்து நெடுமாறனின் ‘முரசு அஞ்சல்’ போன்ற தமிழ் மென்பொருள்கள் அப்போது பரவலாகப் புழங்க ஆரம்பித்திருந்தன. இணையத்தில் 'ஆறாம்திணை', 'அம்பலம்', 'திண்ணை' போன்ற தமிழ்ப் பத்திரிகைகள், மற்றும் நாளிதழ்கள், விவாதத் தளங்கள் தலை காட்டத் துவங்கியிருந்தன. ஐந்தாறு வருடங்களுக்கு முன், கலி·போர்னியா பாலாஜியும் சிங்கப்பூர் ராஜாராமனும் சேர்ந்து தொடங்கிய இணைய இலக்கிய விவாதத் தளத்தின் மூலமாக, இன்று 'தென்றல்' ஆசிரியராயிருக்கும் மு.மணிவண்ணன், அட்லாண்டா பெ. சந்திரசேகரன், நியூ ஆர்லீன்ஸ் இரமணீதரன், கலி·போர்னியா மனுபாரதி... (ஒரு புன்சிரிப்பு) ஆமாம் நீங்களும் தான்..., மற்றும் கோகுல், அருளரசன் (ராஜன்), உதயா, பாலாஜி, வாஷிங்டன் ராம்ஜி -சுச்சு தம்பதியர், சிக்காகோ சந்திரசேகர், நியூஜெர்சி பத்மனாபன் கணேசன், நியுமெக்சிகோ வாசன், மலேசியா ஜெயபாரதி, சென்னை வாஞ்சிநாதன், டோக்கியோ வெங்கட் என்று பலரோடும் இலக்கியக் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிந்தது. குறிப்பாக மணிவண்ணன், சந்திரசேகரன், அருளரசன், ஜெயபாரதி, வெங்கட் ஆகியோருடன் பழந்தமிழிலக்கியம் பற்றிப் பேசியது என் இளவயது இலக்கிய ஆர்வத்தை மீட்டுத் தந்தது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அப்பொழுது புத்தகங்கள் நிறைய சேகரிக்கும் பழக்கம் வந்தது. எங்கள் வீட்டில் சங்க கால இலக்கியத்திலிருந்து இன்றைய எழுத்து வரை ஒரு சிறு தமிழ் நூலகமே இருக்கிறது. இணையம் மூலம் அறிமுகமான அமெரிக்கவாழ் தமிழ் நண்பர்களுடன் இன்றைய இலக்கியப் புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டது தற்காலத்து எழுத்துலகுடனான (Contemporary Literature) தொடர்பை வளர்த்தது. இப்படி என் தொடர்ச்சியான வாசிப்பு, இணையத் தமிழ் நண்பர்களின் இலக்கிய ஆர்வம், இணையம்-தமிழ்மென்பொருள் தொழில்நுட்பம் எல்லாமாய்ச் சேர்ந்தே என்னை எழுத்தாளராக்கின என்று நினைக்கிறேன். இக்கரையிலிருந்து கொண்டு தமிழில் எழுதத்தொடங்கியபின் அந்த எழுத்து என்னைத் தாயகத்துடன் பலமாகப் பிணைக்கிறது என்பது நான் கண்ட நிதர்சனம். அதுவே தொடர்ச்சியான என் எழுத்திற்கு ஊக்கமும் கூட.

கே : உங்களுடைய சமீபத்திய தொடர்கதையான - "இக்கரையில்.." - அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டது என்று தெரியும். இப்பொழுது நாவலாகவும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தென்றல் வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகம்...

ப : இரண்டு பெண்களின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதை. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று கேட்டுக் கொள்கிறாள் கிராமத்துப் பூர்வீகக்காரி.

இன்னொருத்தி அமெரிக்காவும் குடும்ப அமைப்பும் தனக்கு ஏன் ஒத்து வரவில்லை என்று தத்தளிக்கிறாள். இருவரின் வருங்காலம் பற்றிய முடிவுகளும் அவர்களது கடந்த காலத்திலிருந்து துவங்குகின்றன. அதை உணரத் தொடங்குவது தான் கதை. திடீர்த் திருப்பங்களோ முழுமை யான முடிவோ கதையில் கிடையாது. சிறுசிறு அனுபவங்களின் (vignettes) மூலம் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

கே : இதற்கான வரவேற்பு எப்படி இருந்தது அங்கே? வந்த சுவாரஸ்யமான விமர்சனங்கள்? கடிதங்கள்?

ப : கதை கொஞ்சம் கனமாக இருக்கிறதே, வடிவம் வித்தியாசமாக இருக்கிறதே, வாசகர் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற கவலைகளை மீறி, இதைத் தொடராக வெளியிட்ட 'கல்கி' ஆசிரியர் திருமதி சீதாரவிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தமிழக விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை எழுதியிருக்கிறார்கள். 'அமெரிக்க, இந்தியத், தமிழ்க் கலாச்சாரங்களுக்கு நடுவில் நிற்கும் கதையை வாசிப்பது நல்ல அனுபவம்'; 'அமெரிக்கவாழ் எழுத்தாளர் கதையின் மண் வாசனை சுகமானது'; 'இலக்கிய தரமான தொடர்'; 'கதை புதிது, களம் புதிது, கனமும் புதிது' - இவ்வாறு தமிழக வாசகர் கடிதங்கள் பலதரப் பட்ட வை. கதையிலிருந்து மேற் கோள் காட்டும் பல கடிதங் கள் வரப்பெற்ற 'கல்கி'-யின் ஆசிரியர், இது வாசகர்கள் ரசித்துப் படித்திருப்பதைக் காட்டுவதாகச் சொன்னார்.

கே : அமெரிக்கவாழ்த் தமிழர்களுக்கு எப்பொழுது எழுதப் போகிறீர்கள்? தமிழ்நாட்டு மக்களை விட இங்கிருப்பவர்களால் உங்கள் கதைக் களங்களை இன்னும் எளிதில் தொடர்பு படுத்திப் பார்க்க முடியும் இல்லையா?

ப : உண்மைதான். தமிழக வாசகர்களுக்குக் கதைக் களங்கள் அந்நியமானதால் சிறு விலகலுக்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால், சில அடிப்படை மனிதப் பிரச்சினைகள் பொது வானவை. மேலும், இன்றைய உலகக் குக்கிராமத்தில், அமெரிக்கவாழ்த் தமிழருக்கும் தமிழகவாழ்த் தமிழருக்குமிடையே எந்தெந்தத் தளங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம். இணைய இதழ்கள், வாஷிங்டன் 'முல்லை' இதழ் முதலியவற்றில் அமெரிக்கவாழ்த் தமிழ் நண்பர்கள் என் எழுத்தை வாசித்திருக்கிறார்கள். 'தென்றல்' இதழிலும் விரைவில் எழுதலாம்.
கே : தினமணி நாளிதழில் அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். என்னென்ன விஷயங்களைப் பற்றி எழுதிவருகிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்லமுடிகிறதா? வாசக வரவேற்பு எப்படி இருக்கிறது?

ப : தினமணி நாளிதழில் அமெரிக்கப் பொருளாதாரம், செப்டெம்பர் 11 பயங்கரவாதம் மற்றும் பின்விளைவுகள், இந்திய வம்சாவழியினரான வி.எஸ்.நைப்பாலுக்குக் கிடைத்த நோபெல் இலக்கிய விருது, செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர்த் தடங்கள் கண்டு பிடித்தது, தமிழகக் காவேரிப்பகுதி வறட்சிப் பிரச்சினை என்று நான் எழுதிய பலவகைக் கட்டு ரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. 'கணையாழி', 'திண்ணை' இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 'காலம்' இதழில் 'என்ரான் ஊழல் விவகாரம்' பற்றிக் கட்டுரை எழுதினேன்.

சமீபத்தில் ஈராக் போர் பற்றிய மூன்று செய்திக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கருத்துக ளையோ தகவல்களையோ சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குள்ள நடப்புகளையும், இந்திய மண்ணின் பிரச்சனைகளையும், பல வருடங்களாக இங்கு வசிப்பவர் எழுதும் போது வரும் பார்வையே வேறு என்று தமிழக வாசகர் கள் எழுதுகிறார்கள். விஷயத்தின் சாரம் நீர்த்துப் போகாமல், ஒற்றைப்படை யாய் ஆக்காமல் அதன் பல முகங்களையும் விளக்கி, எளிய தமிழில் சொல்லுவது பலருக்கும் பிடித்திருக்கிறது. காத்திர மான கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் மட்டும்தான் வரவேண்டுமா என்ன?

கே : அதே தினமணியின் சிறுவர் இதழான சிறுவர் மணியில் ஒரு போட்டி நடத்தியதாக கேள்விப்பட்டோம். அந்த அனுபவம் பற்றி... தமிழ் நாட்டுச் சிறார்கள் தமிழில் காட்டும் ஆர்வம் பற்றி...

ப : சிறுகதைப் போட்டி வைத்தோம். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரிடமும் நல்ல வரவேற்பு. சிறுவர்மணி நகரத்து மத்தியவர்க்கத்திடம் மட்டுமல்லாமல், கிராமத்துச் சிறுவர்கள், பொருளாதார அடித்தட்டுகளில் உள்ளவர்கள் என்று சமூகத்தின் பலதளத்து மக்களிடமும் போய்ச் சேர்கிறது. அதற்கு ஏற்றது போல், வந்திருந்த கதைகளும் வித்தியாசமாய் இருந்தன. அறிவியல் கதையிலிருந்து பேசும் மிருகங்கள் உள்ள கதை வரை பல வகையிலான கதைகள். வறுமை, பள்ளிப் பாடச் சுமை, பள்ளிக்கூடக் குழந்தைகளுக்குள் போட்டி பொறாமை, பெற்றோர்கள் குழந்தைகளைப் படிப்புக்காகப் படுத்தும் பாடு என்பன போன்ற கருக்களைச் சுற்றி நிறைய கதைகள் வந்திருந்தது இவர்களின் உலகத்தை ஓரளவு படம் பிடித்துக் காட்டுகிறது. போட்டியில் பங்கு பெற்ற சிறுவர் சிறுமியர் எல்லாருக்கும் ஆறுதல் பரிசு அனுப்பியிருந்தோம். பதில் கடிதங்கள் எழுதிய சிறார்கள் நன்றியுடன் சேர்த்துத் தங்கள் வாழ்க்கை பற்றியும் கோடிட்டுக் காட்டியிருந்தது மனதை நெகிழ வைத்தது. வாழ்வின் அழுத்தங் களுக்கிடையேயும், தமிழில் எழுதும் ஆர்வம் இவர்களுக்கு இருக்கிறது. தமிழில் எழுதுவதும் வாசிப்பதும் இளைய தலைமுறையினரிடம் குறைந்து விட்டதாய் வரும் செய்திகளின் நடுவில், இந்தச் சிறுவர் சிறுமியர் இருப்பது ஆறுதலான விஷயம். தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

கே : தமிழ்நாட்டில் இப்பொழுது எழுத்துலகம் எப்படி இருக்கிறது? உங்களுக்கு அறிமுகமான பதிப்பகம், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி...

ப : கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் பல தலைமுறை எழுத்தாளர்களையும் கலைஞர் களையும் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி.

எழுதுபவர்கள் உற்சாகமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புத்தகங்களின் பதிப்புத் தரம் உயர்ந்திருக்கிறது. புத்தகச் சந்தையின் பல்வகைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பல பதிப்பகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எழுத்தாளர்களும் விருந்தினராய்ப் பங்கு பெறுகிறார்கள். சென்ற முறையும் இந்த முறையுமாய் நான் பங்கெடுத்த இலக்கியக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் நிறைந்து வழியும் அரங்குகளையே பார்க்கிறேன். இந்த வருடத்தியப் புத்தகக் கண்காட்சியில் திருவிழாக் கூட்டம். விற்பனைத் தொகை கோடிகளில் பேசப்பட்டது. ஜோதிடம், ஆன்மீகம், சமையல், சுய உதவிப் புத்தகங்கள் நிறைய விற்கிறதாம். அடுத்ததாய்த் தற்கால இலக்கியப் புத்தகங்களாம். தற்கால இலக்கியப் புத்தகங் களைப் பலரும் படிக்க ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி. ஆனாலும், முன்பைவிடப் பரவலாய் பலருக்கும் கல்வி போய்ச் சேரும் இந்தக் காலத்தில், அந்த விகிதத்துக்கு ஏற்றது போல் தரமான தமிழ் வாசிப்பும் எழுத்தும் கூடியிருக்கிறதா என்பது இன்னும் கேள்விக்குறி தான்.

கே : உங்கள் நவீன தமிழிலக்கிய ஆங்கில மொழியாக்கத் திட்டம் பற்றி... அதன் நோக்கம், தற்போதைய நிலை...

ப : தமிழகத்தில் வெளிவந்த நவீன சிறுகதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். பரிந்துரைக்கும் குழு, தேர்ந் தெடுக்கும் குழு, மொழிபெயர்ப்புக் குழு உள்படத் திட்டத்தின் அங்கத்தினர்கள் தமிழரும் தமிழறிந்த அமெரிக்கரும். முதல் கட்டமாக, தமிழக எழுத்தாளர்களும் விமரிசகர்களுமாகச் சுமார் நானூறு கதைகளைப் பரிந்துரை செய்தார்கள். அவற்றிலிருந்து சில கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அடுத்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

சிக்காகோ பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் (அமரர்) நார்மன் கட்லர் இந்தப் பணிக்காகச் செய்த உதவிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

கே : ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் திட்டம் ஏதாவது....

ப : நல்ல புத்தகங்கள் சில மனதில் உண்டு. காப்புரிமையுள்ள எழுத்தாளர்களின் சட்டபூர்வமான சம்மதம் கிடைத்தால் இது சாத்தியமாகக் கூடும்.

கே : உங்கள் தொடர்ந்த பங்களிப்பு இனி எழுத்தில் எப்படி இருக்கும்? எதிர்காலத் திட்டங்கள்...?

ப : திட்டங்களென்று எதுவும் கிடையாது. நேரத்தைக் கோரும் பொறுப்புகள் பல இருந்தாலும், என் வாழ்வில் தமிழ் எழுத்துக்கும் தொடர்ந்து இடமிருக்கும் என்று நம்புகிறேன்.

கே : எழுத்து தவிர நீங்கள் சமூக சேவைகளையும் புரிந்து வருவது தெரியும். விளம்பரப்படுத்த என்று கேட்கவில்லை... ஆர்வத்தில் கேட்கிறோம். அதைப் பற்றி சொல்லுங்கள். என்னென்ன செய்கிறீர்கள்? யாருக்கு?

ப : ஆர்வத்துக்கு நன்றி. அதிக வாய்ப்புகள் இல்லாத கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி/முன்னேற்றம் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். கிராமத்துப் பூர்வீகமுள்ள, பெரிய நகரத்தில் வாழாத எனக்கு, அந்தக் காலத்தில் ஐ.ஐ.டி. என்று ஒன்றிருப்பதே தற்செயலாகத்தான் தெரிய வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது என்கிறார் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரும் என் முன்னாள் பேராசிரியருமான முனைவர் அனந்த். நம் கிராமங்கள் பல வகையிலும் முன்னேறியிருந்தாலும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். தேசத்தின் மக்கள் தொகையில் பெரும்பகுதி இன்றும் கிராமங்களில் தான் வாழ்கிறது எனும்போது, இது முக்கியமாகிறது.
தன்னலம் இல்லாமல் எனக்கு அப்போது உதவிய பலரையும் பற்றி நினைத்துக் கொள்கிறேன். சமூகத்திலிருந்து நாம் எடுப்பதில் கொஞ்சத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையா?

கே : இப்போது திரும்பிப் பார்க்கும் போது நீங்கள் நன்றி சொல்ல விரும்புவது யார் யாருக்கு?

ப : படிக்க வேண்டுமென்ற மகளின் ஆசையையும் திறமையையும் மதித்து, குடும்பத்தினரின் எதிர்ப்புகளைச் சமாளித்த என் அம்மாவுக்கு. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் பெரும்பாலும் ஆண்கள் கல்லூரி என்று கருதப்பட்ட ஐ.ஐ.டி.க்கும், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன் மணமாகாத என்னை மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்த என் அம்மா அப்பாவின் திடமான நம்பிக்கைக்கு. சிறந்த அடிப்படைக் கல்வியையும் முன்னேறுவதற்கான உந்துதலையும் எனக்கு ஊட்டி வளர்த்த என் தாயகத்துக்கு. என் இளங்கலைப் படிப்புக்கு உதவி செய்த 'ஆனந்த விகடன்' வாசன் அறக்கட்டளையின் சேவை உணர்வுக்கு. என் மேல்படிப்புக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் செய்த முழு உதவிக்கு. என் கணவரின் அன்புக்கு.

திருமதி. காஞ்சனா தாமோதரனின் நேரத்திற்கு நன்றி சொல்லி முடித்துக்கொண்டோம். வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தத் தோன்றுகிறது. இத்தனையும் செய்யமுடிந்த இவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழர். நம்மைப் போல ஓர் அமெரிக்கவாசி.

தொகுப்பு: மனுபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline