Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2024 Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
லட்சுமி ராஜரத்னம்
- அரவிந்த்|மார்ச் 2024|
Share:
பெண் வாசகர்களை மையமாக வைத்துப் பல குடும்பக் கதைகளை எழுதியவர் லட்சுமி ராஜரத்னம். நாவல்கள், சிறுகதைகள் என்பதைத் தாண்டி ஆன்மீகப் படைப்புகள் பலவற்றைத் தந்தவர். ஆன்மீக உபன்யாசகராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். மார்ச் 27, 1942 அன்று திருச்சியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மீக நாட்டம் உடையவராக இருந்தார். தனது பத்தாம் வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளில் கலந்துகொண்டு தங்க நாணயம் பரிசாகப் பெற்றார். தந்தையார் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். கணவர் ராஜரத்னம் தந்த ஊக்கத்தால் நாவல்கள் எழுதினார். லட்சுமி ராஜரத்னம் எழுதிய 'இதயக்கோயில்' நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்றது. பல நாவல்களுக்கிடையே சிறந்த நாவலாக இதனைத் தேர்ந்தெடுத்தவர் எல்லார்வி. இந்த நாவல், மாயாவி, நா.பா. அகிலன், கி.வா.ஜ. சாண்டில்யன் உள்ளிட்ட சக எழுத்தாளர்களால் பாரட்டப்பட்டதுடன் லட்சுமி ராஜரத்னத்திற்குச் சிறந்த புகழையும் தேடித் தந்தது.

தொடர்ந்து ஆனந்தவிகடன், கல்கி, மங்கையர் மலர், அமுதசுரபி, தினமலர், தினத்தந்தி, இதயம் பேசுகிறது. குங்குமம் என, எழுதாத இதழ்களே இல்லை என்னுமளவிற்கு எழுதிக் குவித்தார். தினமணி கதிரில் அதிகம் சிறுகதைகள், தொடர்கதைகளை எழுதினார். தினமணி கதிரின் ஆசிரியர்களாக இருந்த கே.ஆர். வாசுதேவன், நா. பார்த்தசாரதி, கி. கஸ்தூரிரங்கன் இவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தனர். லட்சுமி ராஜரத்தினம், தனது படைப்புகளில் தவறான சொற்பிரயோகங்களோ, எதிர்மறை விஷயங்களோ இடம்பெறாத வகையில் நேரிய கதைகளை எழுதினார். எழுத்தில் கண்ணியத்தையும், மேன்மையையும் கடைப்பிடித்தார். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களாலும் விரும்பி வாசிக்கப்பட்டார்.



லட்சுமி ராஜரத்னத்தின் நாவல்கள் பலவும் சமூக நோக்குடன் எழுதப்பட்டவை. 'அகலிகை காத்திருந்தாள்', 'பாட்டுடைத் தலைவி', 'அவள் வருவாளா' போன்றவை சிறந்த வரவேற்பைப் பெற்றவை. குடும்பக் கதைகள்தான் என்றில்லாமல் துப்பறியும் கதைகளும் வரலாற்றுக் கதைகளும் எழுதினார். ஆண் எழுத்தாளர்களுக்கு நிகராக 40 வரலாற்றுக் கதைகளை எழுதிய ஒரே பெண் எழுத்தாளர் லட்சுமிராஜரத்னம் தான். முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவரும் கூட.

லட்சுமி ராஜரத்னம், 1,000க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். வானொலியிலும் பங்களித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இவரது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. சென்னைத் தொலைக்காட்சியிலும் பல நாடகங்கள் ஒளிபரப்பாகின. இவரது கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்தன. ஆயிரக்கணக்கான ஆன்மீகக் கட்டுரைகளை எழுதியவர். இசை அறிந்தவர். திருச்சி, கோவை, தஞ்சை போன்ற இடங்களில் கச்சேரி செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடியுள்ளார். எழுத்தாளரும், நாட்டியக் கலைஞருமான மகள் ராஜஷ்யாமளா பிரகாஷின் நடனங்களில் லட்சுமி ராஜரத்னம் பாடியுள்ளார். மருமகன் பிரகாஷ் என்னும் ப்ரியா கல்யாணராமன் (அமரர்) குமுதம் இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

1991 மற்றும் 1993ல், எழுத்துக்காகவும், ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்காகவும் காஞ்சி சங்கர மடத்தின் பாராட்டைப் பெற்றார். 1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' விருது பெற்றார். 2002ல் கொழும்பில் உள்ள இந்து மகா சபை, லட்சுமி ராஜரத்னத்துக்கு 'சொற்சுவை நாயகி' என்ற விருதை அளித்துச் சிறப்பித்தது. கலைமகள் இதழின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை 2019ல் பெற்றார்.

தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி ராஜரத்னம், பிப்ரவரி 8, 2021 அன்று காலமானார்.

அரவிந்த்
லட்சுமி ராஜரத்னம் நூல்கள்
இதயக்கோயில்; அகலிகை காத்திருந்தாள்; பாட்டுடைத் தலைவி; அவள் வருவாளா?; மதுர நிலா; ஆகாடப் பூக்கள்; அபியும் அழகனும்; ஆன்மீக அமுதம் - மூன்று பாகங்கள்; என்னோரு வா நிலா; என்னைக் கொன்றவன் நீ; ஏழி ஸ்வரங்களுக்குள்; இசைத் தமிழ் வளர்த்த சான்றோர்கள்; அக்னியின் புதல்வி; காதல் என்பது எதுவரை?; காற்றில் கலையாத மேகங்கள், காற்றில் கலந்தவளே!; கனவு மின்னல்கள்; கனவு கண்டேன் துரோகி; கனவு ஊர்வலங்கள்; கண்ணாலே ஒரு காதல் கவிதை; கவிதாவின் காதலன்; கொலையே நீ வணங்காய்; கொஞ்சிப் பேசக் கூடாதா; அன்பே வா; அன்புள்ள அம்மாவுக்கு; அற்புத அதிசய ஆலயங்கள்; அஷ்டலட்சுமி; அவள் வருவாளா?; பவிஷ்ய புராணம்; பிரம்ம முடிச்சு; தெய்வம் தந்த பூவே; என் அன்னை – என் மனைவி; மகிழ மலையா, மர்ம மலையா?; மண்ணில் விழுந்த மழைத் துளிகள்; மறக்குமா நெஞ்சம்; மழை கூட தேனாகலாம்; முல்லைப் பூக்கள்; முல்லை ரோஜா; நான் உன்னோடு தான்; நானே வருவேன்; நடிகனின் காதலி; நவக்ரகங்கள்; நீ இல்லாத நான்; நீர் மேல் ஆடும் தீபங்கள்; நீ தானே அந்தக் குயில்; நெஞ்சம் எங்கே?; என் காதலி என்னைக் காதலி; என் வானம்; என் இதய நிலா; எனக்குள் நீ; வான ஊஞ்சல்; வானம் விட்டு வா நிலவே; யாருக்கு மாப்பிள்ளை யாரோ. மற்றும் பல.
லட்சுமி ராஜரத்னம் குறுநாவல்கள் (தொகுப்பு)
லட்சுமி ராஜரத்னம் சிறுகதைகள் (தொகுப்பு)
Share: