சாகித்ய அகாதமி விருது
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி நிறுவனம். தமிழில் 2025ம் ஆண்டுக்கான விருதுக்கு 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் ச. தமிழ்ச்செல்வன். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மதிப்புறு தலைவர்.

ச. தமிழ்ச்செல்வன், மே 27, 1954 அன்று, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்தவர். ராணுவத்திலும், அஞ்சல் துறையிலும் பணியாற்றியவர். சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கும் பங்களிப்புச் செய்துள்ளார். பல்வேறு நூல்களைத் தொகுத்திருக்கிறார். மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் முற்போக்கு இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.

இவ்விருது, செப்புப் பட்டயம், சால்வை, ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை அடங்கியது. தமிழ்ச்செல்வனுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்.

© TamilOnline.com