செப்டம்பர் 2026: வாசகர் கடிதம்
ஆகஸ்ட் தென்றல் இதழில் FeTNA அமெரிக்க தமிழ்த் திருவிழாவைப் பற்றிய விவரங்களும், ஜகன்னாத் ரத யாத்திரையின் விவரங்களும் சிறப்பாக நேரில் பார்த்தாற்போல இருந்தது.

அமெரிக்காவின் பொருளாதாரம் பெருத்த சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதையும், அதில் சிக்கி மக்கள் தவிப்பதையும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாரதத்தில் ஒருபக்கம் பல்வேறு விதமான சிக்கல்களும், பிரச்சனைகளும், கரப்பான் பூச்சிகளின் ஆட்டங்களும் இருந்தாலும், அதையும் தாண்டி, எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கி, பலவிதமான முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியடைந்து, வலிமை மிகுந்த பாரதமாக பீடுநடை போடுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

'அலமாரி' கிடைத்தற்கரிய பொக்கிஷம், ரசமான பல அனுபவங்கள் இருந்தாலும், அதை ரசமாகச் சொல்லத் தெரியவேண்டாமா? அப்படிப் பழைய நினைவுகளை ரசிக்கத்தக்க முறையில் சொல்லும் சக்தி வாய்ந்தவர் ரஸிகமணி டி.கே.சி. அவரைப் பற்றி பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் கொடுத்த சுவாரஸ்யமான தகவல்களைதென்றலில் படித்து ரசித்தோம்.

சிறப்புப் பார்வையில் கவிஞர் சினேகனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அவரின் வெள்ளந்தியான புன்னகையும், மண்வாசனை மாறாத மனிதப்பண்பும், அரிதாரம் பூசிக்கொள்ளாத அன்பும் சினேகனின் பலம் என்று பாரதிராஜா குறிப்பிட்டிருந்தது மிகவும் உண்மை. அவர் மேன்மேலும் உயர வாழ்த்துகிறோம்.

எழுத்தாளர் பால்யூ - பெயர் வந்த விவரமும், மற்ற புனைபெயர்களும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தன. அவரின் எழுத்தாற்றல், அவர் செய்த பணிகள் யாவும் அற்புதம். 'ரங்கனும், நானும்' என்ற, ஜடாதரன் என்ற பெயரில் எழுதிய சிறுகதை மனதை உருக்கியது.

பா.சு ரமணன் அவர்கள் எழுதிவரும் 'மேலோர் வாழ்வில்' பகுதியில் சுவாமி சிவானந்த சரஸ்வதியின் தவ வாழ்க்கையும், அவர் ஆற்றிய தெய்விகப் பணிகளும், சேவை பணிகளும், ரிஷிகேசம் பற்றிய விவரங்களும் படிக்கப் படிக்க மனம் தெய்விகத்தில் அமிழ்ந்தது.

உமா ஹைமவதி ராமன் எழுதிய 'ஒரு நிமிஷத்தில் ஒரு நிச்சயதார்த்தம்' அருமையான சிறுகதை. இப்படி உண்மையில் நடந்தால் இன்றைய இளவயதினர் நிறையப் பேருக்குத் தடங்கல் இல்லாத் திருமணம் நன்றாக நடக்கும்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சின்னக்கதை 'சீடனின் விசுவாசம்' மறக்கமுடியாத மனம் உருகிய சம்பவம்.

தென்றலுக்கே உண்டான அருமையான பகுதிகள். அத்தனையும் அருமை. நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com