சார்லட் முத்தமிழ்ச்சங்கத்தின் இரண்டாவது ஆண்டுவிழா, இயல், இசை, நாடகம் அடங்கிய முத்தமிழ்த் திருவிழாவாக, 2026 மார்ச் 22ஆம் நாள், மூரஸ்வில் நகரின் ஜோ வி நாக்ஸ் கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழா காலை 9.30 மணிக்கு, மங்கலக் குத்துவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண் முதலானவற்றுடன் இனிதே தொடங்கியது. சங்கத் தலைவர் திரு பிரகாசம் அண்ணாமலை தலைமையுரையும் வரவேற்புரையும் வழங்கினார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளைக் குறிப்பிட்டு, தமிழின் வேர்களை உலகெங்கும் கொண்டு சேர்த்துக் காப்பாற்றுவதன் நோக்கத்தையும் சங்கத்தின் கடமையையும் வலியுறுத்திப் பேசினார்.
சங்க நிர்வாகிகள் மேடையில் தோன்றி, தங்களது தனித்துவமான பணிகள் மற்றும் விழாவின் நோக்கம் குறித்து விளக்கமளித்தனர். தலைவர் பிரகாசம் அண்ணாமலை சங்கத்தின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார். செயலாளர் கீதாஞ்சலி மாணிக்கவாசகம் சங்கத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார். பொருளாளர் மோகன்ராஜ் ஆறுமுகம் சங்கத்தின் நிதி மேலாண்மை, புரவலர்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். கலைப்பண்பாட்டுச் செயலர் பிரபு சீனிவாசன் 35-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது, தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களை வடிவமைத்தது குறித்துப் பேசினார். தொழில்நுட்ப இயக்குநர் ஆனந்தன் செல்வராஜ், மேடை வடிவமைப்பு, ஒலி-ஒளி அமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவிகள் பற்றி விளக்கினார்.

தொகுப்பாளர் பணியை மேற்கொண்டிருந்த பிரபு ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிமுகத்துக்குப் பின் வாழ்த்துரை வழங்க அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் பழமைபேசி அழைக்கப்பட்டார். அமெரிக்காவில் தமிழர்களின் வலைப்பின்னல், தமிழ்க்கல்வி, வாழ்வியலுக்குத் தேவையான தமிழர்களின் முன்னெடுப்பு முதலானவற்றை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், "எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேய்ஞ்சாலும் கடைசியா இனத்துலதான போயி அடையணும்!" என்னும் சொலவடையை நினைவுகூர்ந்து தமிழ்ச்சங்கத்தின் இரண்டாமாண்டு விழா, சங்க நிர்வாகிகள், கலைப்படைப்பாளிகள் முதலானோரை வாழ்த்தி உரைத்தார்.
தொடர்ந்து சார்லட் பெருநிலத்தில் பரந்து வாழும் தமிழர்களின் இசை, ஆடல், பாடல், கூத்து, கருவியிசை, உரைகள், குறுநாடகம் என தமிழிலக்கியக் கலைகளும் முத்தமிழின் பரிமாணங்களும் அரங்கேறின. நிகழ்ச்சிகளை தமிழார்ந்த வர்ணனைகளுடன், ஆதிமூலம் ரங்கநாதன், காயத்ரி குரு முதலானோர் விறுவிறுப்பாகத் தொகுத்தளித்தனர்.
வளாகத்தில் ஏராளமான அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. புரவலர்களுக்கு வணிகக் கொடையாளர்களுக்கும் சிறப்பு நன்றிகள் உரித்தாக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளில், ஆத்ரிகா தனச்சந்திரன், ஹர்சத் ரஞ்சித், விஷ்வஜீத், ரிஷி ஆதிமூலம், யாஷிகா சுமன், சுனில் தோஷி, நந்தினி பிரியா, மலர்விழி ரஞ்சித், கலைவாணி, ரம்யா மோகன், பழனிச்சாமி ராஜா, ப்ரவளிகா கிருஷ்ணன், சுமன், பூபதிராஜன் செங்கோட்டையன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மாலை ஆறுமணி வரையிலும் இடம்பெற்றன. சங்கத்தாரின் நன்றி நவிலலுடன் சார்லட் முத்தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ்த் திருவிழா இனிதே நிறைவுற்றது.
சங்கத்தில் இணைந்து பயணிக்கவும் கூடுதல் தகவலுக்கும்: www.charlottemuthamizhsangam.org
கீதாஞ்சலி, செயலாளர், சார்லட் முத்தமிழ்ச்சங்கம். |