ஹோப்வெல் கேன்சர் சென்டருக்குள் நுழைந்தேன். வரவேற்பு மேஜையில் போன வாரம்தான் புதிதாகச் சேர்ந்த ஜோசஃப், இடது முன்கை முழுவதும் வெகு நுணுக்கமாக வரைந்த கம்பீரமான பெரிய சிங்கமுக டாட்டூவோடு அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்தவுடன் புன்னகைத்து, "ஹாய் ராம்! எப்படி இருக்கிறீர்கள்?" என்றான்.
"எனக்கென்ன, நன்றாகத்தான் இருக்கிறேன்" என்று சங்கடமாகச் சிரித்தேன்.
"இன்றைக்கும் வாலண்டியரிங்கா?"
"ஆமாம், விக்டோரியா இருக்கிறார்களா?"
கேன்சர் சென்டரில் உதவி புரியும் தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பாளர் விக்டோரியா.
"ஷீ இஸ் இன் அ மீட்டிங். சற்றுக் காத்திருக்கிறீர்களா?"
"யெஸ், தாங்க் யூ" என்று சொல்லி, சாம்பல் நிற நாற்காலியில் அமர்ந்தேன்.
வரவேற்பறையில் இருந்த பலவிதமான முகபாவங்களைப் பார்த்து அவற்றின் எண்ண ஓட்டங்களை யூகித்துக் கொண்டிருந்தேன். இவை எல்லாவற்றையும் பார்த்தவன்தான் நான்.
அலைபேசி அழைத்தது. அட்லாண்டாவிலிருந்து என் மகள் அஞ்சலி.
"ஹாய் அப்பா! யோசிச்சியா?"
"எதைப்பத்தி?"
"ப்ச் ... வீட்டை வித்துட்டு இங்கே எங்களோட வந்து இருக்கறதைப் பத்திதான்."
"அலெக்ஸ் எப்படி இருக்காரு?"
"அவரு எல்லாம் நல்லாத்தான் இருக்காரு. பேச்ச மாத்தாதே. எப்போ வரப்போற? உன் பேத்தி உன்னைப் பத்திக் கேட்டு தினம் துளைச்சு எடுக்குறா. நேத்துகூட ஆதர்ஷ்கிட்ட பேசினேன். அவனும் நானும் சேர்ந்து வர்றோம். வந்து வீட்டைக் காலி செய்ய ஹெல்ப் பண்றோம்ப்பா. இங்கே வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும்."
"அக்காவும் தம்பியும் செட்டு சேர்ந்துட்டீங்களா?"
"தனியா இன்னும் எத்தனை நாள் கஷ்டப்படப் போற?"
"கேன்சர் சென்டர்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்."
அவளை மேலே பேச விடாமல் துண்டித்தேன்.
சற்று நேரம் அசையாமல் அமர்ந்து இருந்ததில் சோர்வு தலை தூக்கியது. ஆறு மாதங்களாகச் சரியாகத் தூங்க முடிவதில்லை. தனிமை இரவுகள் வெகு நீளமானவை. இருளில் என்னைத் துரத்தித் தீண்டும் வெறுமையின் சில்லிட்ட விரல்கள். என் மனநிம்மதியைக் கிழிக்கும் நிசப்தத்தின் நகங்கள். என் சுவாசத்தில் அவள் வாசம். படுக்கையில் அவளுடைய தலையணையின் மேல் அவள் விரும்பி அணிந்த ஸ்வெட்டர். அதை அள்ளி முகர்ந்தால் அவளுக்குப் பிடித்த பெர்ஃயூமின் மணம்.
அதை அவளுக்காக வாங்கிய பல வருடங்கள் முந்தைய அந்தப் பிறந்த நாள். அதன் நறுமணம் பிடித்திருந்தாலும், விலையைப் பார்த்ததும் சட்டென்று கீழே வைத்து விட்டாள். நானும் ஐந்து வயது ஆதர்ஷும் எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்து அவளுக்காக வாங்கினோம்.
அதை எப்போது உபயோகித்தாலும் அவளுடைய தோழிகள் அவளிடம் "சித்ரா, யூ ஸ்மெல் ஸோ நைஸ்" என்பார்களாம். என் தனிமை ராட்சதர்களை விரட்டுவதற்காகக் குளியலறையிலும் க்ளாசெட்டிலும் மின்விளக்குகளை ஏற்றி, சுவர்களில் நிழல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு, தவித்து அலைபாயும் இரவுகளில் அந்த வாசம்தான் எனக்கு நங்கூரம். அவ்வளவு பெரிய வீட்டில் நான் ஒற்றை ஆள். வீடெங்கிலும் அவளின் அடையாளங்கள்.
அவளின் கால்தடங்கள் பல்லாயிரம் முறை பதிந்த இந்தத் தரைகளை விட்டு எப்படி விலகுவேன்? அஞ்சலிக்குப் புரியாது.
ஆள் அரவம் கேட்டுக் கண்ணைத் திறந்தேன். விக்டோரியா "சாரி ராம். மீட்டிங் ரொம்ப லேட்டாகிவிட்டது. இன்று புத்தகங்களும் ஸ்நாக்ஸும் விநியோகிக்கிறீர்களா?" என்றாள். எனக்குப் பிடித்த வேலைதான். "சரி" என்று சொல்லிவிட்டு, அறை ஓரத்தில் இருந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு நடந்தேன்.
நோயாளிகளை உற்சாகப்படுத்தவும் அவர்கள் படும் இன்னல்களை லகுவாக்கவும் வண்டியில் கதைப் புத்தகங்கள். யார் வேண்டுமானாலும் பிடித்த புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். அடுத்த முறை திருப்பி விடலாம். வண்டியின் மேல் அடுக்கில் ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ். நோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்திற்கு வந்தேன். கால்கள் தன்னை அறியாமல் சற்றுத் தயங்கின. எத்தனை முறை இங்கே வந்தாலும் மனதைப் பிசைகிறது.
வரிசை வரிசையாக இளஞ்சிவப்பிலும் இளநீலத்திலும் பூப்போட்ட உறைகள் அணிந்த, சாயும் வசதி கொண்ட சிகிச்சை இருக்கைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நோய் நிலைகளில் மனிதர்கள். வயது, இனம், மொழி, மதம், பாலினம் என்று எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கொடிய நோயால் சமன்படுத்தப் பட்டவர்கள்.
சிலர் சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே அயர்ந்து தூங்கினர். சிலர் சிறைப்பட்ட கண்களுடன் ஜன்னல் வழியே அசையும் மரங்களைப் பார்த்தனர். சிலர் அலைபேசியில் மூழ்கி இருந்தனர். சிலர் குறுக்கெழுத்துப் புதிர்களில் முனைந்து இருந்தனர். சிலர் சுவர்களை வெறித்துப் பார்த்தனர். ஒவ்வொரு நோயாளிக்கு அருகேயும் உறவினர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து, வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். செவிலியர்கள் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஊசி வழியாக மும்முரமாகச் செலுத்திக்கொண்டிருந்தனர்.
பலமுறை பார்த்த காட்சிகள்தாம்.
சித்ராவை இங்கே அழைத்து வந்த டிசம்பர் மாத இருள்நாட்கள். வேலையிலிருந்து ஒய்வு பெற்றவுடன் உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இருவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய நாட்கள். முகத்தில் அறைந்தாற்போல் சித்ராவின் அநியாய டயக்னோசிஸ் தடுமாற்றத்தைக் கொடுத்த பதற்ற நாட்கள். வெகு தாமதமாகக் கண்டறியப்பட்ட முற்றிய நிலை நோயைக் கொல்லக் கொடுக்கப்பட்ட வீரிய மருந்துகளின் அராஜகப் பக்க விளைவுகளால் அவள் துடித்த நாட்கள். உடம்பில் நோய் விஷமாகப் பரவினாலும் அது தன் மனத்தையோ குணத்தையோ சிறிதும் பாதிக்க விடாமல் சித்ரா வைராக்கியமாக இருந்த பிரமிப்பூட்டும் நாட்கள். தாமரை இலை தண்ணீர் போல் மனசாந்தியுடனும் புன்னகையுடனும் வலிமையுடனும் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எங்கள் அனைவரையும் தைரியப்படுத்திய அதிசய நாட்கள்.
இரண்டே மாதங்கள்தாம். இரக்கமில்லாத புற்றுநோய் என் வீராங்கனை சித்ராவைப் பேராசையுடன் வாரிக்கொண்டு போனது.
என்னை ஒருமுகப் படுத்திக்கொண்டு வண்டியைத் தள்ளியபடியே நடந்தேன். தூங்குபவர்களையும் வெளியே வெறித்துப் பார்ப்பவர்களையும் கடந்து சென்றேன். இருவர் சற்று ஆர்வம் காட்டிப் புத்தகங்களை மேய்ந்து, தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்தனர்.
ஒரு நடுத்தர வயது பெண்மணி ஸ்நாக்ஸைப் பார்த்துத் தலையை "வேண்டாம்" என்பதுபோல் அசைத்து, "ஐ ஆம் ட்ரையிங் டு ஈட் ஹெல்த்தி. எனக்கு வேண்டியவற்றை நானே கொண்டு வந்து விட்டேன்," என்றாள். பலர் என்னைப் பார்த்தவுடன் கண்களை அகற்றிக் கொண்டனர். சிலர் நடுத்தரமாகச் சிரித்துத் தங்கள் வேலைகளில் மீண்டும் ஈடுபட்டனர்.
ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி, ஒரு காலி சிகிச்சை இருக்கையின் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, தன் காலடியில் இருந்த வண்ணப் பைகளைக் குடைந்து இரண்டு சிறிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தாள். என்னைப் பார்த்ததும் ஸ்நேகமாகச் சிரித்து, "ஹாய்! எப்படி இருக்கிறீர்கள்?" என்றாள்.
"ஐ ஆம் டூயிங் வெல். புத்தகம் ஏதாவது வேண்டுமா?"
"இல்லை. நீங்கள் இங்கே வாலண்டியரிங் செய்வதற்கு மிக்க நன்றி."
"யூ ஆர் வெல்கம். வாரம் இருமுறை வருகிறேன்."
"எப்படி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?"
என்ன சொல்வது, எவ்வளவு சொல்வது என்று தயங்கினேன்.
"என் மனைவியின் சிகிச்சைக்காக இங்கே பலமுறை வந்திருக்கிறோம்."
"உங்களை மாதிரி உதவி செய்பவர்களின் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. என் கணவர் தன் சிகிச்சைக்கு இங்கேதான் வருவது வழக்கம், அதனால் பார்த்திருக்கிறேன்."
மேலும் ஏதோ சொல்ல விழைகிறாள் என்று கண்டுகொண்டு அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தேன். "அவருக்கு பான்க்ரியாட்டிக் கேன்சர். கணையத்தில் புற்றுநோய். கண்டுபிடித்த போது, சிகிச்சை கொடுத்தால் இரண்டு மூன்று மாதங்கள்வரை கூடப் பிழைக்கலாம் என்றார்கள். இங்கே வர ஆரம்பித்தோம். கடைசிவரை எல்லாப் பணிவிடைகளையும் நான்தான் செய்தேன். அவர் முழுதாக ஒரு வருடம் இருந்தார். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்."
கணவன் போய்விட்டான் என்றால் இவள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று குழம்பினேன். என் முகத்திலேயே என் கேள்வி தெரிந்தது போலும்.
"அவர் போன ஒரு மாதத்தில் எனக்கு லங் கேன்சர் என்று கண்டுபிடித்தார்கள்" என்றாள்.
சித்ராவை ஆட்கொண்ட அதே அரக்கன். அவளுக்கும் நுரையீரலில் புற்றுநோய்.
கணவனை இழந்த கையோடு இப்போது தானும் இந்தக் கொடிய நோயால் அவதிப்பட்டுக்கொண்டு... எப்படித் தாங்குகிறாள் இவள்? பேச்சு எழவில்லை எனக்கு.
சிகிச்சை இருக்கையில் உட்கார்ந்து பழங்களை உரிக்கத் தொடங்கினாள். "வைட்டமின் ஸி. நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு நல்லது" என்றாள்.
தயங்கியபடியே, "உதவிக்கு உங்களுடன் யாராவது இருக்கிறார்களா?" என்றேன். முகத்தின் மெல்லிய புன்னகை மாறாமல், "என் மகனும் மருமகளும் இரண்டு மாதங்கள் முன்பு ஸியாட்டிலில் இருந்து இங்கே வேலை மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்கள். பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறார்கள். மிகவும் உதவியாக இருக்கிறது" என்றாள்.
"தட் இஸ் குட். உங்களுக்கும் ஒரு தெம்பாக இருக்கும்" என்றேன்.
சிறிது நேரம் சௌகரியமான மௌனம்.
கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து, "உங்கள் மனைவிக்கு என்ன... என்ன விதமான கேன்சர்?" என்றாள்.
"அவளுக்கும் நுரையீரலில் புற்றுநோய்தான்."
"ஓ ... அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டு, பிறகு பெரியதோர் அணை உடைந்தாற்போல் முதலில் இருந்து தனக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டாள். எல்லாமே எனக்குப் பரிச்சயமான பெயர்கள்.
"என் மனைவிக்கும் இதே மருந்துகள்தான்" என்றேன். சிறிது நேரம் சிகிச்சை விவரங்கள் பரிமாறிக்கொண்டோம்.
"நல்லது, இதைக் கேட்டதில் எனக்குப் புது தைரியம் பிறந்திருக்கிறது. இந்த மருந்துகள் என் உடம்பில் தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்று தினமும் பிரார்த்திக்கிறேன். அடுத்த மாதம் ஸ்கேன், டெஸ்ட் எல்லாம் செய்வார்கள். அப்போதுதான் தெரியும்" என்றாள்.
முகத்தைக் கல்லாக வைத்துக்கொண்டு, "நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்" என்றேன்.
பெரிதாகப் புன்னகைத்து, "தேங்க் யூ. என் மருமகள் உண்டாகி இருக்கிறாள். இப்போதுதான் மூன்றாவது மாதம். அவரேதான் மீண்டும் வந்து பிறப்பார். நான் என் பேரக் குழந்தையுடன் கொஞ்சி விளையாட வேண்டும், தூக்கி வளர்க்க வேண்டும். என் நோய் முற்றிலும் குணமாக வேண்டும். அதுதான் என் கவலை. குணமாகுமா?" என்றாள்.
சொல்வதறியாமல் நின்றேன்.
அவளே தொடர்ந்தாள். "உங்கள் மனைவியின் வழியிலேயே அடிமேல் அடி வைத்து நானும் நடக்கிறேன்... ஆமாம், உங்கள் மனைவி இப்போது எப்படி இருக்கிறார்கள்? பூரண குணமடைந்து விட்டார்களா?" என்று சற்று பதைபதைப்புடன் கேட்டாள்.
என் மனதில் பலவிதமான எண்ணங்கள் மின்னல் வேகத்தில் ஓடின, பின்பு தெளிந்தேன். இவளைத் தேற்றுவது மிக மிக அவசியம்.
செய்யுள் பாடம் கைகொடுத்தது. வாய்மை அதிகாரத்தின் இரண்டாவது திருக்குறள்:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
புன்னகையை வரவழைத்துக் கொண்டு, "என் மனைவி பூரண குணமடைந்துவிட்டாள். இனி அவளுக்கு மருந்து தேவையில்லை. அடுத்த மாதம் நாங்கள் ஐஸ்லாந்தைச் சுற்றி பார்க்கப் போகிறோம். அவளுடைய வெகுநாள் கனவு. அதிலும் அங்கே தெரியும் நார்தர்ன் லைட்ஸைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறாள்" என்று சொல்லிவிட்டு அவள் கண்களைப் பார்த்தேன்.
புருவங்களின் முடிச்சு அவிழ்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
நிருபமா மாடபூஷி, வர்ஜீனியா |