இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மொத்தம் 131 பேர் பத்ம விருது பெறுகின்றனர். இவர்களில் 19 பெண்களும், மறைவுக்குப்பின் விருது பெறும் 16 பேரும் அடக்கம்.
பத்மவிபூஷண் இவ்வாண்டு தர்மேந்திர சிங் தியோல் (மறைவுக்குப் பின்), கே.டி. தாமஸ், திருமதி. என். ராஜம், பி. நாராயணன், வி.எஸ். அச்சுதானந்தன் (மறைவுக்குப் பின்) உள்ளிட்ட ஐந்து பேர் பத்மவிபூஷண் பெறுகின்றனர்.
பத்மபூஷண் பத்மபூஷண் விருது அல்கா யாக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, நடிகர் மம்மூட்டி, எஸ்.கே.எம். மயிலானந்தன், சதாவதானி ஆர். கணேஷ், ஷிபு சோரன் (மறைவுக்குப் பின்), வெள்ளப்பள்ளி நடேசன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட 13 பேருக்கு வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள், வேளாண் விஞ்ஞானி கே. ராமசாமி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார், கால்நடை ஆராய்ச்சியாளர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓவியர் பி.கிருஷ்ணன் (மறைவுக்குப் பின்), சிற்பி காளியப்ப கவுண்டர், டாக்டர் எச்.வி. ஹண்டே, மிருதங்கக் கலைஞர் பக்தவத்சலம், திருத்தணியைச் சேர்ந்த ஓதுவார் சுவாமிநாதன், எழுத்தாளர் சிவசங்கரி, ஐ.ஐ.டி. சென்னை இயக்குநர் காமகோடி, புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே. பழனிவேல், நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உள்ளிட்ட 113 பேர் பத்மஸ்ரீ பெறுகின்றனர்.
விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்! |