ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: 'த்விதி த்யுதி' நடன நிகழ்ச்சி
ஜூன் 22, 2025 அன்று, ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தின் மூத்த மாணவியர் தியா பத்மநாபன் மற்றும் அனித்ரா ச்ரத்தா நாராயணன், சாரடோகா நகரின் மெகாஃபீ கலைகள் மையத்தில் (McAfee Performing Arts Center) பரதநாட்டிய மார்கம் நிகழ்ச்சி 'த்விதி த்யுதி' (ஈரொளி), அபிநயத்தின் ஆழம், நோக்கத்தின் உன்னதம் மற்றும் சமூக சேவை என்னும் பரந்த பார்வையின் மூலம் நெகிழச் செய்தது.

நிகழ்ச்சி "வாரண மாமுகனே" என்ற ஆரம்பப் பாடலுக்கான நடனத்துடன் தொடங்கியது. அஷ்டவித்யா நாயகி பாடல், நாயகியின் பல்வேறு உணர்வுகளை நடனமாக வெளிப்படுத்தியது. அதன்பின் "எங்கும் நிறைந்த பரம்பொருள்" வர்ணம், வாமன அவதாரக் கதையை விரிவாகக் கூறியது. பின்னர், அடாணா மற்றும் சாவேரி ராகங்களில் இரண்டு பதங்கள் அழகாக இடம்பெற்றன. நிகழ்ச்சி பிரபல மன்னா டே அவர்களின் "நாச் ரே மயூரா" பாடலுடன் உற்சாகமாக முடிவுற்றது.



இது ஒரு பாரம்பரிய நடன நிகழ்ச்சியாக மட்டும் அல்லாமல், இந்தியாவின் பின்தங்கிய சமூகங்களில் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் அமைந்தது. இவ்வாறாக "ஈரொளி - இரட்டைப் பிரகாசம்" என்பதன் பொருளை நன்கு சித்திரித்தது.

நிகழ்ச்சி 250க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. இந்தியாவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள் பங்கேற்று, ஆன்மீக மணங்கமழும் இசையை வழங்கினர். அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு உயிரூட்டியது.

இதில் பெறப்பட்ட நன்கொடைகள் குறைந்த வருமானம் கொண்டோருக்கு இலவச சிகிச்சை வழங்கும் சங்கரா கண் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. $8,000க்கும் மேற்பட்ட நன்கொடை இந்த நிகழ்வில் திரட்டப்பட்டது. நூறு கண் அறுவை சிகிச்சைகளுக்கு இது உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சங்கரா கண் அமைப்பின் நிறுவனர் திரு முரளி கிருஷ்ணமூர்த்தி தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவியரின் சேவையைப் பாராட்டினார்.

தியா, அனித்ரா ஆகிய இளம் கலைஞர்கள், குரு திருமதி விஷால் ரமணி அவர்களின் வழிகாட்டலில் நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்தனர். இந்த ஆண்டு குரு விஷால் ரமணி அவர்களின் கலை மற்றும் சேவைப்பணி வாழ்க்கையின் 50வது ஆண்டு தொடக்கம் என்பதைக் குறிப்பதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது பாரம்பரியக் கலையை சமூக சேவைக்குப் பயன்படுத்திய சிறந்த உதாரணமாகும்.

தகவல்: வித்யா

© TamilOnline.com