மெட்ராஸ் அம்மா
பத்துக்குப் பத்தில் ஒரு படுக்கையறை
அடுக்குமாடியில் வாடகைக் குடியிருப்பு.
குறுக்கு நெடுக்காய் இருந்தாலும் இரவில்
பிள்ளைகளுடன் உறங்கிடுவாள்.

மருத்துவமனைக்கு வந்த தாத்தா
வியாபாரத்துக்காக வந்த மாமா.
வாரம்தோறும் வந்தாலும்,
சிரிப்புடன் என்றும் வரவேற்பாள்.

படிப்புக்காக வந்த தூரத்து அண்ணன்
பட்டினம் பக்கவந்த சித்தப்பா.
மாதக்கடைசி என்றாலும்,
செலவுக்குக் கையில் கொடுத்திடுவாள்.

விருந்தினர் உபசரிப்பு, பரபரப்பான நகரத்தில்
அம்மாவிற்கு என்றும் மனஅமைதி தரும்.
தன் சொந்த ஊரின் மண்வாசம்
அம்மாவிற்கு என்றும் தனிமை விலக்கும்.


செந்தில் தனகோடி

© TamilOnline.com