தென்றல் பேசுகிறது...
எல்லைகளற்ற உலகம் என்று ஆகிவிட்ட இந்தக் காலத்தில், நாட்டின் குடிவரவுக் கொள்கை அந்த நாட்டின் செழுமையைத் தீர்மானிக்கலாம் என்கிற அளவு முக்கியமானதாகி விட்டது. டோனல்டு ட்ரம்ப் அதிபரான காலத்தில் இருந்தே அமெரிக்கக் குடிவரவுக் கொள்கை சர்ச்சைக்குரியது ஆக்கப்பட்டது. குடிமக்கள் என்று வரும்போது அமெரிக்காவை வேறெந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது - அப்படியொரு கதம்பக் குடும்பம் இது. வெளியிலிருந்து எவரும் வரக்கூடாது என்று தொடங்கிய உடனேயே இந்நாட்டின் தொழில்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அருகின, புத்தாக்கங்கள் குறைந்தன பணவீக்கம் அதிகமானது, விலைவாசி ஏறியது. அதிலும் கோவிட் வேறு மக்கள் தொகையை வற்றடித்து விட்டது! அதிபர் தேர்தல் வருகிறது. குடிவரவைக் கட்டுப்படுத்துவோம் என்ற வாதத்தை மீண்டும் ரிபப்ளிகன் கட்சி மக்கள்முன் வைத்துள்ளது. தொழில்வளம், பொருளாதாரம், புத்தாக்கம், அறிவியல் என்று எல்லா முனைகளிலும் முன்போல அமெரிக்கா முன்னோடி நாடாக இருக்கவேண்டுமானால், அவற்றுக்கு ஆதாரம் மனிதவளம் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். அந்த மனிதவளத்தை மேம்படுத்தும் ஓர் முக்கியக் கருவி குடிவரவுக் கொள்கை.

★★★★★


ரிபப்ளிகன் குடிவரவுக் கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் டெக்சஸ் மாநிலத்தில் இருந்து அதன் கவர்னர் தலைமையிலேயே இந்தியாவுக்கு வர்த்தகக் குழு ஒன்று வந்துள்ளது. முதலிலேயே இந்தியர் பெருமளவில் வசிக்கும் அந்த மாநிலம் இப்போது இந்திய முதலீட்டை நாடி வந்துள்ளது. பிரதமர் மோதி மீண்டும் மீண்டும் சென்று நம் நாட்டின் உயர்ந்த சாத்தியக்கூறுகளை அவர்கள் மனதில் ஆழப் பதிய வைத்தது இதற்கொரு காரணம். இந்தியாவின் GDP வளர்ச்சி அதன் பொருளாதார அசுர வளர்ச்சியைக் காண்பித்து உலக நாடுகளை வியக்க வைத்திருப்பது மற்றொரு காரணம். இந்திய அமெரிக்கர்கள் கல்வியில் மேம்பட்ட, அமைதியான, குடும்பப்பற்றுள்ள, சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று பெயர் பெற்றுள்ளனர். எங்கு சென்றாலும் உலகம் நம்மை வரவேற்கும். சந்தேகமில்லை.

★★★★★


108 நூல்களை எழுதிக் குவித்துள்ள தமிழ் எழுத்தாளர் ப. சரவணன் நேர்காணல் உற்சாகம் தரும். காரைக்கால் அம்மையாரின் வியத்தகு வாழ்க்கை, ஆர்னிகா நாசர் குறித்த கட்டுரை, விடையவன் பதில்கள் என்று பல்வேறு சுகந்தங்களைத் தாங்கித் தென்றல் தவழ்கிறது. (சு)வாசிக்க வாருங்கள்.

வாசகர்களுக்கு வேலன்டைன் தின வாழ்த்துகள்!

தென்றல்
பிப்ரவரி 2024

© TamilOnline.com