Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கடல்புரத்தில்
- வண்ணநிலவன்|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன.

அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் கல்யாணமாகியிருந்த பெண்கள் தங்கள் கணவன் வீட்டாருடன் வந்து விட்டார்கள். எல்லோரையும் முகம் கோணாமல் உபசரிக்கிறது எப்படியென்று அந்த ஊர்ப் பெண்களுக்குத் தெரியும். போன வருஷம் பண்டியலுக்கு பாவாடை சட்டை அணிந்து வந்திருந்த பிள்ளைகள் திடீரென்று, மாயச் சக்தியினால் வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளைப் போல தாவணி அணிய ஆரம்பித்திருந்தார்கள். எல்லாப் பெண்களுமே அந்தப் பருவத்துக்குத் தாண்டுகிற சமயம் வெகு அற்புதமானது. அந்த க்ஷணம் அவர்களுக்கு கிளியந்தட்டோ தாயமோ ஆடிக் கொண்டிருக்கையில் கூட அது நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்போதே அந்தப் பெண்ணுக்கு இதுவரையிலும் இல்லாத வெட்கம், நளினம் எல்லாம் வந்து சேருகின்றன. இது ரொம்ப வேடிக்கையான விஷயந்தான்.

ரஞ்சியும் வந்து விட்டாள். பிலோமியின் வீட்டுக்குத்தான் யாரும் வரவில்லை. செபஸ்தி தான் கல்யாணம் ஆன பிறகும் அறுப்பின் பண்டியலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். அந்த வருஷம் அவனுக்கும் வரச் செளகரியப் படவில்லையென்று எழுதிவிட்டான். அமலோற்பவ அக்காள் எந்த வருஷமுமே, புருஷன் வீட்டுக்குப் போன பிறகு வந்தவளல்ல. எல்லாருடைய வீடுகளிலும் குதூகலம் பொங்கி வருகிறதை தன் வீட்டுத் தாழ்வான ஓலை வேய்ந்த திண்ணையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிலோமி. அன்றைக்கு அறுப்பின் பண்டியலின் எட்டாம் திருவிழா. அன்றைக்கு சாயந்தரம் கோயிலில் சப்பரம் புறப்படும். மரியம்மையின் சொரூபத்தை வைத்து பெரிய ஊர்வலமாக வருவார்கள். அன்றைய கட்டளை மீன்தரகமார்களான சாயபுமார்கள் செலவு. இந்தக் கட்டளை ரொம்ப காலமாக அங்கே நடந்து வருகிறது. தரகமார்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடனே செய்தார்கள். குரூசு வெளியே போயிருந்தான். பிலோமி போன வருஷ பண்டியலில் எட்டாம் திருவிழாவன்று கழிந்த சந்தோஷமான பொழுதுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பழைய நாட்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறபோது அதுதான் மனசுக்கு எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது.

ஊரிலே எல்லாரும் கோயிலின் முன்னே கொடி மரத்தைச் சுற்றி, சப்பரம் புறப்படுகிறதைப் பார்க்கிறதுக்காக பெருங்கூட்டமாகக் கூடியிருந்தார்கள். திருவிழாவுக்காக வந்திருந்த பலகாரக் கடைகள், வளையல் கடகளில் ஜேஜே என்றிருந்தது. எங்கும் சந்தோஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. கோயிலுக்குப் பின்னாலும், பக்கங்களில் வெளியூர்களிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் அவிழ்க்கப்பட்டுக் கிடந்தன. அந்த வண்டிகளின் கீழே ஜமுக்காளத்தை விரித்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிலோமியும் சாமிதாஸ¤ம் கூட்டத்தை விட்டு வெகுதூரத்துக்குக்கு விலகி வந்திருந்தார்கள். கடற்கரையோரமாகவே ஊரைத் தாண்டி, மணலில் நடந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த இடம் ஊரக்கு வெளியே கிளித் தோட்டத்துக்கு முன்னாலுள்ள கடற்கரை. தூரத்திலிருந்து ஜனங்களின் ஆராவாரம் கடல் அலைகளையும் மீறி இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததது. கோயிலைச் சுற்றிலும் போட்டிருந்த 'டியூப் லைட்'டின் வெளிச்சம் மட்டிலும் ஒரே வெள்ளைப் புகையாய்த் தெரிந்தது. அப்போது பெளணர்மிக்கு இன்னும் இரண்டு நாட்களிலிருந்தன. எதனாலும், 'எங்களைப் பிரிக்க முடியாது' என்பதுபோல இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு மணலில் வெகுநேரத்துக்குப் படுத்திருந்தார்கள். காலடியில் அலைகள் மட்டும் வந்து வந்து பார்த்துவிட்டு மறுபமடியும் கடலுக்குள்ளே சென்று கரைந்து போயின. கிளித் தோட்டத்து வண்டிப் பாதையினூடே நேரம் கழித்து திருவிழாவுக்குப் போகிற மாட்டு வண்டிகள் இரண்டொன்று தென்னை மரங்களிடையே தோன்றியும் மறைந்தும் போய்க் கொண்டிருந்தன. அதைத் தவிர வேறே யாருமில்லை.

இரண்டு பேரும் ஒன்றுமே பேசாமல் மூச்சோடு மூச்சு இரைக்கும் நெருக்கத்தில் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அத்தனை அந்நியோன்யத்திலும் சாமிதாஸ் ஒன்றுமே அத்துமீறிச் செய்துவிடவில்லை. அவளேதான் விரும்பி அவனுடைய கையைத் தன் தோளோடு பின்னிப் போட்டு இறுக்கியிருந்தாள். அவளுக்கு அப்படி இருப்பது ரொம்பவும் தேவையாக இருந்தது. அந்த நிலையிலும் அவனுடைய சுவாதீனமான நேர்மை அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அந்த க்ஷணமே அவளுக்குள் அவன் மீது எந்தவித நிபந்தனைகளும் இல்லாத தீவிரமான பிரியம் மனசெல்லாம் பொங்கித் ததும்பிற்று. அவனுடைய சட்டைக்குள்ளிருந்து வீசிய வியர்வை நெடியை அவள் ரொம்பவும் ரசித்தாள். அது அவளுக்கு மயக்கத்தைத் தருகிறதாக இருந்தது. ஒரு கோடி மல்லிகை மலர்களின் மணம் போல அதை அவள் உணர்ந்தாள். அது ஏன் அப்படியென்று அவளுக்குத் தெரியாது. அவள் அவனுடைய மீசையைத் தொட்டு தடவினாள். அவனுடைய மார்பு முடிகளில் முகத்தை வைத்து பிரேமையுடன் தேய்த்தாள். உலகமே அவனாகி அவள் கைப்பிடியில் இருக்கிறது போல எண்ணினாள். அப்போது தூரத்திலே தெரிகிற அவளுடைய ஊரில் அவளுக்கென்று ஒரு வீடு இருப்பதாக ஞாபகமே இல்லை.

வெகுநேரத்துக்குப் பிறகு அவளுடைய விருப்பத்தின் பேரிலேயே அவனுடைய வாயில் தன்னுடைய கருத்த உதடகளைப் பதித்து அவனிடமிருந்த ஜீவரசத்தை தாகத்துடன் பருகினாள். அப்போதும் அவனுடைய நேர்மை அவளை வெகுவாக இம்சித்துப் போட்டது. அந்த இரவிலேயே அவள் கடல் அம்மைக்கு அர்பபணமாகிக் கடலில் கரைந்து போக வேணுமென்று ஆசைப்பட்டாள்.

அவனுடைய தோளில் சாய்ந்தபடியே அவளும் அவனுமூ நடந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஊருக்கு மேலே தென்னந்தோப்புகளின் உயரத்தை பொய்யாக்கிக் கொண்டு வாணங்கள் வெடித்து, வர்ணக்கோலப் பொடிகளாகச் சிந்திக் கொண்டிருந்தது. சப்பரம் கோவில் தெருவை விட்டுப் புறப்பட்டதுக்கு அதுதான் அடையாளம்.

அவளால் எதையும் சகித்துக் கொள்ள முடியும். சாமிதாஸை மட்டும் யாருக்கும் கொடுக்கச் சம்மதியாள். அவள் ஆசைப்பட்டதிலே எவ்வளவு காரியங்கள் நடந்ததுண்டு, இதுமட்டிலும் நடந்து விட?

தூணில் சாய்ந்திருந்தபடியே மெளனமாக அழுது கொண்டிருந்தாள் பிலோமி. தெருவில் கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டிருந்தது. அவள் விளக்கை ஏற்றவில்லை. இன்னும் அவளுக்கு அந்த நேரத்தில் அந்த இருட்டில் உட்கார்ந்திருப்பது மிகவும் பிடித்திருந்தது. அப்படியே எல்லாவற்றையும் விழுங்குகிற இருட்டு அவளையும் விழுங்கி விடாதா என்று எண்ணினாள். படலிக் கதவைத் திறந்து கொண்ட யாரோ வருகிறதுபோல இருந்தது. குரூசு தான் கள்ளுக்கடையிலிருந்து திரும்பி வந்திருந்தான். 'வெள்ளியும் மறைஞ்சு போச்சே, கடலில் வீணாய் வல்லம் தவிக்க லாச்சே.....' என்ற பழைய பாட்டைப் பாடிக் கொண்டே அவளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டான்.

''உர்ல எல்லா வூட்லயும் ஒரே வெளக்கு மயமா இருக்கு. இந்தக்குட்டிக்கி ஒரு வெளக்குப் பொருத்தி வக்யதுக்குத் துப்பில்லாமப் போச்சே... ஏ...பிலோமி....''

இருமிக் கொண்டே முற்றத்துக் கட்டிலில் விழுந்தான். பிலோமி நீல் மல்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

''சேசுவே... எல்லா வேதனையையும் நான்தான் தாங்கணுமா? இந்த வயதில் இம்புட்டுக் கஷ்டங்கள் எதுக்காவக் குடுக்கீரு ஐயா......'' என்று வாய்விட்டுப் புலம்பினான்.

குரூசு இருமிக் கொண்டே வாயில் வந்தபடி பேசிக் கொண்டிருந்தான். ''அந்த தேவடியா மரியா இருந்தவரைக்கியும் வாத்திப் பெய கிட்டப் போயிச் செத்தா. இந்தக் குட்டி இந்த வயசிலேயே புருசனத் தேடிப் போயிட்டா போல இருக்கு. எந்த முண்ட எவங்கூட போனா என்ன? எனக்கு வல்லம் இருக்கு. கடல்ல மீனு இருக்கு....''

பிலோமியால் அவன் மீது கோபப்பட முடியவில்லை. கட்டிலில் புரண்டு கொண்டிருந்த அவனையே பரிதாபத்துடன் பார்த்தாள். எப்படியிருந்த வாழ்க்கை கடைசியில் கண்மூடித் திறக்கறதுக்குள் இந்தக் கதியாகிவிட்டது? ஒரு வருஷத்திற்குள் என்னவெல்லாம் நடந்து விட்டிருக்கிறது? பிலோமிக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. விளக்கைப் பொருத்தாமலேயே நடந்து போய் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பழைய போர்வைய எடுத்து வந்து அவனைப் போர்த்தினாள்.

எல்லாவற்றையும் ஒரு சிறிதாவது மறக்க வேண்டுமென்று நினைத்து வீட்டைப் பூட்டி, சாவியை வாசல் நிலைப்படியில் வைத்துவிட்டு சேலையைத் தோளில் சுறூறி இழுதூது தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தெருவுக்குப் போனாள். கிழக்கே தெருத் திருப்பத்தில் நாலைந்து நாய்கள் கூடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சிறிது நேரம் அவளையறியாமலேயே அவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். ரஞ்சியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. நிச்சயம் அவள் திருவிழாவுக்கு வந்திருப்பாளென்று தெரியும். ரஞ்சியின் வீட்டினுள் முன்னுள்ள மாடக்குழியில் ஒரு பெட்ரூம் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் ரஞ்சியின் வயசான பாட்டி, வீட்டினுள் அவள் நுழைவது கூடத்தெரியாத நிலையில் கட்டிலில் காலைத் தொடங்கப் போட்டுக் கொண்டு வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். ரஞ்சியுடைய பாட்டிக்குக் கொஞ்சம் காது மந்தம். பிலோமிக்கு அந்த நிலையிலும் அந்தப் பாட்டியைக் காவலாய் அவர்கள் வைத்து விட்டுப் போயிருந்ததை எண்ணி சிரிப்பு வந்தது. மெதுவாகச் சென்று அவள் காதருகே குனிந்து ''பாட்டி, ரஞ்சியெல்லாம் எங்க?'' என்று கேட்டாள்.

''நீ ஆரு மோள?''

''நாந்தாம் பிலோமி....''

''ஆரு மரியம்மைக்க கடேசி மவளா?''

''ஆமா, ரஞ்சி எங்கே?''

''ஆரத் தேடுதா? ஓஞ் ஸ்நேகிதியத் தேடுதியா? அவ புருஷங்காரனோட கோயிலுக்குப் போயிருக்கா. இங்கேயும் வூட்ல எல்லாரும் போயிருக்காவ. நநாந்தான் சாவமாட்டாத கெளவி தலையை ஆட்டிகிட்டு கெடக்கேன். நீ என்ன இம்புட்டு நேரங்கழிச்சுப் போறா!''

பிலோமி ரொம்பக் கஷ்டப்பட்டு மனசை அடக்கிக் கொண்டு தாழ்ந்த குரலில், அப்ப நா போயிட்டு வாரேன் பாட்டி....'' என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள். அவள் கோயிலுக்குப் போகப் பிரியப்படவில்லை. அங்கே போனால் அவளால் பழைய நினைவுகளை மீண்டும் தவிர்க்க முடியாமல் ஆகிவிடும். எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போய்க் கொண்டிருந்தவர்களுடன் கூட நடந்தாள். மனம் மட்டும் அவளிடமில்லை. ஏதோதோ நினைவுகள். அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. திடீரென்று, ''ஆரு, பிலோமியா?'' என்ற குரலைக் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்டாள் பிலோமி. அவள் வாத்தியின் வீட்டு முன்னால் நின்றிருந்தாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

''உள்ள வாயேன். எதுக்காவ வாசல்ல நிக்கா? நீ கோயிலுக்குப் போவலையா?''

அவருக்குக் கீழ்ப்படிந்து போவது போல அவர் பின்னே தலைகுனிந்து சென்றாள். ''கோயிலுக்குப் போகல'' என்றாள்.

''நீ எப்படி இவ்வளவு நேரத்துக்கு இங்க வந்தா? அப்பச்சி வூட்ல இல்லயா?''

''இருக்காவ. என்னமோ வரணமின்னு தோணிச்சி; வந்தேன்.''
''ஏன் ஒரு மாதிரியா இருக்கா?''

''ஒண்ணுமில்ல....''

''இல்ல, நீ சந்தோஷமட்டு இல்ல.... என்ன கஷ்டம் வந்திச்சி? மனசில் இருக்யத அடுத்த ஆளுகிட்ட வுட்டுச் சொன்னாதாஞ் சரி.''

அன்றைக்கு இரவு வெகுநேரத்துக்கு பிலோமியும் அவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு அவருடன் தன் எல்லா அந்தரங்கங்களையும் சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்கென்று துக்கப்படவும் சந்தோஷப்படவும் கூடிய ஒரு புதிய மனுஷர் கிடைத்திருக்கிறார். இதற்காக அவள் மிகுந்த சந்தோஷப்பட்டாள். அவர் அவளுடைய மனசில் ஏதோ ஒரு இடத்தில், இதுவரையில் எந்தக் காலடியும் விழுந்திராத ஒரு இடத்தில் நடந்து போகிறதை உணர்ந்தாள். அவருடைய வீட்டு அலமாரியில் இருந்த கேக்குகளையும், பழங்களையும் இரண்டு பேரும் சாப்பிட்டார்கள்.

கோயில் சப்பரம் இறங்குகிற நேரத்துக்குப் பிலோமி அங்கிருந்து புறப்பட்டாள். அவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவளுடன் புறப்பட்டார். அவர் பூட்டைப் பூட்டும்போது தன்னுடைய சட்டையை அவளிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். அது பிலோமிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பூட்டி விட்டு சட்டையை வாங்கிப் போட்டுக் கொண்டார். அவருடன் கூட நடக்கிற போது ரொம்ப காலமாகப் பழகின ஒருவருடன் போவது போல இருந்தது பிலோமிக்கு. அவள் வேண்டாமென்று சொல்லியுங்கூட, அவர் அவளோடயே அவள் வீடு வரையிலும் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அவர் போகிறதையே பார்த்திருந்து விடடு உள்ளே போனாள். குரூசு இன்னும் கட்டிலில் தான் சவத்தைப் போலக் கிடந்தான். அது அவளுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்து கதவைத் திறந்து குதூகலத்துடன் விளக்கைப் பொருத்தினாள். சாயந்தரம் இருந்த மனநிலைக்கும், இப்போதிருக்கிற சந்தோஷத்துக்கும் அவளே நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். எல்லாவற்றையுமே மறந்து போனால் எவ்வளவு அற்புதம் மனசினுள் நிகழ்ந்து விடுகிறது!

அவளுக்கு விசிலடிக்கத் தெரியும். சின்ன வயசில் ரஞ்சியும் பிலோமியும் தனியே எங்காவது போகிற போது விசிலடித்துக் கொண்டே போவார்கள். ரஞ்சி விசிலில் பாட்டெல்லாம் படிப்பாள். ஆனாலும் பிலோமிக்கு நன்றாகவே விசிலடிக்க வரும். மெலிதாய் விசிலடித்துக் கொண்டே பின் வாசலுக்குப் போனாள். கடலுக்குப் போகிற நாலைந்து பேர்கள் வலைகளைச் சுமந்து கொண்டு பேசிக் கொண்டே போனார்கள். குரூசுவால் இனிமேல் அன்றைக்கு கடலுக்குப் போக முடியாது. சிறிது நேரத்தில் விடிந்து விடும். காலையில் இதையெல்லாம் ரஞ்சியிடம் சொல்ல வேண்டும். ரஞ்சி! அடீ ரஞ்சி! காலை வரையில் காத்திருக்க வேண்டுமேடீ......

வானத்தைப் பார்த்தாள். நிலவுத் துண்டு மேகங்களினூடே நடந்து கொண்டிருந்தது. எவ்வளவு துயரத்திலும் நிலவை பார்த்தால் மனம் சாந்தி பெறும். தென்னந்தோப்புகளினூடே கோயில் தெரிகிறது. பண்டியல் கடைகளில் சிலவற்றில் கூட்டம் இருக்கிறது. கடலின் ஆரவாரத்தை ஆசையுடன் கேட்டாள். அவள் வெகுநாட்களுக்கு அப்புறம் அப்படி இருக்கிறாள். இனி எந்த கஷ்டமும் அவளை ஒன்று செய்துவிடாது போல நம்பினாள்.

மறக்காமல் ஜெபம் செய்துவிட்டுப் படுத்தாள். படுக்கும்போது ஒரு கணத்துக்கு அவளுடைய அம்மையின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. அவள் இப்போது இருந்தால் பிலோமி வாத்தியுடனிருந்து விட்டு வந்ததை விரும்புவாளா, நிச்சயம் விரும்புவாள் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

தூங்குகிற வேளையில் கடலின் ஆரவாரத்தைக் கேட்டுக் கொண்டே படுத்தால் காலையில் ரொம் சந்தோஷமாக இருக்கும் என்று மரியம்மை பல தடவை சொல்லியிருக்கிறாள். அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப் போல, வாத்தியைப் போல வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசிர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆராவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பிலோமி கடல் அலைகளின் பெருத்த சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போனாள்.

வண்ணநிலவன்
Share: 




© Copyright 2020 Tamilonline