Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
விழா மாலைப் போதில்
- அசோகமித்திரன்|ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlargeஅசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதை தொகுப்பில் 'விழா மாலைப் போதில்' என்ற சிறுகதையிலிருந்து...

ஜெயதேவி, "வாங்க" என்றாள்.

"நீயா?" ஜெயதேவி என்று தெரிந்தும் கேட்டேன்.

"ஆமாம், சார் உங்க ரேகா..."

"இல்லை. நீ நீதான் . என்னை சீ·ப் மினிஸ்டர் அழைச்சதா அல்லவா அந்த விஐபி ஆபிஸர்

சொன்னார்?"

"சீ·ப் மினிஸ்டர் அழைச்சாத்தான் வருவீங்களா?"

" என்னை யார் அழைச்சது?

"நான் தான்..."

''நீயா? அடிப்பாவி! இப்படிப் பொய் சொல்லியிருக்கியே...?''

''போகாதீங்க சார். போகாதீங்க. எவ்வளவு நாள் கழிச்சு நாம பார்க்கறோம்? தயவுசெய்து போகாதீங்க...''

''ரேகா. நான் இங்கே ஒரு பொறுப்பை ஏத்துண்டு வந்திருக்கேன்.''

''என்னைப் பார்க்கறதும் ஒரு பொறுப்பா வைச்சுக்கக்கூடாதா, சார்?''

''இன்னும் பதினைந்து நிமிஷத்திலே ·பிலிம் பெஸ்டிவல் இனாகுரேஷன் நடக்கப் போறது. நானும் போகணும்....''

ஜெயதேவி ஒடி வந்து என் கையைப் பற்றிக் கொண்டாள். ''இரண்டு நிமிஷமாவது இருக்கலாமல்லவா...?''

நான் நின்றேன்.

''நான் ரொம்ப நாளா உங்களைத் தேடிண்டிருக்கேன்...''

நான் பேசவில்லை.

''ஆறு வருஷத்துக்கும் மேலா இருக்கும்....''

நான் அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை.

''சீதா போனபோது நான் பம்பாயில் இருந்தேன்.....''

''நீயாவது வெளியூரில் இருந்தே! நான் சென்னையில் இருந்ததே முழு நாள் கழிச்சுத்தான் தெரிந்தது....''

''அம்மா எப்படி இருக்காங்க?''

''ஏன், நீ வீட்டுக்கு வந்திருக்கலாமே?''

''நீங்கதான் வேற எங்கேயோ போயிட்டீங்களாமே!''

''இருந்தால் என்ன..? உனக்கு விசாரிச்சுச் சொல்ல மனுஷங்க கிடையாதா....?''

அவள் ஒரு கணம் பேசாமல் நின்றாள். பிறகு சொன்னாள். ''நான் எப்படி வருவேன்? எப்படி வர முடியும்?''

நான் கைகளை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தேன்.

கதவை ஒருமுறை தட்டியபிறகு ரங்கநாயகி வந்தாள். ''டயத்லே எல்லாரும் வந்தாச்சு... மேடம், உங்களுக்காக காத்திருக்காங்க....''

ஜெயதேவி என்னிடம், ''இது முடிந்தபிறகு நீங்கள் மறுபடியும் வரவேண்டும்'' என்றாள்.

நான் புன்னகை புரிந்தேன்.

''இன்னி ராத்திரி இங்கேதான் இருக்கேன்.... எங்கே மாடம்?'' அவள் ரங்கநாயகியைக் கேட்டாள்.

''ஹோட்டல் பந்ஜாரா,'' என்று ரங்கநாயகி சொன்னாள்.

''நீங்க வரணும். நான் உங்களுக்காகவே காத்திருப்பேன்.''

''பார்க்கலாம்...''

''அப்படி சொல்லக்கூடாது. கட்டாயம் வரணும்....''

இந்தியாவின் ஹைபர் சூப்பர் டார்லிங் ஸ்டார் கூப்பிட்டால் நான் வராமல் இருக்க முடியுமா? ஆனால் உன்னை யார் தனியாக விடுவாங்க....?

''அது என் கவலை. பத்து மணிக்கு வந்துடுங்க....''

''பார்க்கலாம்....''

''அப்படிச் சொல்லிவிடாதீங்க சார்......''

அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது.
அறை வெளியே நிறைய நடமாட்டம் கேட்டது. நான் வெளியே வந்தேன். ஒரு அதிகாரி என்னைத் தடுத்து நிறுத்தி, ''இனாகுரேஷனுக்கு முந்தி ஒரு இன்டர்வியூவும் கிடையாது என்று உனக்குத் தெரியாது? உன் கார்டைத் தடுத்து நிறுத்தி விடுகிறேன் பார், நீ ·பெஸ்டிவல் உள்ளேயே நுழைய முடியாது'' என்றான்.

அப்போது புடைசூழ ஜெயதேவியும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்து, ''மறக்காதீங்க சார். கட்டாயம் ஹோட்டலுக்கு வாங்க'' என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனாள். அந்த அதிகாரி அவளைப் பின் தொடர்ந்து போனான்.

துவக்க விழா கலாட்டாவும் கூத்தாகவும் இருந்தது. சாலையில் போலீஸ்காரர்கள் கூட்டத்தைக் கலைக்க தடியடி செய்திருக்கிறார்கள்.

மேடையில் அடுத்தடுத்து அபத்தமும் உளறலும். சினிமாத்துறைத் தலைவர்கள் கையை வீசிப் பிதற்றினால் மத்திய மாநில மந்திரிகள் அசையாமல் நின்று பிதற்றினார்கள். இதெல்லாம் எனக்குப் பழக்கமாகிப் போனவை. மந்திரி ஒருவர் காது கொடுக்கக் கிடைத்தால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு சினிமாப் பிரமுகர் தவறாமல் சினிமாத் தொழிலே நசித்துச் செத்துக்கொண்டிருக்கிறது என்றும், அந்த மந்திரி உடனே அத்தனை வரிகளையும் ரத்து செய்து அவர்கள் அடுத்த நிமிடம் உயிர் வாழ அரசாங்கம் இன்னும் உதவிகள் புரிய வேண்டும் என்பார்கள். மந்திரிகள் தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம், எப்படி மூலை முடுக்கெல்லாம் சினிமாவும் சினிமா நடிகர்களும் பாட்டுகளும் ஊடுருவி இருக்கின்றன என்றும், நாட்டின் அத்தனை இடர்பாடுகளையும் தீர்க்கும்படியான கருத்துப் படங்களையே சினிமாத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பார். அதே மந்திரி மேடையில் நடிகை என்று ஒருத்தி இருந்துவிட்டால், அவர் உரையில் பாதி அவளுக்குத்தான் என்பதுபோலத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பேசுவார். அந்த நடிகை எழுந்தால் அவர் எழுந்துவிடுவார். அவள் அவருக்கு மாலை அணிவித்தால் அவருடைய உயரம் அரை அடி உயரும் அல்லது குறையும். இதெல்லாம் அங்கிருப்போருக்குத் தேச முக்கியத்துவம் உடையதாகத் தோன்றக் கூடும். உண்மையிலேயே அதுதான் உண்மையோ என்னவோ?

என் கண்களுக்கு எல்லாமே அபத்தக் களஞ்சியமாகத்தான் தோன்றியது. அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அவரும் தடுமாறினார். அவருக்கு அது திரைப்பட விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சி என்றே மறந்துவிட்டது. சட்டென்று நினைவுக்கு வந்து திரைப்பட விழாக்களின் இன்றியமையாதத் தன்மையை அவர் எப்போதும் உணர்ந்ததாகக் கூறினார்.

முன்னர் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் வேறோர் நகரில் தேவிகாராணி பேசியது எனக்கு நினைவுக்கு வந்தது. விழாவுக்கு வராத அயல்நாட்டு டைரக்டர்களை எல்லாம் அவள் வரவேற்றாள். அந்த டைரக்டர்கள் வரவில்லை, அவர்கள் படங்களைத்தான் காட்டப் போகிறது என்று விழா நெறியாளர் அவளுக்கு மேடையிலேயே சொன்னார். ஏன் எனக்கு முன்னமேயே இதெல்லாம் சொல்லவில்லை என்ற அவள் சிறிது கடுகடுத்தாள். ஒரு வைபவத்துக்காக யாரையாவது அழைத்தால் அந்த நபரிடம் முன்கூட்டியே முக்கிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும் என்றாள். எனக்கு அஷோக்குமாரே தேவிகாராணியாக மாறிவிட்டது போலிருந்தது. அவரும் அவளும் சேர்ந்து நடித்த 'அச்சுத் கன்யா' கண்முன் தோன்றியது. செக்கச் செவேலென்று இருக்கும் வதனத்துடன் படிப்படியாக வாரிப் பின்னப்பட்ட கறுத்த கேசத்துடன் அவள் ஹரிசனப் பெண்ணாக நடித்தாள். அப்போது அவள் காதலன் யாராக இருக்க முடியும்? பிராமணப் பையனாக அஷோக்குமார். யாராவது தேவிகாராணிதான் பிராமணப் பெண், அஷோக்குமார் ஹரிஜன இளைஞன் என்று கூறியிருந்தால் தயங்காது நம்பிவிடலாம். அந்தப் படத்தை ஒரு ஜெர்மன் டைரக்டர் டைரக்ட் செய்திருந்தார். ஆதலால் தேவிகாராணியும், அஷோக்குமாரும் சர்வதேசத் திரைப்பட விழாவைத் துவக்க மிகவும் பொருத்தமானவர்கள். பிராமணப் பையன், ஹரிஜனப் பெண் எப்படிப் பார்த்தாலும் காதல் நிறைவேறாது. 'அச்சுக் கன்யா'வில் நிறைவேறவில்லை. ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கைகூடிவிடும் ஒரே ஒரு வில்லன் எதிர்க்க எட்டுப் பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள். இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான். முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்துகொள்வான்.

அஷோக்குமார் மேலும் மேலும் தடுமாற எனக்கு 'அச்சுத் கன்யா' அப்படியே சென்னை வரையில் விரிவடைந்தது.

ஒரு வழியாக அஷோக்குமார் அவர் பேச வேண்டியதையும் பேச வேண்டாததையும் பேசி முடித்துவிட்டார். அடுத்துக் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். இந்த சினிமாக்காரர்களுக்கு புத்தி ஏதாவது இருக்கிறதா? ஒரு ஆர்க் லாம்ப்பை ஏற்றச் சொல்லக்கூடாது? குத்துவிளக்காம் குத்துவிளக்கு! எல்லாம் பத்திண்டு எரியும்.

சூட்டும் டையும் அணிந்த அஷோக்குமார் மேடையோரத்தில் வைக்கப்பட்ட பெரிய குத்துவிளக்கருகே சென்றார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து திரி. ஒரு திரியை ஏற்றினால் போதாது. ஐந்தையும் ஏற்றவேண்டும்.

சூட்டும் டையும் அணிந்த திரைப்பட விழா அதிகாரியும் குத்துவிளக்கருகே சென்றார். அது போதாது என்று மாநில முதலமைச்சர். அவர் ராஜரிஷி, அல்லது பக்கிரிராஜா அல்லது கோலோச்சும் சந்நியாசி. அவருடைய கஷாயத்தைவிட நெற்றியில் தரித்திருந்த குங்குமப் பொட்டு பயமுறுத்தியது.

அஷோக்குமார் குத்துவிளக்கை ஏற்றத் தயாராக இருந்தார். ஆனால் அவராக ஏற்றிவிடக் வடாது. ஜெயதேவி துணைபுரிந்தபடிதான் அவர் ஏற்ற வேண்டும். அப்படித்தான் செய்தி ஒலிபரப்பு இலாகாவும், திரைப்பட விழா நெறியாளர் அலுவலகமும், மந்திரியும், முதல் மந்திரியும் நிர்ணயித்தார்கள். ஜெயதேவிக் குச்சியை கிழிக்க அதை வாங்கிக் கொண்டு அஷோக்குமார் திரிகளை ஏற்றுவார். ஆனால் நெருப்பை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் வாங்கலாமா? பெருத்த அபசகுனமாச்சே! அதிலும் எடுத்ததற்கெல்லாம் சகுனமும் ஜோசியமும் பார்க்கும் சினிமாக்காரர்கள் விழாவில் அபசகுனமாக ஒன்றும் நடக்கக்கூடாது. முதலிலும் முடிவிலும் திருப்பதி சாமிக்குப் பூஜை நடத்தியாக வேண்டும். அந்த நாளில் வேறு எந்த கோயிலருகே சாமியார் பிரபலமாயிருக்கிறாரோ அவருடைய ஆசியைக் கோர வேண்டும். இங்கே ஹைதராபாத் பிரபல சாமியார் யார்?

எங்கிருந்தென்ற தெரியாமல் ஜெயதேவி மேடையில் தோன்றினாள். முன் நான்கைந்து வரிசைகள் தவிர இதரப் பார்வையாளர் மத்தியில் கரகோஷமும் சீட்டியடித்தலும் நிகழ்ந்தன. ஜெயதேவி சிலைக்குரிய முகத்தை மிகுந்த தேர்ச்சியோடு நிலைத்து வைத்துக் கொண்டிருந்தாள். இதைத்தானே 'சஸ்டெயிண்ட் எக்ஸ்பிரஷன்' என்பார்கள்?

ஒரு பெண்மணி மெழுகுவர்த்தி ஒன்றைக் கொண்டுவந்தாள். அது சிவப்பு வர்ணத்தில் முறுக்கேறியதாக இருந்தது. ஜெயதேவி நெருப்புக் குச்சியால் பற்ற வைக்க முயன்றாள். மூன்று குச்சிகளாலும் முடியவில்லை. அஷோக்குமார் முதல் குச்சியிலேயே மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்துவிட்டார். எவ்வளவு லட்சம் சிகரெட்டுகளைப் பற்ற வைத்திருப்பார்? விழா நெறியாளர்கள் கைகாட்ட அஷோக்குமார் குத்துவிளக்குத் திரிகளைப் பற்ற வைப்பதில் முனைந்தார். ஒன்று எரித்தால் முந்தையது அணைந்தது. கடைசியாக எல்லாத் திரிகளையும் ஏகமாக வெளியே இழுத்துப் பற்ற வைக்க ஒரு தீவட்டி போல எரிந்தது. நான் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து 'ஹாஹா' வென்று சிரித்தேன். அரங்கம் முழுவதும் கரகோஷம் செய்தது. ஜெயதேவி முதலில் என்ன செய்வதென்று நின்றாள். அப்புறம் அவளும் கைதட்டினாள்.

அசோகமித்திரன்
Share: 




© Copyright 2020 Tamilonline