Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மோக்ஷப் பாதை
- மீ.ப. சோமு|ஜனவரி 2016|
Share:
(தலைப்பைப் பார்த்ததும் மோக்ஷமாவது, பாதையாவது, எல்லாம் வெறும் பொய் என்று சொல்லுகிற மெய்யன்பர்களுக்குத் தலைப்பிலேயே ஒரு விஷயத்தைக் கூறிவிட விரும்புகிறேன். இந்தக் கதை பொய்; இதில்

வரும் பாத்திரங்கள் பொய்; இதில் தோன்றும் 'நரக பூமி', 'ஸ்வர்க்க லோகம்' எல்லாம் வாஸ்தவமாகவே பொய்கள்! இந்தப் பொய்யான உலகத்தில் இவை யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல என்ற ஒரு

உண்மையை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டு இனிப் பொய்யைத் தொடருவோம்)

1

ஓய்வுபெற்ற டெப்யூடி கலெக்டர் உலகநாதபிள்ளை, வீட்டுக்கதவைத் திறந்தார் - அதாவது, திறக்க முயன்றார்! பூட்டு 'மக்கார்' செய்தது!

"பூட்டைத் திறப்பதும் கையாலே - மனப்
பூட்டைத் திறப்பதும் மெய்யாலே
வீட்டைத் திறக்க முடியாமல் - விட்ட
விதி விதி என்பார் ஞானப் பெண்ணே!"

என்று பாடிய வண்ணம் அந்தச் சமயம் பார்த்து வாசல் முன்னால் வந்து நின்று கையை நீட்டினான் ஒரு கால் இல்லாத பண்டாரம்.

"போடா, போ. ஆறு அவுன்ஸிலே நீ வேறே பங்குக்கு வந்துட்டாயா?" என்று அவனைத் துரத்தியவாறு மீண்டும் பூட்டிலே கவனத்தைச் செலுத்தி வீட்டைத் திறக்க முயன்றார் ஸ்ரீமான் பிள்ளை.

இந்த முப்பத்தைந்து வருஷ ரெவின்யூ வாழ்க்கையில் இதுவரை அந்தப் பூட்டை அவர் பூட்டியதும் கிடையாது; திறந்ததும் கிடையாது. தம்முடைய விதியின் நிழலுக்குத் துணைநிழலாகத் தம்மை விடாது பின்தொடர்ந்து

வந்த வில்லைச் சேவகனோ இந்த மாதிரி சிறிய காரியங்களையெல்லாம் இதுவரை செய்து வந்திருக்கிறான். ஆனால் இப்பொழுது?

இப்பொழுது ஸ்ரீமான் உலகநாதபிள்ளை ஓய்வுபெற்று விட்டார். இனிமேல் விதியின் நிழல்தான் அவரைப் பின்தொடர வேண்டுமே அல்லாமல், வில்லைச் சேவகன் வரமாட்டான். இன்று காலை மனைவியைத் தாயார்

வீட்டுக்கு அனுப்பும்போது அந்த ட்ரங்குப் பெட்டியைக் கூட அவரேதான் தூக்கி ரயில்வண்டிக்குள்ளே வைத்தார். வண்டி வந்ததும் பெட்டி படுக்கைகளை ஏற்றி வைத்துவிட்டுப் போகும்படிச் சொன்னதைக்கூட அந்தப் போர்ட்டர்

லக்ஷியம் செய்யவில்லை! வில்லைச் சேவகனா பக்கத்தில் நிற்கிறான்?

"ஹூம்! அந்த வில்லை இருக்கிறதே வில்லை.. அதற்குள்ள மதிப்பே தனிதான்!" என்று சொல்லிக்கொண்டே தமக்குள் ஒரு சிரிப்புச் சிரித்தார் பிள்ளை. பூட்டு திறந்துகொண்டது!

2

மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு வந்த அந்த நிமிஷத்திலிருந்து உலகநாத பிள்ளை இந்த வாழ்க்கையின் ஆடம்பரங்களை எண்ணி எடைபோட ஆரம்பித்தார். கடந்த முப்பத்தைந்து வருஷமும் அவர் எத்தனை

அந்தஸ்துடன் இந்த 'ரெவின்யூ' என்ற கருங்கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் வளைய வந்திருக்கிறார்! எத்தனை பேர் மேல்துண்டை இறக்கிக் கையிலே தொங்கப் போட்டுக்கொண்டே அவரை வளைய வளைய

வந்திருக்கிறார்கள், இந்த முப்பத்தைந்து வருஷத்திலும்! இனிமேல்?

உலகநாத பிள்ளை யோசனை செய்ய ஆரம்பித்தார், மனிதனுக்கு மதிப்பா அல்லது அவனுடைய உத்தியோகத்துக்கா என்று. எதிரே காப்பி டம்ளரைக் கொண்டுவந்து 'டக்'கென்று வைத்துத் தம்முடைய ஏகாந்த

விசாரத்துக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மனைவியோ ஊரில் இல்லை. எனவே பிள்ளையவர்களின் யோசனை படிப்படியாக அதிகரித்து மனிதன் என்ற இந்த உடம்புக்கு என்ன மதிப்பு என்ற ஞான

விசாரத்திலே சென்றது. "இந்த இக உலகம் மனிதனுடைய உத்யோகத்தையே மதிக்கிறது. உண்மையில் மனிதனை அவனுடைய உண்மையான மதிப்புக்காக மதிப்பிடுவது இகலோகத்தில் இல்லை; அது அடுத்த

உலகத்திலேதான்!" என்று நினைத்தார் ஸ்ரீமான் உலகநாதர்.

ஆமாம். மனிதனுக்கு மதிப்பு அடுத்த உலகத்திலேதான். அப்படியென்றால் அடுத்த உலகத்தில் தன்னை மதிக்கும்படி இதுவரை தான் என்ன காரியம் செய்திருக்கிறோம்?

மளிகைக்கடையில் வருஷ முடிவில் 'ஐந்தொகை' எடுப்பது போல தனக்குள்ளேயே இந்த முப்பத்தைந்து வருஷத்திற்கும் ஒரு வரவு செலவு போட்டுப் பார்த்தார். காலை ஒன்பது மணிக்கு டிபன் பாக்ஸுக்குள் ரெண்டு

இட்டிலியைத் திணித்து வைத்துக் கொண்டு புறப்படுவதிலிருந்து இரவு ஏழு மணிக்குத் தலைக் கிறக்கத்துடனும் இரண்டு கட்டுப் பழைய ஃபைல்களுடன் திரும்புகிறதுவரை, பாப புண்ணியங்களை வரவு செலவிலே அடக்கிக்

கணக்குப் போட்டார்! ரெவின்யூ இன்ஸ்பெக்டராக, "For approval" போட்டதிலிருந்து முதல் வகுப்புத் துணை மாஜிஸ்ட்ரேட் ஆகி ஜட்ஜ்மெண்ட்கள் எழுதியதுவரை ஒரு 'ஐட்டம்' நினைவுகளை ஓடவிட்டுப்

பார்த்தார் பிள்ளை. முடிவில் என்ன செய்தார்?

அன்று மாலை ஸ்ரீமான் உலகநாத பிள்ளை கோவில் வாசலிலே பரத்திப் போட்டிருக்கும் ஞானக் கடையிலிருந்து ஒரு 'ஞானக் கோர்வை' (கோவைக்கு ஒரு 'இர்'ரன்னா போட்ட திருத்தமான பதிப்பு!) வாங்கிவந்தார்.

அந்த நிமிஷத்தில் ஆரம்பித்து, அவருடைய நடை, உடை, பாவனைகள் எல்லாம் மாறத் தலைப்பட்டன!

"தூலத்தை விட்டுவி டாயாகில் - அதில்
சூட்சுமத்தைக் காண முடியாது
பாலத்தில் ஏறி நடந்தக்கால் - பெரும்
பாதை இதல்லவோ ஞானப் பெண்ணே!"

என்பார்! அப்படியே கண்ணீர் வடிப்பார்! "இந்த உலகம் பொய்" என்று ஒருமுறை சொல்வார். "இந்த ஆசை பொய்!" என்பார். "இந்த வீடு பொய். இந்த உடம்பு பொய். நான், இதோ என் மனைவிக்கு எழுதுகிற

இந்தக் கடிதம் பொய்!" என்பார். அடு்த்த கணம் அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு, "இந்த பௌண்டன் பேனாவும் பொய்!" என்று சொல்லி விம்மி விம்மி அழுவார்.

"பாம்பிருக்குது புற்றுக்குளே - சக
பந்தம் இருக்குது நெஞ்சுக்குள்ளே
வீம்பை அடக்கி உயர்ந்தாக்கால் - பசி
வேடிக்கை பார்க்கலாம் ஞானப் பெண்ணே!"

என்று பாடிப்பாடி, ஸ்ரீமான் உலகநாதப் பிள்ளை அவர்கள், நாட்கணக்கில் மனைவிக்குக் கடிதம் எழுதாமலே இருந்து விடுவார்!
3

அன்று கடைசி வெள்ளிக்கிழமை. 'வைகறைத் துயில்' எழுந்து ஸ்நானத்தை முடித்துவிட்டுப் பிள்ளையவர்கள் பூஜை மடத்திலே உட்கார்ந்து ஞானக் கும்மியைப் பாராயணம் பண்ண ஆரம்பித்தார்.

"குதிரை கட்டிய லாயத்திலே - மனக்
கோட்டையி லேசந்தைப் பேட்டையிலே
எதிரிதான் வந்து தட்டுகிறான் - இதை
ஏதென்று கேளடி ஞானப் பெண்ணே!"

என்று சொல்லி முடித்திருப்பார். யாரோ கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. கும்மியைக் கொஞ்சம் நிதானித்தார். சத்தம் நிற்பதாகக் காணோம். 'இதென்னடா சனியன்' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்.

கடைசி வெள்ளிக்கிழமை அல்லவா? 'சனியன்கள்' என்று சொல்லிக்கொண்டே வந்த பிள்ளையின் கண்முன்பு ஒரு அச்சடித்த தாளை நீட்டினான் அந்த ஊமை. வில்லைச் சேவகனே விரட்டி அடித்திருப்பான் இந்த

ஊமைகளை. இப்பொழுது என்ன செய்வது! கதவையே தட்டிப் பிச்சை கேட்கிற நிலைமைக்கு வந்துவிட்டது தம்முடைய பிழைப்பு!

"போடா போ! போ!" என்று சொல்லிக் கதவைப் படாரென்று சாத்திவிட்டு உள்ளே வந்தார். மறுபடியும் ஞானக்கும்மியைத் தொடர்ந்தார்.

"குரு விருப்பது நெஞ்சுக்குள்ளே - மனக்
கோணல் அறுப்பதும் தன்னுக்குள்ளே"

என்றார்.

"ஸா...ர்" என்று யாரோ கூப்பிட்டார்கள். உலகநாதர் இந்தத் தடவை நிதானிக்கவில்லை. பாட்டை மேலும் ஒருமுறை மடக்கினார்.

"குரு விருப்பது நெஞ்சுக்குள்ளே..."

"ஸா......ர்" என்று மறுபடியும் கேட்டது குரல். உலகநாதர் ஒரே எரிச்சலோடு எழுந்தார். கதவைத் திறந்தார்.

'க்ஷயரோக நிவாரண நிதி' என்று சொல்லிக்கொண்டே ஒரு ஆசாமி தகர உண்டியலைக் கிலுக்கினான். ஸ்ரீமான் பிள்ளை அவனை முறைத்துப் பார்த்தார்.

'தீர யோசித்தால் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு க்ஷயரோகிதான்' என்று அந்த உண்டியலைப் பார்த்தவாறு ஒரு மகத்தான உண்மையைத் தூக்கி எறிந்துவிட்டு கதவை ஓங்கி அடைத்தார்! மறுகணம்

"ஞானக்கோவை" ஒவ்வொரு பக்கமாகச் சுழல ஆரம்பித்தது.

4

"பிள்ளையவாள்! இப்படி, இப்படி" என்றான் அந்த மனிதன். அவன் காட்டிய பாதையைப் பார்த்தார். 'நரகபூமி' என்று கொட்டை கொட்டையாக எழுதி ஆறடி உயரக் கம்பத்திலே, இரண்டு கை அகலத்தில்

மாட்டியிருந்தது. பாதையும் விசாலமான பாதையாக இருந்தது!

"அட, தள்ளப்பா... நான் ஸ்வர்க்கத்திற்குப் போகிறவன்" என்றார் பிள்ளை உதாசீனமாக.

"இல்லை இல்லை, உங்கள் பாதை இதுதான் - நல்ல விசாலமான பாதை" என்றான் அவன் மறுபடியும்.

உலகநாத பிள்ளைக்கு அவனை எங்கோ பார்த்த ஞாபகம். தலையைச் சொறிந்தார். நினைவு வந்து விட்டது. அன்றைக்குப் பூட்டைத் திறக்க முயன்று தவித்தபோது ஞானக்கும்மி பாடிப் பிச்சை கேட்டானே அதே நொண்டிப்

பண்டாரந்தான் இவன்.

"போடா, உனக்கென்ன தெரியும்? நான் பழைய உலகநாத பிள்ளை இல்லை. ஞான வெட்டியான், ஞான மாஜிஸ்ட்ரேட் உலகநாதன்!" என்று சொல்லிக்கொண்டே அந்தச் சின்னஞ்சிறு ஸ்வர்க்கப் பாதையிலேயே

திரும்பி மேலே நடந்தார்.

யாரோ மேலே தடுத்தார்கள்.

ஏறிட்டுப் பார்த்தார். ஒரு ஊமை. 'போகாதே!' என்று வாய் திறந்து வார்த்தைகளினால் சொல்லக்கூட முடியாத ஊமை. கையைக் காட்டி வழிமறித்தான் அவன். உற்றுப் பார்த்தார் பிள்ளை; அன்று அச்சடித்த தாளை

நீட்டிக் காண்பித்துப் பிச்சை கேட்டானே அதே பேர்வழி.

ஓய்வுபெற்ற முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் உலகநாத பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்தது. இந்த வாயற்ற பயல் நம்மை என்ன ஸ்வர்க்கத்துக்குப் போகாதே என்று தடை செய்வது என எண்ணிய வண்ணம் அவனை ஒரு

தள்ளு தள்ளிவிட்டு மேலே நடந்தார்!

இதென்ன விந்தை! இன்னொரு பேர்வழி! இமையாமல் பார்த்தார் அவனை. அன்று க்ஷயரோக நிவாரண நிதிக்கு என்று உண்டியலைக் கிலுக்கினானே அதே ஆசாமி!

"நகராதேயும் பிள்ளைவாள். அனுமதியில்லாமல் நுழைகிற பழக்கம் மேல் உலகத்தில் இல்லை. காம்ப்ளிமெண்ட்ரி டிக்கெட்கள் இங்கே செல்லாது!"

உலகநாதர் அவனைப் பார்த்தவாறு, "வாசலிலே ஒரு மேல்வாசல்" என்று ஞானக்கும்மியை ஆரம்பித்தார்.

"பிள்ளைவாள்! பாட்டுப்பாடி ஏய்க்கிற காரியத்தை ஸ்வர்க்க பூமிக்குள் அனுமதிப்பதில்லை; தயவு செய்து நடவுங்கள் திரும்பி!"

உலகநாத பிள்ளைக்குக் கோபம் வந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டு தான் சொல்ல வந்த பாட்டு. அந்த அருமை இந்த முரடனுக்கு எப்படித் தெரியும்!

"ஏய், என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்; இந்தப் பாட்டைப் பற்றி ஏதாவது சொன்னே..." என்று சொல்லிக் கொண்டே அவனை நெருங்கினார் பிள்ளை. அவனோ இவர் பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக,

"அன்பர் பணி செய்ய..." என்று வேறொரு பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டான்!

5

'படார் படார்' என்று கதவு தட்டும் சத்தம் கேட்டுப் பதறி விழித்தார் பிள்ளை. கையிலே விரித்துப் பிடித்திருந்த 'ஞானக் கோவை' புத்தகம் கீழே நழுவிக் காலிலே விழுந்தது. அந்த அவசரத்திலும் கால் பட்டுவிட்டதே

என்று புஸ்தகத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டே வெளியே ஓடிவந்து கதவைத் திறந்தார். என்ன அதிசயம்! மனைவி நின்று கொண்டிருந்தாள்! தெருவிலே வண்டியும், வண்டிக்காரனும்.

"போட்ட காயிதத்துக்கு எல்லாம் பதில் இல்லைன்னா எனக்கு எப்படி இருக்கும்! ஹூம்! எப்படி இருக்குமாம்?"

உலகநாதபிள்ளை திகைமுட்டுகிற ஒரு புன்சிரிப்பை முகம் முழுவதுமாகச் சிரித்தார்!

"எந்த ரயிலுக்கு வர்ரேண்ணு ஒரு லெட்டராவது போட்டிருக்கக் கூடாதா?" என்று ஒரு இங்கிதத்துடன் வார்த்தைகளை இழுத்தார் பிள்ளை,

"போதும் போதும், நான் ஒருத்தி இல்லைன்னா உங்களுக்குப் புத்தியே இராது!" என்று தீர்மானத்துடன் சொன்னாள் அம்மாள்!

மோக்ஷத்தில் தனக்கு ஒரு இடம் 'ரிஸெர்வ்' செய்கிற மும்முரத்தில், இக உலகத்திலே பிறர் படும் வேதனைகளுக்கெல்லாம் கதவைச் சாத்திவிட்ட பிள்ளையவர்கள், தம்முடைய புத்தியைப்பற்றி மனைவி கூறிய

அபிப்பிராயத்துக்குப் பதிலே பேசாமல் நிலைவாசலில் நின்றார்.

"அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டாய்
இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே!"

என்ற பாட்டுத்தான் அவருடைய மனசிலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

"சரி சரி; வண்டிக்காரனுக்குச் சில்லறையைக் குடுத்து அனுப்புங்க!" என்று நினைவுபடுத்தினாள், உலகநாதரின் வாழ்க்கை நாயகி!

மீ.ப.சோமு
Share: 




© Copyright 2020 Tamilonline