Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அம்மா வந்தாள்
- தி. ஜானகிராமன்|ஜனவரி 2002|
Share:
பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே யிருக்கிறார். அண்ணா வழக்கம் போல உச்ச ஸ்தாயியில் ட்யூசன் சொல்லுகிறான். தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு - ஒன்று கூடி - கச்சேரியின் மிருதங்கம், பானை டோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல் எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே... அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுப்போல வெடிக் கின்றன. சை சை என்று யாரோ கத்துகிறார்கள். ஒரு நாய் உயீ உயீ என்று அழுதுகொண்டே ஓடுகிறது. பொட்டென்று கச்சேரி ஓய்ந்துவிட்டது; இருந்த இடம் தெரியவில்லை. அடுத்த வீட்டு கார்ப்பரேஷன் பில் கலெக்டர் சேர்ந்தாற்போல நாற்பது ஐம்பது தும்மல் போடுகிறார். நாலு நாள் வட்டம்; அவருக்கு அது ஒரு கணக்கு.

ஆனால் நிசப்தமாகத்தான் இருக்கிறது. அப்பு மறந்து போகமாமலிருப்பதற்காக காலையிலும் பகலிலும் வேதம் சொல்லிக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவனுக்கு நிசப்தமாகத்தான் இருக்கும். இரவில் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருப்பான். அப்போதும் அவனுக்கு நிசப்தமாகத்தானிருக்கும்.

விடியற்காலையில் எழுந்து விடுகிறான் அவன். குளிக்கிறான். ஓதுகிறான். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வருகிறான். பஸ் ஏறி மாம்பலம் போகிறான். ஓய்வெடுத்துக்கொண்ட ஒரு என்ஜினீ யரின் வீட்டுக்குப் போகிறான். ஒரு ஏழெட்டுப் பேர் வருகிறார்கள். வயதானவர்கள். ஆனால், தளதள வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கிறான். அர்த்தமும் சொல்லு கிறான். பத்து மணி சுமாருக்கு வீடு திரும்புகிறான். மீண்டும் தானே சொல்லுகிறான். காலையில் போலவே மாலையில் இன்னொரு நாலு கிழவர் களுக்கு ஒரு பள்ளிக்கூடக் கட்டிடத்தில் பாடம். அது வாரம் நான்கு நாள். மற்ற நாட்களில் பீச்சில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பான். அங்கே கடல் இரைகிறது. கூட்டம் மொணமொணவென்று முனகு கிறது. இத்தனையும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால், அம்மாவைப் பார்க்கும்போது, அப்பாவைப் பார்க்கும்போது, சிவசுவைப் பார்க்கும்போது, அந்த நாய்க்கச்சேரிக்கு மேலே காதில் ஒரு இரைச்சல் - அம்மாவை எப்போதும் பார்க்கும்போது இல்லை. அப்பாவை எப்போதும் பார்க்கும் போதுமில்லை; சிவசு வந்துவிட்டுப் போகும் நாட்களில்தான் - அல்லது, அவன் நினைவு வரும் பொழுதுகளில்தான்.

திடுதிப்பென்று சிவசுவின் குரல் சில நாட்களில் பிற்பகல் நேரத்தில் கேட்கும். ஒரு ஐந்து நிமிஷம் கேட்கும். ஒரு நாள் மாடி அறைக்குள்ளேயே கேட்டது. அன்று அப்பு முழங்கை மீது தலை வைத்து, பெஞ்சின் மீது சுவர்ப்பக்கம் திரும்பி, கண்ணை மூடி ஒருக்களித்திருந்தான்.

''ஓகோ, சார் படுத்திண்டிருக்காரா!'' என்று குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் சிவசுவின் முதுகும் பின் தலையும் மாடிப்படியில் இறங்குவதுதான் தெரிந்தன. அப்புவுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ''போ வெளியே'' என்று தொண்டை கிழிய, நெற்றி நரம்பு புடைக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. கீழே சிவசு சிரிப்பது கேட்டது. காதில் இரைச்சலெடுத்தது. விரலைக் காதுக்குள் விட்டு அடைத்துக்கொண்டான். ஆனால் இரைச்சல் அடங்கவில்லை. மார்புக்குள் ளெல்லாம் புரையோடி விண்விண் என்று புண்ணின் நோவாக மோதிக் கொண்டேயிருந்தது. விறுவிறு வென்று கீழே இறங்கினான். சிவசு ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது. தூணோரமாக அம்மா நிற்கிறாள். அதைப் பார்க்காமலேயே, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே விறுவிறுவென்று நடையைக் கடந்து, ஹைரோடில் ஏறினான். அப்பாடா! என்ன இரைச்சல்! என்ன சந்தடி! எத்தனை பஸ்கள்! எத்தனை கார்கள்! கார்ப்பரேஷன் குப்பை வண்டிகள் ஒரு வரிசை - பெரிய பெரிய மாடுகளுடன் லொங்கு லொங்கென்று கடகடவென்று வருகின்றன. 'எங்கோ கடையிலிருந்து வரும் நாடகக் கூச்சலும், ஒரு தட்டான் கடைச் சத்தியடியலும் சேர்ந்து கொள்கின்றன. ட்ர் ட்ர் ட்ர் ட்ர் என்று ஒரு மோட்டார் சைக்கிள் அ
ழுதப் பேரிரைச்சலுடன் கடந்து ஓடுகிறது. பால், தேன் - இன்னும் சொல்ல முடியாத இனிமைகளாக எல்லாம் காதில் வந்து ஊற்றுகின்றன. பைக்ராப்ட்ஸ் சாலையில் திரும்பி, பீச்சை நோக்கி நடந்தான் அப்பு. பழக்கூவல்! பூக்கூவல்! லாரிகள்! ஒரே அமுதப் பொழியலாகப் பொழிகிறது! வெயில் வேறு தோலைப் பிழிகிறது. பீச்சு நெருங்குகிறது. நிமிர்ந்து கல்லூரி கடிகாரத்தைப் பார்த்தால் மணி மூன்றரை தானாகிறது. கடற்கரை மணல் பரப்பு சூன்யமாகக் கிடக்கிறது. இருந்தாலும் சாலையைக் கடந்து நகர்ந்து ஒரு மரத்தினடியில் பெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டான் அவன். மெளனமாகத் துள்ளி விழுந்த கடல் இப்போது லேசாக இரைந்துகொண்டே விழுகிறது.

இங்கே வந்து உட்கார்ந்த பிறகுதான் தெரிகிறது. இங்கு வந்தும் பயனில்லை. இறுக மூடியிருந்த கதவைத் திறந்துவிட்டாற்போல காதில் திடீரென்று மீண்டும் சத்தம் கேட்கிறது. மனதுக்குள் அப்பா நின்று கொண்டிருக்கிறார். அப்பாவை நினைக்கும்போது இந்த இரைச்சலே அறுவறுப்பே மணியமாகப் போய் விட்டது. அவர் நேரே இருக்கும்போது வருவதில்லை. அவரோடு பேசும்போது வரவில்லை. அவரோடு சேர்ந்து வேதம் ஓதும்போது வரவில்லை. அவர் வேதாந்த பாடம் நடத்தும்போது நாலைந்து நாள் போய், அவனும் இருந்து கேட்டான். அவருடைய தர்க்க மூளை, வக்கீல்களுக்கும் ஜட்ஜுகளுக்கும் சமமாக ஈடு கொடுப்பதையும், சில சமயம் மீறிக்கொண்டு ஓங்கி வெற்றிக் களிப்புடன் ஒரு படி உயர்ந்து நிற்பதையும் பார்த்திருக்கிறான்; கர்வப்பட்டிருக்கிறான் - எங்கப்பா எங்கப்பா என்று. 'உங்களைப்போல் கார் இல்லாவிட்டால் என்ன, தோட்டம் இல்லாவிட்டால் என்ன, தோய்த்து உலர்த்திக் கசங்கிய அரைக்கைச் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தால் என்ன, முக்கால் பழுப்புப் பஞ்சகச்சம் கட்டியிருந்தால் என்ன? எங்கப்பாவுக்கு உங்கள் எல்லாரையும் ஒரு நிமிஷம் மட்டிகளாகப் பார்க்க முடியும்' என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளுவான். ஒரு நாள் அந்த அரை நிமிஷ மட்டிகளைக் கடிந்து, அவர் மண்டையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து வெதறிப் போய், சிரிப்பை அடக்கிக் கொண்டான்... அவரோடு நாலைந்து தடவை விடியற்காலையில் பேசிக் கொண்டே உலாவ இங்கெல்லாம் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் இல்லாமல், இப்படித் தனியாக உட்கார்ந்து அவரை நினைக்கும்போது மட்டும் இப்படி உள்ளே புகையும் அனலுமாக எரிவானேன்?

அம்மா அவனை உட்கார்த்தி வைத்து இரண்டு நாள் மூன்று நாளைக்கு ஒரு முறை - இரண்டு வாக்கியம் கனம் சொல்லுடா கேக்கறேன்'', ''குழந்தே! கணீர்னு ஏதாவது சொல்லேன் கொஞ்சம்'' என்று கேட்பாள். தொண்டையை கனைத்துக்கொண்டு அவன் தொடங் குவான். அவள் முகம் மாறுவதைக் காணும்போது, சொல்லக்கூட ஓடாது. அதில் ஏதோ வெளிச்சம் வந்து படர்கிற மாதிரி இருக்கும். ஒரு நூறு வெள்ளை ரோஜாப் பூக்கள் வந்து லேசாக அசைந்து கொடுப்பது போலிருக்கும். கண்ணை மூடிக் கொண்டிருப்பாள் அம்மா. திடீர் என்று அதில் முத்து முத்தாகப் பனி வழிகிற மாதிரி... என்ன இது... அம்மா கன்னத்தில் நீர்தான் ஓடுகிறது.

''என்னம்மா?'' என்று நிறுத்தியவுடன் கேட்பான்.

''என்னமோடா குழந்தை. நீ சொல்ற போதெல் லாம் தாங்க முடியாம ஆயிடறதுடா இப்படி... யாருதான் இதையெல்லாம் பண்ணினாளோ!''

''பண்ணவாவதும்மா! வேதத்தை யாரும் பண்ணலே. ரிஷிகள் கண்டது அது. ஆகாசத்திலே அந்த தத்துவங் கள் எல்லாம் சூக்ஷ்மமா கண்ணுக்குத் தெரியாம, புத்திக்குத் தெரியாம இருக்கும். ரிஷிகள் தியானம் பண்றபோது தபஸ் பண்றபோது, ஒண்ணு ரண்டு அவா கண்ணிலே படும். அப்படியே நாக்கிலே சப்தமா மாறிவரும். நீ இப்ப இருக்கே பாரு. இந்த மாதிரி இப்படியே ரொம்ப தூரம் உள்ளுக்குள்ளே இறங்கி இறங்கிப் போயிருப்பா அப்ப வந்து, ரண்டு மூணு, பூ பூத்தாப்பல தெரியும். அதைப் பறிச்சிண்டு வந்துடுவா. யாரும் பண்ணலேம்மா. அது அங்கேயே இருக்கு.''

''ஆமாண்டா அப்பாக் கூடச் சொல்லியிருக்கா'' என்று தலைப்பால் கன்னத்தைத் துடைத்துக் கொள்வாள் அம்மா.

அந்த அம்மாவை இப்போது நினைக்கும்போது ஏன் இப்படி இரைச்சலும் புகையுமாகக் காதிலும் உள்ளிலும் மூச்சடைக்கிறது! ஆனால் அப்பாவை நினைக்கும்போது அது இன்னும் தாங்க முடியவில்லை. அப்பா ஏன் இப்படி இருக்கிறார் - ஒன்றையும் கவனிக்காமல் ஏன் வீட்டை விட்டு ஓடவில்லை? சன்யாசி ஆகவில்லை? ஏன் அவள் பொங்கிப் போட்டச் சோற்றை அவள் கையால் தின்றுகொண்டே கிடக்கிறார்! சுசிருசியாக இல்லாதவர்களின் கையால் இட்டச் சோறு நம்மையும் அழுக்காக, கரியாகத்தானே செய்யும்! பிருஹந்தனை மாதிரி, சிகண்டி மாதிரி ஆகிவிட்டாரா அப்பா! ஆனால் பிருஹந்தனை கூட பின்னலைத் தொங்க விட்டுக் கொண்டு யுத்த களத்தில் சரமாடிச் சின்னாப்பின்னப் படுத்தினாளே...!

பொழுது நன்றாக இறங்கிவிட்டது. கடற்கரை மணல் முழுவதும் நட்சத்திரங்களைப் போல் மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள். அப்பு எழுந்து அலையண்டை போனான். தெற்கு நோக்கி நீள நடந்தான். ஈர மணல், நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன. முன்னும் பின்னும் நகர்வது போதாதென்று பக்க வாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போலிருந்தது. ஐஸ் ஹவுஸ் அதோ தெரிகிறது. ஈர மணலிலிருந்து ஏறி, சற்று உட்பக்க மாக வந்து உட்கார்ந்து கொண்டான் அவன்.

வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது. மணலை சமன்படுத்திப் புள்ளி வைத்துக் கலைத்துக் கொண்டிருந்தான் அவன். ஈர மணலில் அணை கட்டும் இரண்டு குழந்தைகளை - சின்னக் குழந்தையோடு ஆடையைத் தூக்கி நீர் காலில் பட நின்று கொண்டிருந்த - அப்பாவும், அம்மாவும் வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். சிறிது தூரத்தில் 'சலாங்குடு' ஆடிக் கொண்டிருந்த கும்பலை இப்போது காணவில்லை. இருள் நன்கு கவிந்து விட்டது. தூரத்தில் நீல விளக்குகள் பளிச்சென்று விழித்துக் கொண்டிருந்தன. அப்படியே உட்கார்ந் திருந்தான் அப்பு. மனம், புத்தி எல்லாம் வறண்டு கிடக்கின்றன. ஒன்றுமில்லாமல் வறண்டிருப்பது எத்தனை இதமாக இருக்கிறது. அப்படியே படுத்துக்கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் - வெகு நேரம்.

மல்லாந்து படுத்தான். நட்சத்திரங்கள் கண்ணை உறுத்தின. ஒருக்களித்து உள்ளங்கை மீது தலை வைத்துப் படுத்து, கண்ணை மூடிக்கொண்டான். இனிமையான வறட்சி, இரைச்சல், ஒன்றுமே இல்லை. கடல் அலையும், மொணமொணவென்று எங்கோ மனிதர்கள் பேசுவதும், கடலுக்குப் பயந்து மெதுவாகக் கேட்கிற கார் சத்தமும் தான் காதில் விழுகின்றன.

அதிக நேரம் படுக்கை கொள்ளவுமில்லை. எழுந்து உட்கார்ந்தான்.

யாரது?.... அப்பா மாதிரி இருக்கிறதே... அப்பதான் .... பயமாக இருந்தது - அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. அவர் நடை சற்று நின்று, எங்கோ அவர் பார்த்தபோது தெரிந்த நிலை - இரண்டையும் பார்த்தும் பரிதாபப்பட வேண்டும் போலிருந்தது. நம்மைத்தான் பார்க்க வந்திருக்கிறாரோ! பார்க்கா மல் போய்விடப் போகிறாரோ என்று மார்பு பரந்தது.

''அப்பா!'' என்று கூப்பிட்டான். அலையும் வெளியும் அதைச் சாப்பிட்டுவிட்டன. உரக்கக் கத்தவும் மனமின்றி எழுந்து அவரருகே போனான்.

''அப்பா!''

திரும்பினார் அவர்.

''அப்புவா! என்னடாது! இங்கேயா இருக்கே! மணல்லெ சுத்திச் சுத்தி வந்துண்டிருக்கேன். அரை மணியா... எங்கே போனானோ போனானோன்னு அம்மா புலம்பிண்டேயிருக்கா.

''எங்கே போயிடப் போறேன்? பச்சைக் குழந்தையா!''

''சரிடா, அவளைக் கவலைப்படாதேன்னு சொல்ல முடியுமா?''

''நான் ஊரிலே இல்லாதபோது?''

அவன் குரல் கட்டையாக, வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போலக் கிடந்த கோபம் - இரண்டும் அவர் காதிலே பட்டுவிட்டனவோ என்னவோ - அவர் பதில் சொல்லவில்லை.

''உட்காரலாமாப்பா இப்படி கொஞ்சம்?''

''அம்மா காத்துண்டிருக்காடா.''

''யாருக்காக?''

எப்படிப் பார்த்தாரோ அவர், இருட்டில் தெரிய வில்லை. பேசாமல் சற்று நின்று, பிறகு உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ''நீதிமன்றத் தின் கலங்கரை விளக்கு இருமுறை சுற்றி வந்து விட்டது. அலைகள் ஒன்றை ஒன்று இடித்துப் புரண்டன.

''காபிகூட சாப்பிடாம வந்துட்டியாமேடா?''

''மறந்து போய்ட்டேன்''

மீண்டும் சிறிது மெளனம்.

''இந்த லெட்டரைப் பார்த்துட்டுக் கவலைப் பட்டுண்டு வந்துட்டியா? இத்தனை நாழியே இங்கே உட்கார்ந்திருக்கியேன்னு கேட்கிறேன்'' என்று அவன் வேண்டும் என்றே மெளனம் சாதிப்பதைக் குறை சொல்வதுபோல் கேட்டார் தண்டபாணி.

''இந்த லெட்டர் போட்டிருக்காளா?''

''என்னது நீ பார்க்கலியா?''

''இல்லியே எப்ப வந்தது?''

''உனக்குத் தெரியாதா? அப்படீன்னா நீ வந்தப்புறம் சாயங்காலத் தபாலில் வந்துதோ என்னவோ!''

''இந்து எழுதியிருக்காளா?''

''ஆமா, பவானியம்மாள் திடீர்னு நாலாம் நாள் மயக்கமா விழுந்துவிட்டாளாம். இடது காலும் கையும் சுரணை இல்லாமல் போயிடுதாம்! அப்புறம் டாக்டரைக் கூப்பிட்டுக் காமிச்சிருக்கா. ரத்தக் கொதிப்பு அதிகமா இருந்ததுன்னு இன்ஜெக்ஷன் போட்டானாம். கால் பாரிச வாயு மாதிரி இழுத்துடுத் தோன்னு முதலில் சந்தேகமா இருந்ததாம். நல்ல வேளையா அப்படி ஆகலியாம். நீட்டி மடக்கிறாளாம். நடக்கக் கூட முடியறதாம். ஆனா நடந்தால் சிரமமா யிருக்காம். உட்கார்ந்துண்டே தான் இருக்காளாம்.

அப்புவுக்கு அதைக் கேட்டு கவலை நம நமவென்றது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந் திருந்தான். பவானியம்மாளுக்கு வலிவான உடம்பு இல்லை. சாதாரணமாக இருப்பாள். ஆனால் வியாதி, தலைவலி, கால்வலி என்றெல்லாம் சொன்னது கிடையாது. பட்டினி கிடக்க அஞ்ச மாட்டாள். காயக்கிலேசம் பண்ணத் தயங்கமாட்டாள். அதனா லேயே உடலில் ஒரு அயர்வு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது போலிருக்கும். வயது வேறு அறுபதுக்கு மேலாகிவிட்டது. முப்பது வருட காயக் கிலேசம் இப்போதுதான் கைவரிசையைக் காட்டு கிறதோ என்னவோ!

''நான் போய் பார்த்து வந்தால் தேவலையே'' என்றான் அவன்.

''கட்டாயம் போகத்தான் வேணும்''

மீண்டும் சிறிது மெளனம்.

''நீ அது தெரிஞ்சிண்டு தான் கவலைப்பட்டுண்டு வந்தியோன்னு நினைச்சேன்'' என்றார் தண்டபாணி.

''அது நீங்க இப்ப சொல்லித்தானே தெரியும்.''

''அதுதான் சொல்றேன். இப்படி சொல்லாம சாப் பிடாம வந்துட்டியோன்னுதான் அம்மா கவலைப்பட றா.... உன்னைப் பார்த்தா என்னமோ போலிருக்கே.''

''...........''

''என்னன்னு சொல்லேன்''

''ஒண்ணுமில்லேப்பா''

''யாராவது ஏதாவது சொன்னாளா? அண்ணா, மன்னி யாராவது?''

''அவா என் மேலே உசிரா இருக்காப்பா'' எனக்கு ஒரு கவலையுமில்லே. சும்மாத்தான் வந்தேன். இங்கேயே இப்படியே சுத்திண்டிருக்கலாம் போலத் தோணித்து. இருந்துவிட்டேன்.''

''திடீர்னு அப்படித் தோணு¡துடா அப்பு! வேற யாராவது ஏதாவது சொன்னாளா...?''

''ம்ஹம்.''

''மத்யான்னம் யாராவது வந்தாளா?''

''............''

''கேட்டதுக்கு பதில் சொல்லேன்''

''எத்தனையோ பேர் வீட்டுக்கு வரா, போறா, அதனாலே என்ன இப்ப?''

''ஒண்ணுமில்லேன்னா நீ சொல்லப்படாதோ?''

''..........''

''சிவசு வந்தானோ?'' என்று அவனைப் பார்க்காமல் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார் தண்டபாணி.

''வந்தார். நான் படுத்துண்டிருந்ததைப் பார்த்துக் கீழே இறங்கிப் போயிட்டார்.

''அவன் அம்மாவைப் பார்க்கத்தானே வரான்.''

அப்பு அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கிழக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருத்தார். அவருக்குப் பின்னால் தொலைவில் நீதிமன்றத்துக் கலங்கரை விளக்கு சற்றைக் கொருமுறை பளிச்சிட்டு விட்டு மங்கிக் கொண்டிருந்தது. அலையும் சற்றைக் கொரு முறை ஓங்கி விட்டு மீண்டும் அடங்கிய ஓலமாகப் படிந்து கொண்டிருந்தது. அப்பா கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறார். முக்கால் இருளில் அவர் தலை மொத்தை நிழலாகத் தெரிந்ததே தவிர, வேறு ஒன்றும் புலப்படவில்லை.

''உங்களைப் பார்த்தால் அழவேண்டும் போலிருக் கிறது. 'நீ ஒரு மனுஷன் மாதிரி' என்று ஒரு 'சீ' போட்டு விட்டுப் போக வேண்டும் போலிருக்கிறது. 'அம்¡வைப் பார்க்கத்தானே வருகிறான்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டால் குமட்டிக் கொண்டு வருகிறது. அந்த வீட்டை விட்டே விரட்ட வேண்டும் போலிருக்கிறது!'' என்று வார்த்தைகள் உள்ளுக்குள்ளே புகைந்து உருண்டு கொண்டிருந்தன. ஆனால் வெளியே ஒன்றும் வரவில்லை. அஞ்சி, கூசி அவரையே பார்த்துக் கொண்டு, அவனும் ஒரு கல்லாக உட்கார்ந் திருந்தான்.

எல்லாம் ஸ்தம்பித்துக் கிடப்பது போலிருந்தது. அலை உருண்டும், வண்டிகள் ஓடியும், விளக்குகள் எரிந்தும், காற்று தவழ்ந்தும் கூட அப்படியே உலகமே நின்றுவிட்டாற் போலிருந்தது. அப்பாவின் சுரணை யற்ற அசட்டையைக் கண்டு காலமே நின்றுவிட்டாற் போலிருக்கிறது. மூச்சு, இயக்கம், எல்லாமே உறைந்து விட்டாற் போலிருக்கிறது.

சட்டென்று அப்பு அசைந்து கொடுத்தான். எத்தனை நேரமாயிற்றோ, தெரியவில்லை.

''நாளைக்கு நான் சித்தன் குளத்துக்குப் போக லாம்னு பார்க்கிறேன்பா!'' என்றான் அவன்

''ம்'' என்று திரும்பினார்.

மீண்டும் சொன்னான் அவன்.

''பவானியம்மாளைப் பார்க்கத்தானே?''

''ம்க்கும்.''

''போய்ட்டு வா... போய்ட்டு உடனே திரும்பி விடலாமோல்லியோ?''

''அத்தை என்ன சொல்றாளோ! பார்த்துண்டுதானே வரணும்.''

''சரி, அம்மா பரந்து போயிடுவ, சீக்கிரமா வராட்டா - அதுக்காகச் சொன்னேன்'' என்று எழுந்தார் அவர்.

''எம்பா?''
''எத்தனை நாழி இங்கேயே இருக்கிறது!? வீடுன்னு இருக்கு. வேற எங்கே போவேன்?'' என்று அவன் எழுந்தவுடன் நடக்க ஆரம்பித்தார் அவர்.

''எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!'' என்று நடந்துகொண்டே சொன்னான் அப்பு.

''ஒண்ணையும் புரிஞ்சுக்க சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத் தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.''

அப்புவுக்கு சற்று திகைப்பாக இருந்தது. அதைக் கேட்டு, உள்ளுக்குள்ளே கொதித்தது. அடக்கிக் கொண்டே, ''புரியறதோ என்னமோ - எனக்கு ஒண்ணும் பிடிக்கவேயில்லை!'' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.

''என்ன பண்றது?'' என்றார் அவர். பிறகு இருவரும் பேசவில்லை.

வீட்டு வாசற்படி ஏறும்போதே, ''என்னடா அப்பு? எங்கடா போயிட்டே? மத்தியானம் போனவன்!'' என்று திண்ணையிலிருந்து எழுந்து வந்த அம்மா சட்டென்று நிறுத்தி விட்டாள். அதற்கு மேல் பேச முடியவில்லை. குரல் நடுங்கிக் கரகரத்தது.

''எங்கண்ணா போய்ட்டே?'' என்று கேட்ட காவேரி அம்மா தழதழப்பதைப் பார்த்தாள்.

''சும்மாத்தாண்டி, பீச்சிலே போய் உட்கார்ந்திருந்தேன்.''

''போண்ணா! அம்மாட்ட கூட சொல்லாமதான் போறதாக்கும். இனிமே எங்கே போனாலும் சுருக்க வந்துடு அண்ணா. நாழியாகுமானா, சொல்லிட்டுப் போ'', என்று அம்மாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் காவேரி.

''சரி, சரி.. போ. இது என்ன பரபரப்பு? யாராவது கேட்டா சிரிப்பா.''

இதையெல்லாம் கேட்டு அப்புவுக்கு உடல் குன்றிற்று. அம்மா தன்னிடம் காட்டும் பரிவை.... இவர்கள், காவேரி கூட புரிந்துகொண்டு ஒத்து ஊதுகிறாளோ என்று ஒரு லஜ்ஜை ஊவா முள்ளாகச் சிறு குத்தல் குத்திற்று. என்னைப் பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருக்கிறதா? ஏன் இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள்? நானாக எதையும் செய்ய எனக்குத் திராணி கிடையாதா? சுயமூச்சு கிடையாதா? இல்லை. இந்த வீட்டையே கண்டு நான் சிணுங்கு வதை இவர்கள் புரிந்துகொண்டு, என்னைக் குழந்தை யாகவே அடித்து, வாயை மூடப் பார்க்கிறார்களா?

சாப்பிடுவதற்கு முன் ஜபத்திற்காக உட்கார்ந்து சிறுபொழுதில் இதையேதான் நினைத்துக் கொண்டி ருந்தான் அவன். அப்பொழுது யாரும் அதிகமாய்ப் பேசவில்லை. கிருஷ்ணன் ஏதோ கல்லூரியில் நடந்த தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவேரி நிமிராமல் உம் போட்டுக் கொண்டிருந்த அப்புவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந் தாள்.

சாப்பாடு முடிந்ததும் அப்பு சித்தன்குளத்துக் கடிதத்தை வாங்கிக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான்.

''அப்புவுக்கு அநேக கோடி நமஸ்காரம்'' - என்று ஆரம்பித்து கடற்கரையில் அப்பா சொன்ன செய்தி களைக் கடிதம் உருளை எழுத்துக்களில் சொல் லிற்று....'' சில சமயம் அத்தையைப் பார்க்கும்போது கவலையாகப் போய் விடுகிறது. எப்போதும் வரப் போகிறானோ என்று உன்னைப் பற்றி இரண்டு தடவை சொன்னாள். நீ முடிந்தால் வந்து பார்த்துவிட்டுப் போனால் அவளுக்கு திருப்தியாயிரக்கும். ஆனால் வேலை இருந்தால் சிரமப்பட வேண்டாம். அத்தை உன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினால் ஒரு மணி நேரம் பேசுகிறாள். உன் அம்மா, அப்பா எல்லாருக்கும் என் நமஸ்காரங்களைச் சொல்லவும், அத்தையும் ஆசி கூறுகிறாள். தப்பு இருந்தால் மன்னித்துக் கொள் ளவும் அநேக நமஸ்காரம் - இந்து''

நாலைந்து தடவை அதைப் படித்த அப்புவுக்குக் கண்ணை அப்பால் எடுக்க முடியவில்லை. பவானியம் மாளின் சோர்ந்த உடலும் பெருமூச்சும் அப்போதைக் கப்போது கண்முன் வந்துவிட்டுப் போயிற்று. இந்து கூட நன்றாக எழுதுகிறாளே! எங்கே உட்கார்ந்து எழுதியிருப்பாள்? எப்படி எழுதியிருப்பாள்? பலகை அல்லது ராமாயணப் புத்தகத்தை மடிமேல் வைத்துக் கொண்டு எழுதினாளா?... அல்லது குமாஸ்தா மேஜை முன் வைத்து எழுதினாளா?... அந்த மேஜை மீது தலையை வைத்துச் சாய்த்திருந்த போதுதான் அன்று வந்தாள். தலையை வருடினாள்... பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இந்து, இந்து.... நான் எங்கேயோ வந்து உட்கார்ந்திருக்கிறேனே... சத்திரத்தில் வந்து தங்கினவன் மாதிரி இருக்கிறதே இங்கு... தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளவுமா? எந்தத் தப்பைச் சொல்லுகிறாள்? எழுத்துத் தப்பு ஒன்று மில்லையே....

கடிதத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்

''என்னடா அப்பு எழுதியிருக்கா?''

அம்மாவின் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது.

''ஒண்ணுமில்லேம்மா, எழுத்து சரியாப் புரியலை பார்த்துண்டிருந்தேன்.'' என்று திடுக்கிட்டு போனாற் போல் தடுமாறினான் அவன்.

''அதுக்கு இப்படிப் பதறுவானேன்?'' என்று அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் அம்மா. அப்பு கடிதத் தை மடித்தான்.

''நாளைக்குச் சித்தன்குளத்துக்குப் போறியாமே?''

''ஆமாம்மா... பார்த்துவிட்டு வரவேண்டாமா?''

''பார்த்துவிட்டு வரத்தானே வேணும்.''

அழுத்தம்பின் பகுதியில் விழுந்ததைக் கேட்டு நிமிர்ந்தான் அவன்.

''ஏம்மா?''

அம்மா ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்ப்பது போலவே, கடைக் கண்ணாலேயே நாலு பக்கமும் பார்ப்பது போலிருந்தது.

''அம்மாவை பிடிக்கலேன்னு அங்கேயே இருந்துவிட மாட்டியே....?'' அவன் காதுக்கு மட்டும் எட்டும் தாழ்ந்த குரலில் வந்தது இது. ஆனால் முழுவதையும் சொல்லி முடிக்க முடியவில்லை. அவளால், அதற்குள் கன்னம், உதடெல்லாம் கோணி நடுங்கின. கண்ணில் தெப்பம் கட்டிவிட்டது.

அப்பு தலையைக் குனிந்து கொண்டான்.

தி. ஜானகிராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline