Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நரிக்குறத்தி
- ஜெகசிற்பியன்|ஜனவரி 2012|
Share:
தர்மமிகு தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைப் பட்டணத்தில் நெடுஞ்சாலையொன்று ரயில் பாதையைக் குறுக்கே வெட்டிக்கொண்டு பாழ் இடமான ஒரு லெவல் கிராஸ். அந்த லெவல்கிராஸிங் கதவுகள் வழக்கம்போல் சாத்திக் கிடந்தன. அவை சாத்தப் பெற்ற இரண்டொரு நிமிஷங்களில் ஜனங்கள் வந்து குழுமினர். அப்புறம் வழக்கம்போல் கார், பஸ், லாரி, ரிக்‌ஷா, ஜட்கா, சைக்கிள் முதலான வாகனாதிகள் போக்குவரத்து விதிகளை அனுசரித்து, சாலையின் இடது பக்கங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கலாயின. சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போன மாதிரி ஒரு தோற்றம்.

சங்கீதக் கச்சேரிகளில் புடவை ரகங்களைப் பற்றிய பேச்சும், மளிகைக் கடைகளில் ரூபாய்க்குப் பதினாறு படி அரிசி விற்ற காலத்தைப் பற்றிய பேச்சும், எழுத்தாளர் மாநாடுகளில் தனித்தமிழ், கலப்படத் தமிழ் பற்றிய பேச்சும் வழக்கமாக அடிபடுவதைப் போல அந்த ரயில்வே கிராஸிங் அருகில் குழுமி நின்ற ஜனங்களிடையே நகரசபை நிர்வாகத்தின் கையாலாகாத தன்மை, சர்க்காரின் பாராமுகம், ரயில்வே போர்டின் அசமந்தம், ஐந்தாண்டுத் திட்டங்களில் உள்ள குறைகள், தேர்தல் கால வாக்குறுதிகள், பற்றாக்குறை பட்ஜெட் விவாதப் பிரசங்க நினைவுகள், தனிமனித உரிமைகள், அரசியல் கட்சிகளின் செயல்திறன், கொள்கைக் குழப்பம் முதலானவை பற்றிய வழக்கமான 'ஃபாஷன் பேச்சுக்கள்' கிளம்பின. அவரவர்க்குரிய அவசரம், தேவை, காரியம் ஆகியவற்றைப் பொறுத்து அந்தப் பேச்சுக்கள் ஆத்திரமாகவும், அலுப்பாகவும், சீறலாகவும், சலிப்பாகவும், கோபமாகவும், குத்தலாகவும், குறும்பாகவும் வெளிப்பட்டன. சிலர் வாய்விட்டுப் பேசாமலே முகத்தைச் சுளிப்பதும், கையைச் சொடுக்குவதும், காலைத் தேய்ப்பதும், பெருமூச்சு விடுவதுமாகத் தமது மன அவசங்களை வெளிக்காட்டினர். மற்றும் சிலர், தங்கள் பொறுமை பறிபோய்க் கொண்டிருப்பதை சைக்கிள் மணிகளாலும், ஹாரன்களாலும் தெரியப்படுத்தினர். வேறு சிலர், அந்தக் கிராஸிங் கதவருகில் அரக்கனின் கண்ணைப் போல் ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கை அமைதியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாகத்தானே அங்கு ஜனநாயகத் தத்துவத்தின் ஒரு வீரியப் பகுதி பண்டப் பிரமாணமாக உருவாகிக் கொண்டிருந்தது!

ஆனால் அந்தச் சாலையின் இரு முனைகளிலும் குழுமி நின்ற நூற்றுக்கணக்கான ஜனங்களுடையவும் ஆத்திர அவசர கோபதாகப் குமுறல்களைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவனாய் - அத்தனை பேருடைய உரிமைகளையும் பறித்து, அவ்வளவு பேரையும் தடுத்து நிறுத்திப் போட்டுவிட்ட பெருமையில் திளைத்தவனாய் - லெவல் கிராஸிங்கின் உள்ளே, ரயில் பாதையோரம் கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்தான் கேட் கீப்பர். ஆயிரக்கணக்கான கண்கள் அவனைக் கொத்திப் பிடுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்ததைக் கூட லட்சியம் செய்யாமல், ருத்திரவெளியில் தன்னந்தனியே உலாவும் மந்திரவாதியைப் போல, பச்சைக்கொடி கருணையைக் கட்கத்தில் இடுக்கிக் கையைப் பின்னால் கோத்தவாறு உலாவிக் கொண்டிருந்தான் அவன். ஐந்து நிமிஷத்திற்கொருதரம் என்று அந்த லெவல்கிராஸிங் கதவுகளைச் சாத்தித் திறந்து விடும் தொழிலை நாட்க்கணக்கில், மாதக்கணக்கில், வருடக் கணக்கில் செய்துவரும் அவனுக்கு இது பழகிப் போன, புளித்துப் போன அனுபவம். எனவே தன்னைச் சுற்றி ஒன்றுமே நடவாத மாதிரி உல்லாச நடைபயின்று கொண்டிருந்தான். பொறுமையிழந்த சில இளைஞர்கள் இரும்புக்கிராதியின் இடுக்குகளில் நுழைந்து ரயில் பாதையைக் கடக்க முயலும்போதெல்லாம், அவர்களை விரட்டியடித்து ஜபர்தஸ்து செய்வது அவனுக்கு ஒரு பொழுது போக்காயிருந்தது.

அது ஆபீஸ் நேரம். கர்ப்பிணிக் கோலம் பூண்ட இரண்டு மின்சார ரயில் வண்டிகள் தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் ஓடி மறைந்த பின்னும், சிவப்பு விளக்குகள் அணையவில்லை. கதவுகள் திறக்கப்படவில்லை. தேங்கி நின்ற ஜனப்பிரளயத்தின் குமுறல் மிகுதியாயிற்று.

"இது என்ன சார், நியாயம்? ரயில் வண்டியில் போகிறவர்களும், பாதசாரிகளும் இந்த ஜனநாயக நாட்டில் சம உரிமை பெற்றவர்கள் தாமே? அவர்களை மட்டும் முன்னால் போக அனுமதித்து விட்டு, நம்மை மட்டும் மடக்கிப் போட்டு வைப்பதேன்? ஒரே காரியாலயத்தில் வேலை செய்யும் இருவரில் ஒருவர், ரயில் டிக்கெட் வாங்கி முன்னதாகப் போகிறார்; பஸ் டிக்கெட் வாங்கிய மற்றவர், இதோ நின்று கிடக்கும் பஸ்ஸில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். எந்த அளவுகோலைக் கொண்டு இவர்களுக்கு இந்த நியாயம் வழங்கப்பெறுகிறது?" என்று ஆவேசக் குரலில் கேட்டார் அங்கு நின்று நின்று கால் கடுத்துப் போன ஒரு வக்கீல் குமாஸ்தா.

"வாழ்க்கைப் போராட்டத்தில் பலமுள்ளவையெல்லாம் பலவீனமானவற்றை வென்று, பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறுவது இயற்கை" என்று வறண்ட புன்னகையுடன் பதில் சொன்னார், கல்லூரிக்கு நேரமாகி விட்டதே என்ற கவலையில் ஆழ்ந்து நின்ற ஓர் 'உயிரியல்' பேராசிரியர்.

"ஹூம்! எல்லாம் அவரவர் வந்த வழி!" என்று சலிப்புடன் முகத்தைச் சுளித்தார் ஒரு கோயில் அர்ச்சகர்.

"வழியாவது, விதியாவது! இங்கே தினந்தினம் அடிக்கொருதரம் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் நின்று அவதிப்படுகிற இந்த ஜனங்கள், அதோ இருக்கும் டிச்சிப் பள்ளத்தில், ஆளுக்கொரு பைசாவீதம் வீசியெறிந்தால் கூட, அந்தப் பணத்தைக் கொண்டு ஆறு மாசத்திற்கெல்லாம் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாமே!" என்று அலுத்துக் கொண்டான் பொருளாதாரப் பாடத்தில் 'கோட்'டடித்த ஒரு டியூடோரியல் கல்லூரி மாணவன்.

இப்படி எழுந்த இந்தக் காரமான பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்டுத் தம் கவலைகளை மறந்து நின்ற ஜனங்களின் கவனம், திடீரென்று வேறு பக்கம் திரும்பியது. ஒவ்வொருமுறை அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிதான் அது. அங்குள்ள ஜனங்களில் பலர் அநேகமுறை பார்த்து 'ரசித்த' காட்சியும் கூட. அத்துடன், அந்த ஹாஸ்ய நிகழ்ச்சி ஒரு நாடோடிப் பிறவியின் வயிற்றுப் போராட்டத்திற்காக நிகழப் பெறுவது என்பதும் அவர்கள் அறிந்த விஷயமே! ஆயினும் அதைத் திரும்பத் திரும்பக் காண்பதிலே அவர்களுக்கோர் அலாதி மகிழ்ச்சி. எனவே, எல்லோருடைய கவனமும் ஒருசேரத் திரும்பியது.

சடையும் செம்பட்டையுமாகக் கூடு பின்னிய காய்ந்த நிலை; சிறிய முகம். இரும்பு வளையம் கோத்த செவிகள்; வெள்ளை, கறுப்பு, பச்சை, சிவப்பு முதலான வண்ண மணிகள் அணிந்த கழுத்து; சூணாம் வயிற்றுக்குக் கீழே மணி வடத்தாலான அரைஞாணில் இறுகித் தொங்கிய கோவணம்; கால்களில் இரும்புக் காப்பு; அழுக்குப் படையால் 'அட்லாஸ்' வரைந்து கிடந்த மாநிற மேனி - இத்யாதி கோலத்திலிருந்த ஒரு பத்து வயது நரிக்குறச் சிறுவன் அந்தச் சாலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து பாய்ந்தேறி ஓடி வந்தான்.

அவசர அவசரமாக வந்த அவன், அந்தச் சாலையின் இடதுபுறம் நீண்ட வரிசை போட்டு நின்று கிடந்த கார்களை நோக்கி விரைந்தான். அவனுடைய இலக்கில் முதலாவதாகச் சிக்கியது ஒரு டாக்சி. அதன் கதவருகில் போய் நின்று காதில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மறுகையால் உப்பிச் சுரந்த சூணாம் வயிற்றைத் தட்டித் தாளமிட்டவாறு பாட ஆரம்பித்தான்.

பாட்டா அது? பத்துப் பதினைந்து சினிமாப் படங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களின் பல்லவி, அனுபல்லவி, சரணங்களைத் துண்டு துண்டாக நறுக்கியெடுத்து ஒரு கூட்டுக் கலவையாகத் தொகுத்து நீட்டிய 'பாடல்' அது! இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு ஓர் இராகமென மாறி மாறி வரும் ஒரு விசித்திர 'இராகமாலிகை.' அந்தக் கதம்ப இசைக் கோலத்தோடு அவனுடைய கால்களும் தாளகதியில் ஆடின! ஆனால் பாட்டின் தாளமும், வயிற்றின் மேல் தட்டும் கைத்தாளமும், ஆடும் கால்களின் தாளமும் ஏழாம் பொருத்தத்தில் இருந்தன!

நரிக்குறவச் சிறுவன் உற்சாகமாகப் பாடிக் கொண்டே ஆடினான். அந்த சினிமாக் கதம்ப இசையைக் கேட்டு அங்கு கால்கடுக்க நின்ற ஜனங்களிடையே மகிழ்ச்சிக் கலகலப்பு ஏற்பட்டது. கதவு சாத்திக் கிடக்கும் கவலையையும் மறந்து அந்தக் 'கலைநிகழ்ச்சி'யில் தம் கவனத்தைச் செலுத்தினர்.

பையனின் குரல் கம்மிக் கரகரத்தது.
பயின்று வைத்திருந்த பாட்டின் அடிகள் தீர்ந்து போகவே, முடிவை முதலுடன் இணைத்துத் தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தான். இடையிடையே "ஐயா சாமி! ஒரு பைசா போடு சாமி!" என்று 'டயலாக்'கும் பேசிக் கொண்டான். சாத்திக் கிடக்கும் லெவல்கிராஸ் கதவு திறக்கப்பட்டு விடுமோ என்ற பரபரப்பும், அது திறக்காமலிருக்க வேண்டுமே என்ற ஆதங்கமும் சேர்த்து அவனது பாட்டின் 'ரிதமை'த் துரிதமாக்கின. அவனுடைய கவனமெல்லாம் டாக்சியில் உட்கார்ந்திருப்பவர்கள் மீதுதான் இருந்தது. அவனது பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் தரை மகாஜனங்களையெல்லாம் அவன் சட்டை செய்யவே இல்லை. அவர்களெல்லாம் தர்மம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பது அவனுடைய தீர்மானமோ என்னவோ?

லெவல் கிராஸ் கதவு எப்போது திறக்குமோ என்று டாக்சியில் அப்படியும் இப்படியுமாக நெளிந்தபடி அமர்ந்திருந்த பிரமுகர், சட்டென்று திரும்பி, "போடா! சீ! போ! இங்கே மனுஷன் அவஸ்தைப்படறது போறாதுன்னு இவன் வேற வந்து உயிரை எடுக்கறான்! இந்தச் சனியன் பிடிச்ச இடத்திலே இது ஒரு தொல்லையாப் போச்சு!" என்று சீறினார்.

பையன் அதைக் காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ உடன் அடுத்து நின்ற காருக்குப் பாய்ந்து சென்றான். அங்கே தொடர்ந்தது அவனது ஆட்டமும், பாட்டமும். அந்தக் காரில் இரண்டு ஆடவர்களும், ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தனர். நரிக்குறவச் சிறுவர்களின் பாட்டைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் காரில் அமர்ந்திருக்கும் தாங்கள் அந்தப் பாட்டை ரசிப்பது அகௌரவம் என்று எண்ணியோ என்னவோ, சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டனர். பிறகு அம்மூவரில் ஒருவர் முகத்தில் அருவருப்புக் குறி தோன்ற இடது கையைத் துவள ஆட்டி, "ஒண்ணுமில்லே, போடா!" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

தெற்கிலிருந்து ஒரு மின்சார ரயில் வண்டி ஓடி மறைந்தது. கதவு திறக்கப்படவில்லை. பையன் அடுத்த காருக்குத் தாவினான். அந்தப் பழைய மாடல் காரில் உட்கார்ந்திருந்த பழைய மாடல் மனிதரொருவர் பையனின் பாட்டையோ, லெவல் கிராஸிங் விளக்கையோ கவனிக்காமல் கையில் பிரித்து வைத்திருந்த தினப் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார். சிறுவனின் அவியல் பாட்டு தொடர்ந்தது. அவர் தலை நிமிர்ந்து தனது பெரிய மணிபர்சை நிதானமாகத் திறந்து அதிலிருந்து சில்லறைகளைச் சீய்த்து, ஓர் ஐந்து பைசா நாணயத்தைப் பொறுக்கி எடுத்து காரின் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டார். விலை மதிப்பற்ற நேரத்தை வீணாக்காதவர் போலவும், சந்தர்ப்பக் கோளாறினால் அப்படி வீணாகும் நேரத்தில், இம்மாதிரி ஒரு தர்மம் செய்து அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்கிற வழக்கமுள்ளவர் போலவும் தோன்றியது அவருடைய இந்தச் செயல்.

இரையைக் கண்டு பாயும் பருந்தைப் போல் பாய்ந்து குனிந்து பையன் அந்த ஐந்து பைசாவை ஆவலுடன் அடுத்தான். அது நல்ல நாணயம் தானா என்று அவனுக்குச் சந்தேகம். கல்லின் மேல் அதைத் தட்டிப் பார்த்துத் திருப்தியடைந்தவனாய் ஒரு துள்ளுத் துள்ளி நிமிர்ந்து அடுத்த காருக்கு விரைந்தான்.

இந்தச் சமயத்தில் சிவப்பு விளக்கு அணைந்து கிராஸிங் கதவுகள் திறக்கப்பட்டன. சாலையின் இருமுனைகளிலும் தேங்கி நின்ற ஜனப்பிரளயம் எதிரும் புதிருமாக அலைமோதிச் சாய்ந்து ஐக்கியமாகி நகர்ந்தது. 'ஹே' என்ற இரைச்சல்! சைக்கிள் மணியொலிகளும், கார் ஹாரன் சப்தங்களும் காதைப் பிய்த்தன. சில கார்கள் 'ஸ்டார்ட்' செய்த நிலையிலேயே உறுமலிட்டபடி நின்று கொண்டிருந்தன. நரிக்குறச் சிறுவன் முற்றுகையிட்ட காரும் நகர வழியின்றி நின்றது. உடனே பரபரப்புடன் தனது பாட்டையும், ஆட்டத்தையும் துரித காலத்தில் ஆரம்பித்தான் பையன்.

புத்தம்புது மெருகுடன் அன்னப்படகு போல் அழகாக விளங்கிய அந்த நீலநிறக் காரின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தும் பட்டுத் திரைகளால் மூடப் பெற்றிருந்ததால், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. 'டிப்டாப்'பாக டிரஸ் பண்ணிக் கொண்டு முன் சீட்டில் அமர்ந்திருந்த டிரைவர் மட்டுமே தெரிந்தான். பையனுக்கு அவசரம் தாங்கவில்லை. தன் முழுத்திறனையும் காட்டத் துவங்கினான். காரின் ஜன்னல் வழியே கை நீளுகிறதா என்றும் கவனித்துக் கொண்டான். கையும் நீளவில்லை; திரையும் விலகவில்லை. கார் மெல்ல நகர்ந்தது.

பொறுமையிழந்த பையன் தன் பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, 'ஐயாவோ சாமி! ஒரு பைசா போடு சாமி!' கேட்டுக் கொண்டே டிரைவர் இருக்கும் பக்கமாகக் குனிந்து காரின் உள்ளே எட்டிப் பார்த்தான். மறுகணம், அங்கு ஏதோ ஒரு பேரதிசயத்தைக் கண்டு திடுக்கிட்டவன் போல் பின்னால் சாய்ந்தான். அதேசமயம் விருட்டென்று புறப்பட்டு விட்டது கார்.

வியப்பும் திகைப்புமாகப் பிரமித்து நின்ற நரிக்குறவப் பையன், புஷ்பக விமானம் போல் மிதந்து விரையும் அந்த நீலநிறக் காரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். காரின் உள்ளே ஒரு நரிக்குறவப் பெண்ணும், அவள் பக்கத்தில் ஓர் அழகிய நவநாகரீக வாலிபனும் அமர்ந்திருப்பது பின்புறக் கண்ணாடி வட்டத்தின் வழியே மங்கலாகத் தெரிந்தது!

*****
"ஏய்-ஹே திண்டிகோடா! அத்ரே, கார் பண்டிலே வண்டிகோடி போய்ரே... போய்ரே!"

சாலையில் வலப்பக்கச் சரிவில் ஓடும் பெரிய சாக்கடை வாய்க்காலுக்கு அப்பால், ரயில்வேக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தில் முளையடித்துப் போடப் பெற்றிருந்த சிறியதொரு கூடாரத்தில் எதிரில் குத்துக்காலிட்டு அமர்ந்து, கிழிந்த அணில் வலையொன்றைச் செப்பனிட்டுக் கொண்டிருந்த ஒரு நரிக்குறவ வாலிபன், மெல்லத் தலை நிமிர்ந்து பார்த்தான்.

"ஏ, திண்டிகோடா! குத்ரே கார் பண்டில வண்டிகோடி போய்ரே" என்று இரு கைகளையும் ஆட்டிக் காட்டி உரத்த குரலில் கூவிக்கொண்டே தலைதெறிக்க ஓடி வந்தான் அந்தச் சிறுவன்.

திண்டிகோடா என்று விளிக்கப்பட்ட வாலிபன் கையிலிருந்த வலையைப் போட்டுவிட்டு எழுந்து நின்று, தன் எதிரே ஓடி வரும் பையனை உற்றுப் பார்த்தவாறு, "எக்க லபியோ மயிலங்கோடா?" என்று வினவினான்.

இரைப்பு வாங்க ஓடிவந்த பையன், "தத்ரே, கார் பண்டிலே, வண்டிகோடி போய்ரே!" என்று கண்களை அகல விரித்து, வியப்பும் படபடப்புமான குரலில் கூவினான்.

ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்த திண்டிகோடா, கோபமாக விழிகளை உருட்டிக் 'கரபுரா' வார்த்தைகளில் ஏதோ அதட்டிக் கேட்டான்.

மயிலங்கோடா என்ற அந்தச் சிறுவன் தான் பார்த்ததை பல்வேறு அபிநயங்களுடன் விளக்கினான். அவனுடைய பேச்சில் 'கார் பண்டி, வண்டிகோடி' என்ற சொற்களே மிகுதியாக அடிபட்டன.

"ஹே, சங்கிலிக் கொட்டா!" என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கேவிக் கொண்டே தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான் திண்டிகோடா...

கூடாரத்திற்குப் பின்னால், குப்பை கூளங்களைப் போட்டு எரியவிட்ட கல்லடுப்பிலே பானைச் சோறு பொங்கிக் கொண்டிருக்க, அதன் எதிரில் காலை நீட்டி உட்கார்ந்திருந்த நரிக்குறவக் கிழவியொருத்தி, கம்பி இழையை நறுக்கிக் கருகமணிச் சரம் பின்னியவாறு இந்தப் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய கவனம் முழுவதும் அடுப்பில் பொங்கும் அவியல் சோற்றிலும், உருவாகி வரும் கருகமணிச் சரத்திலுமே லயித்திருந்தது.

தலைமேல் கைவைத்து இடிந்துபோய் உட்கார்ந்திருந்த திண்டிகோடா சட்டென்று எழுந்து, "ஏ... அம்மாடியோவ்! இத்ரே லபோ!" என்று அந்தக் கிழவியைப் பார்த்துக் கத்தினான்.

அவள், மெல்ல எழுந்து, பொங்கிக் கொதித்த அவியல் சோற்றை ஒரு துடுப்பால் கிளறிப் பதம் பார்த்துவிட்டு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வாலிபக் குறவனை நோக்கி வந்தாள்.

கோபமும் குமுறலுமாக எதிர் சென்ற திண்டிகோடா அந்தக் கிழவியிடம் ஏதோ படபடவென்று பேசினான். சற்று முன் பையன் வந்து சொன்ன விவரங்களை அவளிடம் அவன் சொல்லியிருக்க வேண்டும். கிழவியின் முகம் சுண்டிச் சுருங்கியது. "தூ... தூ.."வென்று காரித் துப்பினாள். திண்டிகோடா விறைப்பாக வேறுபக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

"ஏ மயிலங்கோடா! இத்ரே லபோ!" என்று இரைந்து கூப்பிட்டாள் கிழவி.

பையன் ஓடி வந்தான். அவனிடம் கிழவி ஏதோ கேட்டாள். வாலிபக் குறவனிடம் சொன்ன வார்த்தைகளையே அவளிடமும் ஒப்பித்தான் பையன். கிழக்குறத்தி மேலும் கிளறிக் கிளறிக் கேள்விகள் தொடுத்தாள். "செப்புத்ரே! செப்புத்ரே!" என்று அதட்டினாள். பையன் தலையைச் சொறிந்து கொண்டு முகத்தைச் சுளித்தான்.

லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படுவதற்கு அறிகுறியாக மணிச் சத்தம் கேட்டது. பையன் தனக்குக் கிடைத்த ஐந்து பைசாவை கிழவியின் முகத்திற்கு நேரே சுண்டிப் பிடித்து அவளுக்கு 'நங்கு' காட்டி விட்டு லெவல் கிராஸிங்கை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

"ஏ - தண்டிகோடா! இத்ரே லபோ" என்றவாறே வாலிபனிடம் சென்றாள் கிழவி. எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து ஏதோ சொன்னாள். அவள் சொல்வதை மறுப்பவன் போல் வேகமாகத் தலையை அசைத்து கையை ஆட்டினான் திண்டிகோடா. அவளோ தான் சொன்னதையே திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னாள். அவளை முறைத்துப் பார்த்த திண்டிகோடா ஆவேசமாகப் பாய்ந்து தனது கூடாரத்தைப் பிய்த்தெறிந்தான். அதனுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அலறிக் கொண்டே அவனைத் தடுக்க முயன்றாள் கிழவி. திண்டிகோடா அவளை நெட்டித் தள்ளினான். பாத்திரங்களையும் குவளைகளையும் மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். பிறகு அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த சோற்றுப்பானையைத் தூக்கி மடேரென்று தரையில் போட்டு உடைத்தான். அவியல் சோறு நாலா பக்கமும் சிதறித் தெறித்தது.

இதைப் பார்த்து வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்ட கிழவி, வெறி பிடித்த மாதிரி அந்த வாலிபக் குறவனைப் பிய்த்துப் பிறாண்டினாள். திண்டிகோடாவின் கோபம் உச்சநிலையை அடைந்தது. அவன் கிழவியை கண் மூக்கு தெரியாமல் அடித்து நொறுக்கினான். புழுதியில் விழுந்து புரண்ட கிழவி நாய்க்குட்டி போல் ஓலமிட்டுப் புலம்பினாள். மேலும் அவளை அடித்துப் புடைக்க கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு பாய்ந்தான் நரிக்குறவன்.

"டேய்! டேய்! என்னடா இங்கே கலாட்டா?" என்றவாறு ஓடி வந்தான் ஒருவன். அவன் அங்கே நடைபாதையில் கடை விரித்து பழ வியாபாரம் செய்பவன்.

திண்டிகோடா தன் கையிலிருந்த கம்பை வீசியெறிந்து விட்டுத் திரும்பினான். பழக்காரனைக் கண்டதும் அவனுடைய சீற்றம் சிறிதே தணிந்தது.

ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்ட பழக்காரன், அதைப் பல்லிடுக்கில் கடித்துக் கொண்டே, "இன்னாடா நடந்துச்சு? எதுக்கு அந்தக் கெய்வியைப் போட்டு இப்படிச் சாத்துரே?" என்று கேட்டான்.

"ஐயோ சாமி! அந்த அக்குருமையா கேக்கிறே?" என்றவாறே தன் தலையை இருகைகளாலும் தாங்கிப் பிடித்து அப்படியே உட்கார்ந்து விட்டான் திண்டிகோடா.

அவனுடைய நிலையைக் கண்டதும் பழக்காரனுக்கு உண்மையிலேயே பரிதாபமாகிவிட்டது. திண்டிகோடாவைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். மத்தியான வேளைகளில் பழ வியாபாரம் மந்தப்படும் போது அந்த நரிக்குறவனிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கோர் அலாதிப் பிரியம்.

அந்தக் குடும்பம் அந்த லெவல் கிராஸிங்கு அருகே குடிவந்து ஒருமாதம் தான் ஆகிறது. சற்று முன் அடியும் உதையும் வாங்கிக் கொண்டு இப்போது பூனை போல் முனகிக் கொண்டிருக்கும் கிழவி திண்டிகோடாவின் தாயார்க்காரி. சிறுவன் மயிலங்கோடா அவன் தம்பி, வண்டிகோடி என்பது அவன் மனைவியின் பெயர். கல்யாணமாகி ஆறுமாதம்தான் ஆகிறது. திண்டிகோடா திண்டிவனத்தில் பிறந்தவன். மயிலங்கோடா மயிலத்தில் பிறந்தவன். வண்டிகோடி விக்கிரவாண்டியில் பிறந்தவள்.

"இன்னாடா கம்முனு இருக்கறே! எங்கனாச்சும் 'சல்பேட்டா' போட்டுக்கிணு வந்திட்டியா?" என்று குறும்பாகச் சிரித்துக் கேட்டான் பழக்காரன்.

"போ சாமி! மன்சன் வவுறு பத்தி எரியறான்; நீ இன்னாடாக்க தமாஸ் பண்றே?" என்றான் பொருமிக் குமுறினான் திண்டிகோடா.

"இன்னாடா விசயம்? சும்மா சொல்லுடா என்கிட்டே?"

"கஸ்மாலம்! கஸ்மாலம்!" என்று தலையில் அடித்துக் கொண்ட நரிக்குறவன், சடாரென்று எழுந்து, "ஏ சாமி! என் சமுசாரம் ஓடிப்பிட்டா சாமி, ஓடிப்பிட்டா!" என்று புலம்பலுடன் கூவித் தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் குந்திக் கொண்டான்.

"யாரு, உன் பொஞ்சாதி வண்டிகோடியா?"

திண்டிகோடா வெறுப்புடன் தலையசைத்தான்.

"அடப் பாவமே! காலம்பறகூட அவ இங்கதானே இருந்தா? நான் கொத்தவால் சாவடிக்குப் போயி சரக்கப் போட்டுக்கிணு வந்தப்போ பாத்தேனே?"

"ஆமா சாமி! அதுக்கப்புறம் தான் தெருமேலே கிளம்பிப் போனாள்"

"எதுக்கு?"

"ஊசி மணி விக்க..."

"அப்புறம்"

"பண்டில போயிட்டாளாம்"

"என்னது"

"கார் பண்டி மேல போயிட்டா சாமி!"

"ஓ... ஊர்மேலே போயிட்டாளா?" என்று கெக்கலி கொட்டி நகைத்தான் பழக்காரன்.

திண்டிகோடா தன் சிவந்த கண்களால் அவனை எரித்து விடுவதுபோல் விழித்துப் பார்த்தான்.

"ஆமா! இது எப்படிடா உனக்குத் தெரிஞ்சது?" நைஸாக விசாரித்தான் பழக்காரன்.

"இப்பத்தான் சாமி, என் தம்பிப் பய வந்து சொன்னான்!"

"அவனுக்கு எப்படித் தெரிஞ்சுதாம்?"

"ரயில் கேட்டண்டை பார்த்தானாம். பெரிய கார் பண்டில குந்திக்கினு போனாளாம்."

"தனியா போனாளா... இல்லே ஜோடிமேல போனாளா?"

"பக்கத்திலே யாரோ ஒருத்தன் குந்திகினு இருந்தானாம் சாமி!" என்று தொண்டையடைக்க, பல்லைக் கரகரவென கடித்துக் கொண்டு சொன்னான் திண்டிகோடா.

"ம்... ஆமா, அவதான் ஓடிப் போயிட்டா. அதுக்கு ஏன் உன்னோட ஆத்தாளைப் போட்டு அடிச்சே?" என்றான் பழக்காரன்.

"பின்னே என்ன சாமி? அந்தக் கய்லாத்து இப்படிப் பண்ணிப்பிட்டாளேன்னு இந்தக் கெய்விக்கிட்டே சொன்னா அதை நம்ப மாட்டேங்குது. அவளை விசாரிச்சிட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லிது. அந்தக் கய்தே வரதுக்கு முன்னே, எங்கனாச்சும் புறப்பட்டுப் போயிடலாம்னு சொன்னா அதுக்கும் ஒத்து வரமாட்டேங்குது. ஈசாம வருமா இல்லியா சாமி. அதுக்குதான் ரெண்டு வாங்கு வாங்கினேன்!" என்று பொங்கிக் குமுறினான் திண்டிகோடா.

"அட சர்தான் போடா! உலகம் போற போக்கிலே அவளும் போயிருக்கறா. திரும்பி வரப்போ நெறையப் பணம் கொண்டாருவாடா. உன் பாடு லக்குதான்!" என்று கூறி ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் பழக்காரன்.

இதைக் கேட்ட நரிக்குறவன் துள்ளி எழுந்தான். அவன் முகம் பயங்கரமாகக் கறுத்துச் சிறுத்தது. "இன்னா சாமி சொன்னே? எங்க சனங்களைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்கெல்லாம் சோத்திலே உப்பு போட்டுத் துண்றவங்க. நேரம் தப்பி வந்தாலுமே பொண்ணுங்களை நாங்க சேத்துக்க மாட்டோம். இந்தக் கஸ்மாலத்தையா சேத்துக்குவோம்? எங்க சாதி சனமே அவ மூஞ்சியிலே இனி முய்க்க மாட்டோம் சாமி! தப்பித் தவறி அவளை மட்டும் நான் பார்த்துட்டா... கவ்தாரி கய்த்தை முறிக்கறாப்ல முறிச்சுப் போட்டுட மாட்டேனா" என்று முரட்டுத்தனமாகக் கர்ஜித்தான்.

"இன்னா பயக்காரா! இங்க கிராக்கி வந்து வந்து போவுது. நீ அங்கன கச்சேரி நடத்திகிணு இருக்கிறியே!" என்று பூக்கடைக்காரி ஒருத்தி குரல் கொடுக்கவே, "சரிடா. அப்புறமா வந்து நாயம் சொல்றேன்! அந்தக் கெயவியைப் போட்டு அடிக்காதே!" என்று சொல்லிக்கொண்டே தன் வியாபாரத்தைக் கவனிக்க விரைந்தான் பழக்காரன்.

திண்டிகோடா மௌனமாக உட்கார்ந்திருந்தான். சற்று நேரங்கழித்து எதையோ நினைத்துக் கொண்டவன் போல் தன் இடுப்பில் தொங்கிய மடக்குக் கத்தியை எடுத்து தனது இடது கை புஜத்தில் பின்னலிட்ட இரட்டைப் பாம்பு போன்று சித்திரமாகக் குத்திக் கொண்டிருந்த பச்சைக் குறியை சதையோடு சீவியெறிந்தான். அது அவனுக்கும் வண்டிகோடிக்கும் கல்யாணம் நடந்தபோது குத்திய சடங்குப் பச்சை! அதைச் சீவியெறிந்த இடத்தில் இரத்தம் வழிந்தது. பொடி மண்ணை வாரி அந்தக் குருதிக் காயத்தில் அப்பிக் கொண்டு எழுந்து போய் சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய கோணிப்பையில் போட்டுக் கட்டுவதில் முனைந்தான்.

மரவள்ளிக் கிழங்கைத் தின்று கொண்டே அங்கு ஓடி வந்தான் சிறுவன் மயிலங்கோடா. திண்டிகோடா அவனிடம் ஏதோ சொன்னான். அவன் முரண்டு பிடிக்கவே பளீரென ஓர் அறை விட்டான். துடித்துப் பதறிய பையன் அழுதுகொண்டே கூடாரத் துணியைச் சுற்றிக் கட்டினான். அரைமணி நேரத்தில் 'டேரா' தூக்கியாகி விட்டது. திண்டிகோடா ஒரு பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கக்கத்தில் வலைப்படலும், கையில் கவுதாரிக் கூண்டுமாகக் கிளம்பினான். பையனும், கிழவியும் மற்ற சாமான்களைத் தூக்கிக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். வியாபாரத்தில் மும்முரமாக இருந்த பழக்காரன் அவர்களைக் கவனிக்கவில்லை.

சற்று தூரம் சென்ற திண்டிகோடா வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஏ.. ஹே.. சங்கிலிக் கொட்டா" என்று உரக்கக் கூவி ஒரு பிடி மணலை வாரிக் காற்றில் வீசிவிட்டு தள்ளாடித் தள்ளாடி மேலே நடக்கலானான்.

வழக்கம்போல் அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்திக் கிடந்தன. இருமுனைகளிலும் ஜனத்திரள் தேங்கிக் கிடந்தது. வெறுப்பும் வேதனையுமாக முணுமுணுத்தவாறு சிவப்பு விளக்கின் எதிரே போய் நின்றான் திண்டிகோடா. அவன் பின்னால் பையனும் கிழவியும் வந்து நின்றனர். சிறுவன் மயிலங்கோடா அங்கு நின்ற கார்களையெல்லாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

எதிரும் புதிருமாக இரண்டு ரயில் வண்டிகள் சென்ற பின் கதவுகள் திறக்கப்பட்டன. ஜனங்கள் சாடி மோதிக்கொண்டு சாய்ந்து நகர்ந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த
சிறுவன் மயிலங்கோடா திடீரென உரத்த குரலில், "ஏ திண்டிகோடா! இத்ரே, கார் பண்டிலே, வண்டிகோடி போய்ரே... போய்ரே.." என்று கூவிக் கொண்டே எதிரே மெள்ள ஊர்ந்து வந்து கொண்டிருந்த நீலநிறக் காரைக் காட்டினான்.

இதைக் கேட்டு அடங்காச் சினமுற்ற திண்டிகோடா, சடாரென்று குனிந்து அந்தக் காரினுள் தன் அனல் பார்வையை வீசினான். மறுகணம் தேள் கொட்டியவன் போல் துடித்துப் பின்னால் சரிந்து கண்களை நிமிண்டிக் கொண்டு பரபரப்புடன் விழித்து நோக்கினான்.

அங்கே... அந்தப் பெரிய காரினுள், ஓர் நரிக்குறத்தி ஒயிலாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவள் உண்மையான நரிக்குறத்தி அல்ல; நரிக்குறத்தி போல் 'மேக்-அப்' செய்து கொண்டிருந்த சினிமா நடிகை. மத்தியான ஷூட்டிங் முடிந்து சிற்றுண்டிக்காகத் தன் வீட்டிற்குச் சென்றவள், இப்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக ஸ்டூடியோவுக்குப் போகிறாள்.

"டோய்! நளினா தேவி போறாடா, நளினா தேவி..." என்ற குரல்கள் ஜனக்கும்பலிடையே எழுந்தன. அடுத்த கணம் அந்தக் கார் குபீரெனக் கிளம்பி சற்றைக்கெல்லாம் மறைந்தே போய்விட்டது.

பிரமை பிடித்தவன் போல் சாலையில் விக்கித்து நின்றான் திண்டிகோடா.

அதே சமயம், சாலையின் எதிர்த் திசையிலிருந்து, "ஏ... பச்சை மணி, பாசி மணி, கருக மணி வாங்கலியோ ஆயே!" என்று ஓசையாகக் கூவிக்கொண்டே வெயிலில் வாடிச் சோர்ந்து வந்து கொண்டிருந்தாள் நரிக்குறத்தி வண்டிகோடி.

ஜெகசிற்பியன்
Share: 




© Copyright 2020 Tamilonline