பறவைக்காதலர் விஜயாலயன்
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின் மீதே.

"இயற்கைமீது எனக்குக் காதல். அதனால் என் பார்வை பறவைகளின் பக்கம் திரும்பியது" என்கிறார். பல நாட்டு நகரங்களின் அழகைக் கேமராவில் சிறைப்படுத்தியிருந்த போதும், இயற்கையையும் பறவைகளையும் படமெடுப்பதற்காகவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் உள்ள காடுகளிலும் சரணாலயங்களிலும் சுற்றித் திரிந்திருக்கிறார்.

சிறுவயதில் அம்மாவின் தாவரவியல் பதிவுப் புத்தகத்தில் பார்த்த வண்ண வண்ண இலைகளும் அதற்கு அம்மா எழுதிவைத்த குறிப்புகளும் ஆர்வத்தைத் தூண்ட, விஜயாலயன் தாவரங்களைத் தேடிக் கிளம்பினார். பள்ளி நாட்களில் வசித்த வட இலங்கையில், வீட்டின் அக்கம்பக்கத்தில் இருந்த பெரிய தோட்டங்களில் தாவரங்களை இனங்காணுவது, பூக்களையும் விதைகளையும் சேகரிப்பது, தொட்டாற்சிணுங்கிச் செடிகளைச் சீண்டி விளையாடுவது எனத் தொடங்கியது இயற்கையுடனான உறவு. வீட்டுக்குப் பின்னாலிருந்த சதுப்பு நிலத்தில் மழைக்காலத்துக்குப் பின் வருடம் ஒருமுறை மட்டுமே பூக்கும் தாவரங்கள் கவனத்தை ஈர்த்தன. அங்கு வந்த பறவைகளைப்போலக் குரலெழுப்புவதில் சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். 'குக்கூ' எனப் பதில்கொடுத்த குயில்களும், ஆள்காட்டிக் குருவிகளும் மெல்ல மெல்ல இவரது ஆர்வத்தைப் பறவைகள் பக்கம் திருப்பிவிட்டன.

Click Here EnlargeClick Here Enlarge
Click Here EnlargeClick Here Enlarge


அப்போதுதான் விஜயலாயனுக்கும் சிறகு முளைத்தது. பறவைகளின் உற்சாகம், வேகம், இனிய கானம், வண்ணக்கலவை, வடிவநேர்த்தி என்று இவற்றுக்காகவே தன் கையால் தயாரித்த ஸ்க்ராப் புத்தகத்தில் தமிழில் பறவைகளின் விவரங்களைப் பதிவுசெய்ய ஆரம்பிக்க, எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கிறது. ஒலிகளை வைத்துப் பறவைகளை அடையாளம் காண்பது, எதற்கு எப்படிக் குரல் கொடுக்கிறது என வித்தியாசம் உணர்வது, எப்போது எங்கே காணக் கிடைக்கும், தொந்தரவு செய்யாமல் எப்படி அணுகுவது போன்ற திறமைகளை வளர்த்துக்கொண்டார். "அப்போது இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் என்னைச் செயலிழக்கச் செய்துவிட்டன" என்று அவர் கூறுகையில் குரலில் சோகம் தெரிகிறது.

மேற்படிப்புக்காக தாய்லாந்து சென்றபோது பசுமையும், அமைதியும் கோலோச்சிய கல்லூரி வளாகத்தில் மீண்டும் துளிர்த்தது இயற்கை நேயம். ஆங்கிலத்தில் பறவைகளின் பெயர்கள், தகவல்களைத் தேடி அறிவதை இணையம் எளிதாக்கியது. ஜூம் வசதிகொண்ட டிஜிட்டல் கேமராவுடன் வார இறுதிகளில் தாய்லாந்தின் காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்து படம் எடுத்தவர், பணம் சேமித்து 55-200 mm லென்ஸுடன் நுழைவுக்கட்ட DSLR வாங்கியிருக்கிறார். பறவைகள், பூக்கள், தாவரங்கள், இயற்கைக்காட்சிகள் என இவர் தொகுத்த ஃபேஸ்புக் ஆல்பங்கள் "விஜயாலயனைப் பார்க்க வேண்டுமானால் புதரில் தேடு" என நண்பர்களைக் கேலிசெய்ய வைத்திருக்கிறது.

விஜயாலயன் படிப்பிலும் குறை வைக்கவில்லை. கனவு கண்டபடியே PhD அட்மிஷன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. "அங்கிருந்த அழகான கட்டிடங்களைவிட என்னை அதிகம் கவர்ந்தது பறவைகள்தாம்" என்று சொல்லிச் சிரிக்கிறார் விஜயாலயன். ஓய்வுநேரத்தில் போகுமிடமெல்லாம் பறவை சுடத் தொடங்கிவிட்டார், கேமராவில்தான். பெரிய ஜூம் லென்ஸுகள் இன்றிச் சாதாரணமான புகைப்படக் கருவிகளைக் கொண்டே இதுவரை 300க்கும் அதிகமான பறவை இனங்களைப் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார். அவற்றில் பாதி ஆஸ்திரேலியப் பறவையினங்கள். தன்னார்வலர்களைக் கொண்ட Birdlife Australia அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களது இணையதளத்தில் இவர் எடுத்த படங்கள் கற்பிக்கும் ஸ்லைடுகளாகப் பயன்படுகின்றன. அதன் நிறுவன உறுப்பினராகவும், அவர்கள் வெளியிடும் மாதாந்தரப் பத்திரிகையின் 2012 டிசம்பர் இதழில் 'சிறப்புக் கவனம்பெறும் புகைப்படக் கலைஞர்' ஆகவும் கௌரவம் பெற்றுள்ளார்.

"எந்தப் பறவை எங்கே இருக்கும்னு தெரியணும். அங்கே போய்ப் பொறுமையாகக் காத்திருக்கணும். எங்கே கிளம்பினாலும் கையில கேமரா இருக்கணும். இதுதான் பறவைக்காதலனின் அடையாளம்" என்கிறார் விஜயாலயன். இவர் எடுத்த இயற்கைக் காட்சிகளும், கட்டடக்கலை படங்களும், வண்ணவிளக்குகளில் ஒளிரும் இரவுநேர மெல்போர்ன் நகரக் காட்சிகளும் மிகுந்த பாராட்டுப் பெற்றவை.

Click Here EnlargeClick Here Enlarge
Click Here EnlargeClick Here Enlarge
Click Here EnlargeClick Here Enlarge



இவற்றையெல்லாம் பார்க்க:
flickr.com
www.evergreenclicks.com/nature
facebook.com/evergreenclickscom

அனுபவபூர்வமான ஆலோசனைகளை அறிய: clicking-moments.blogspot.com.au

ராமலக்ஷ்மி,
பெங்களூரு

தென்றல் இதழ் அட்டையில்
'கண்கவரும் கருப்பு அன்னங்கள்'
படம்: K. விஜயாலயன், ஆஸ்திரேலியா

© TamilOnline.com