ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா
ஜனவரி 17, 2015 அன்று ஹூஸ்டன் வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழாவைக் கொண்டாடியது. பொங்கல் பண்டிகையின் சிறப்பை உணர்த்தும் வகையில் குழந்தைகளுக்கு ஓவியம், ஆடையலங்காரப் போட்டிகள் நடைபெற்றன. அதில் சிறுவர்கள் வேட்டி சட்டை, சிறுமிகள் பாவாடை சட்டை, புடைவை அணிந்துவந்தது கண்கொள்ளாக் காட்சி. குழந்தைகள் பொங்கலின் சிறப்புப்பற்றி பேசியது சுவையாக இருந்தது. விழாவின் முக்கியப் பகுதியாக குழந்தைகள் தமிழர் திருநாள் பாடல் மற்றும் நாட்டுப்புறப் பாட்டுக்கு ஆடிய நடனங்கள் குறிப்பிடத்தக்கன. அந்நாளில் வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளியின் சமூகசேவையின் அங்கமாக ஹூஸ்டன் உணவுவங்கிக்காக உணவு சேகரித்தது. அதற்குக் குழந்தைகளும், பெற்றோர்களும் உணவுக்குப்பிகளை அளித்தனர்.

வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளிக் கிளை ராபின்சன் வெஸ்ட்சேஷ் நூலகத்தில் முன்னர் இயங்கிவந்தது. அது டிசம்பர் 20, 2015 அன்று 8925 லிபன் ரோட், ஹூஸ்டன், டெக்சஸ் 77063 என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய வளாகத்தை ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளித் தலைவர் திரு. கோபால் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கிளை முதல்வர் திரு. ஜெகதீஸ் சங்கர் பள்ளியின் செயல்பாடுகளை விளக்கினார். அதேநாளில் கிளையின் நூலகமும் தொடங்கப்பட்டது.

ஜெகதீஸ் சங்கர்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com