சிக்கலில் குஷ்பு
எஸ்.ஜே. சூர்யாவை அடுத்துப் பெரும் சிக்கலில் இப்போது மாட்டிக் கொண்டிருப்பவர் குஷ்பு. எய்ட்ஸ் பற்றிப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கற்பைப் பற்றிக் குஷ்பு கூறிய கருத்துகள் அவரை இந்த இக்கட்டில் தள்ளிவிட்டது.

தமிழகப் பெண்களைத் தவறாகப் பேசியதாக கூறி அவருக்கு எதிராகச் சில அரசியல்கட்சிகளும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடந்த நிகழ்ச்சிகளுக்குத் தனியார் தொலைக்காட்சியின் மூலமாக குஷ்பு மன்னிப்புக் கேட்டும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இன்று தமிழகமெங்கும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் குஷ்பு மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ்ப் பெண்களை நான் கேவலப்படுத்திப் பேசியிருந்தால் அது என் தாயைக் கேவலப்படுத்திப் பேசுவது போல் ஆகும் என்று குஷ்பு விளக்கம் அளித்தும் அவர் மேலான எதிர்ப்பு குறையவில்லை. கனிமொழி கருணாநிதியும் குஷ்புவைக் குற்றமற்றவர் என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் குஷ்பு, சரிதா, ஜோதிகா நடித்து திரைக்கு வெளிவர காத்திருக்கும் 'ஜூன்R' படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். குஷ்பு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்த நிலையில் 'ஜூன்R' வெளிவருவது கேள்விக்குறியாக இருக்கிறது.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com