FeTNA: தமிழ்த் திருவிழா
2015 ஜூலை 3, 4 தேதிகளில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா கோலாகலமாக நடக்கவுள்ளது. இவ்விழாவில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் இனிய நிகழ்ச்சிகள் துறைவல்லுநர்களால் நடத்தப்படுகிறது. தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன், பேரவையின் 27 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நடக்கப்போகும் இந்தவிழா கிட்டத்தட்ட 80 மணிநேரம் உவகையூட்டும் மாபெரும் கலைவிழாவாக இருக்கும். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் இந்த விழாவில் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம், தமிழ்நாடு அறக்கட்டளை (TNF-Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்க தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA-American Tamil medical Association) போன்ற முக்கியமான அமைப்புகளும் தோள்கொடுக்கின்றன.

'தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பிரபல பாடகி சௌம்யா வரதன், பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ, விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' திறமையாளர்கள் செல்வன் திவாகர், செல்வி பூஜா மற்றும் பிரகதி ஆகியோர் நம்மை மகிழ்விக்க வருகின்றனர். திரையிசைப் பாடகர் ஹரிசரண் தனது Bennette and Band குழுவில் பாடுவதுடன், புத்தர் கலைக்குழுவினரின் பறையிசையோடு சேர்ந்து அனைத்துலகத் தமிழர்களுடன் நடனநிகழ்ச்சி வழங்குகிறார். "கும்கி" புகழ் மகிழினி மணிமாறன், கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனை. மார்கரெட் பாஸ்டின், தமிழக அரசின் நிதித்துறைச் செயலர் தி. உதயசந்திரன் I.A.S., பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் முதலானோர் சிறப்புரை வழங்க, நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்டுவார். பல முன்னணித் திரைக்கலைஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் வருகைக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது. சன் டிவி புகழ் 'கல்யாண மாலை' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற நாவலான 'அஞ்ஞாடி' நாவலை எழுதிய ஆசிரியர் பூமணி அவர்களும் சிறப்பு செய்யப்படுவார்.

சிலிகான் பள்ளத்தாக்கில் நடைபெறும் இவ்விழாவில் தொழில்முனைவோருக்கான அரங்கம் (Entrepreneurship Forum) பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்படுகிறது. இரு துணையரங்குகளில் நான்கு முக்கியச் சிறப்பு அழைப்பாளர்களோடு இந்நிகழ்ச்சி நடபெறும். Best Startup Idea-க்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டியும் உள்ளது. புதுத் தொழில்திட்ட முதலீட்டாளர் (Venture capitalists) நடுவர்களாக அமர்ந்து, பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பர். சுயதொழிலுக்கான திட்டமுள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்தச் செல்லலாம் என்பதை சந்தை ஆய்வு, நிதி, திட்டமிடல், சட்டம் எனப் பல பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும் நடக்கும். மாபெரும் நிறுவனங்களில் உயர்பதவியில் இருப்போரும், வெற்றிகரமான தொழில்முனைவோரும், அரசுப் பணியாளர்களும் பல்முனை நோக்கில் கருத்துகள் வழங்குவர். அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பேரவையின் தமிழ் முன்னோடி விருதும் (Tamil American Pioneer Award) அளிக்கப்படவுள்ளது. ATMA மருத்துவர்களுக்கான தொடர்கல்வி நிகழ்ச்சிகளை (CME-Continuing Medical Education seminars) ஏற்பாடு செய்கிறது.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய அபிராமி கலைமன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகிய 'சிவகாமியின் சபதம்' நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். விரிகுடாப்பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களைக் கொண்டு அரங்கேறும் இந்த நாடகம் விழாவின் முக்கியமானதொரு நிகழ்வு.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய:
www.fetna2015.org, www.fetna.org.

விவரமறிய மின்னஞ்சல் அனுப்புக:
coordinator@fetna.org, secretary@bayareatamilmanram.org

தில்லை குமரன்

© TamilOnline.com