ஜார்ஜியா: 'சாந்தி' இசைவிழா
நவம்பர் 8, 2014 அன்று அட்லாண்டா ஜார்ஜியாடெக் பல்கலைக்கழக அரங்கில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் 'சாந்தி' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட அந்த இசைக்குழுவில் பெரும்பாலோர் அட்லாண்டாவைச் சுற்றி வாழுவோர் என்றும் அவர்களை எங்கோ இருந்துகொண்டு கன்னிக்ஸ் இயக்கினார் என்றும் அறிந்தபோது வியப்பு ஏற்பட்டது.

இந்திய மற்றும் மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத மரபுகளையும் நடனங்களையும் அபூர்வமான முறையில் ஒருங்கிணைத்து நாட்டிய நாடகங்கள் வழியாக பாரத மண்ணின் புராதன கலாசாரத்தைக் கன்னிக்ஸ் அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சிறப்பான முறையில் வழங்கி வருகிறார். மேற்கத்திய, இந்திய இசைக்கருவிகளை மிகவும் நுணுக்கமாக அபூர்வமான வகையில் பின்னிப் பிணைத்து, சமஸ்கிருத, தமிழ்க் கிருதிகளை சிம்ஃபனி இசையாக அவர் அட்லாண்டாவில் வழங்கிய இயல்-இசை-நாடகம், ரசிகர்களுக்கு அரியதொரு விருந்தாயிற்று.

'சாந்தி' நிகழ்ச்சியை ஆறு அங்கங்களாகப் பிரித்துக் கொள்கிறார் கன்னிக்ஸ். பிரபஞ்சத்தின் தோற்றம், ஆழ்ந்த தத்துவங்கள் போன்றவற்றை மனித சிந்தனை கிரகித்துக்கொண்டு மானுடம் நாகரீகத்தை எப்படி நெறிப்படுத்தித் துவங்கியது என்பதைச் சொல்வது முதல் அங்கம். ஆன்மீக உணர்வுகளைப் பல்வேறு மதங்களும் எப்படி உணரத் துவங்கின என்பது இரண்டாவது அங்கம். நிலையான நிறைவு, சாந்தி போன்றவற்றை மானுடம் எப்படித் தேடிக் கொள்கிறது என்பதைச் சொல்வது மூன்றாம் அங்கம்.

தருமத்தின் வாழ்வுவதை சூது கவ்வும் கொடுமையை நான்காம் அங்கத்திலும், அவற்றின் விளைவாக மானுடம் கற்ற பாடங்களை ஐந்தாம் அங்கத்திலும் காட்டுகிறார். இந்த அனுபவங்கள் வழங்கும் ஞானம், அதனால் வரும் மாற்றங்களால் பெறத்தக்க உயரிய ஆனந்தத்தை ஆறாம் அங்கம் சொல்லிச்சென்றது. இறுதியாக 'இனி வருங்காலம் ஒளி மயமானது' என்று சொல்லி நிறைவு பெற்றது இவ்வரிய இசை விழா,

டாக்டர் சோமாஸ்கந்தா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com