ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
டிசம்பர் 13, 2014 அன்று திருக்குறள் திருவிழா கேட்டி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளியின் 5 கிளைகளிலிருந்தும் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 120 மாணாக்கர்கள் பங்கேற்று, மொத்தம் 1500 அமெரிக்க டாலர்களைப் பரிசாகப் பெற்றனர். சரியான விளக்கத்துடன் ஒப்பிக்கப்படும் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு டாலரும், விளக்கமின்றி ஒப்பிக்கப்படும் குறள் ஒவ்வொன்றுக்கும் 0.50 சென்ட்டும் பரிசாக வழங்கப்பட்டது. வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் அதிகக் குறட்பாக்களை ஒப்பிக்கும் மாணாக்கர்களுக்கு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் ஆண்டுவிழாவன்று வழங்கப்படுகின்றன. 10 மாணாக்கர்கள் 50க்கும் மேற்பட்ட குறட்பாக்களை ஒப்பித்தனர். முத்தாய்ப்பாக, பவித்ரா சந்திரசேகரன் எனும் 10 வயது மாணவி 235 குறட்பாக்களை ஒப்பித்து 231 டாலர்களுடன் சிறப்புப் பரிசையும் தட்டிச்சென்றார். 4 வயதுடைய மாணாக்கர்கள்கூட குறட்பாக்களை விளக்கத்துடன் கூறியது வியப்பளிப்பதாக அமைந்தது.

திரு. சகாய தமிழரசன் தலைமையிலான தன்னார்வலர் குழு இந்த விழா வெற்றிகரமாக நடைபெறப் பெரிதும் உதவினர்.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com