விகடன் எஸ். பாலசுப்ரமணியன்
ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இயல்பான மொழிநடையை விகடனில் அமைய முயற்சித்த இவர், ஜெயகாந்தன் போன்றோரை விகடனில் எழுத வைத்தார். 'முத்திரைக் கதை' என்பதைப் பத்திரிகையுலகில் புகுத்தியவர் பாலசுப்ரமணியன். திரைப்படத் துறையிலும் கால் பதித்த இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் சில படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆர். நடித்த 'சிரித்து வாழ வேண்டும்', முத்துராமன் நடித்த 'எல்லோரும் நல்லவரே' போன்றவை அவற்றில் முக்கியமானவை. பத்திரிகைப் பணியா, திரைப்படமா என்று யோசித்து, கவனம் ஒன்றின்மீது இருந்தால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும் எனவுணர்ந்து திரையுலகிலிருந்து விலகினார்.

இவர் 'சேவற்கொடியோன்' என்ற புனைபெயரில் எழுதிய 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' அக்காலத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற தொடராகும். பத்திரிகைப் பணியில் கவனம் செலுத்துவதற்காக, தான் எழுதுவதை நிறுத்தினார். சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன் எனப் பலரது எழுத்துக்களை வெளியிட்டார். எஸ்.எஸ். வாசன் தொடங்கிய 'மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்' இவரது முயற்சியில் மேலும் பொலிவுற்றது. புலனாய்வு இதழ்களின் முன்னோடியான ஜூனியர் விகடனை ஆரம்பித்ததும் இவர்தாம். 1987ல் விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய தமிழக அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், அதை எதிர்த்து அரசின்மீது வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றார்.

விவசாயம், பறவைகள் மீது காதல் கொண்டவர். படப்பை அருகே இயற்கை விவசாயப் பண்ணையை அமைத்தவர், அரிதான பறவைகள் பலவற்றையும் வளர்த்து வந்தார். உடல்நலிவுற்று மாரடைப்பால் காலமான இவருக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஒரு நல்ல பத்திரிகையதிபராகத் திகழ்ந்தவர் எஸ். பாலசுப்ரமணியன்.

© TamilOnline.com