BATS: தீபாவளி
நவம்பர் 1, 2014 அன்று ஃப்ரீமான்ட்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் பாரதி தமிழ் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர். சங்கத் துணைத்தலைவர் (VP culturals) திருமதி. கௌரி சேஷாத்ரி வரவேற்புரை வழங்கினார். திரு. பாலாஜி ராஜகோபாலன் தீபாவளி பற்றிய சிறப்புரை ஆற்றினார். ஸ்ருதி கதிரேசன், கீர்த்திகா ராம்கி போன்ற இந்திய வம்சாவளி குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை பங்குகொண்ட வண்ண மயமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பரதம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், பங்கரா, டாண்டியா, கதகளி ஆகிய நடனங்களும் கர்நாடக சங்கீதம், வாத்திய இசைகள், ஹிந்துஸ்தானி, ஹிந்தி, மலையாளம், கர்நாடகம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளிலான பாடல்களும் இசையும் இடம்பெற்றன. இடையிடையே திரு. வாசுதேவன் நஞ்சன்கோடு திரையிசை வினாடிவினா வழங்கினார். கண்கவர் ஆடை அலங்கார அணிவகுப்பு முத்தாய்ப்பாய் அமைந்தது. இறுதியில் செயலாளர் திரு. T.S. ராம் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com