நாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்
நவம்பர் 9, 2014 அன்று 'The Flowering Tree' நாட்டிய நாடகத்தை நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோவின் Skokie's North Shore Center for the Performing Arts அரங்கில் வழங்கியது. அறிஞரும் கவிஞருமான ஏ.கே. ராமானுஜன் கன்னடத்தில் எழுதிய கதைக்கு நாட்யாவின் கிருத்திகா ராஜகோபாலன் மேடைவடிவம் கொடுத்திருந்தார். அவரே சூத்திரதாரராகவும் மேடையில் தோன்றி கதையைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

ஏழைப் பெண் குமுதாவை (ஷோபனா கோபாலகிருஷ்ணன்) கிராமத்தின் பணக்காரப் பெண்கள் கேலி செய்கிறார்கள். வேண்டும்போது ஒரு பூக்கும் மரமாக மாறவும், திரும்பவும் பெண்ணாக மாறவுமான ஒரு மந்திரத்தைக் குமுதாவுக்கு ஓர் அசரீரி வழங்குகிறது. இந்த அற்புத வாழ்க்கை அவளை ஓர் இளவரசனோடு (வினய் ஸ்ரீனிவாசன்) மணம்புரியக் கொண்டு செல்கிறது. அவனும் அவனது பொறாமைக்கார சகோதரியும் (லீனா பி. மித்தல்), குமுதாவின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியதும் அவள் தனது சுதந்திரத்தை இழக்கிறாள். தமது குற்றத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள். கழிவிரக்கம்,குமுதாவுக்கும் மலரும் மரத்துக்கும் ஆற்றலை மீட்டுத் தருகின்றது என்பதே கதை.

நாட்யாவின் கலை இயக்குனர் ஹேமா ராஜகோபாலனின் கரங்களில் கதையும் பரதநாட்டியக் கலைவடிவமும் ஒரு புதிய வேகமும் உயிர்ப்பும் பெறுகின்றன. நாட்டியமாடுவோரின் குழு இயக்கத்தை எழில்பட ஒருங்கமைத்தே ஒரு பூக்கும் மரத்தை மேடையில் நம் கண்முன் தோன்றச் செய்வது கற்பனையின் அற்புத சமத்காரம். இவையனைத்துக்கும் பின்னே ராஜ்குமார் பாரதியின் சந்தர்ப்பத்துக்கேற்ற இசையமைப்பின் நேர்த்தி ஒரு பெரும்பலம். இது நாட்யாவின் கிரீடத்தில் மற்றொரு மயிலிறகு என்றால் மிகையல்ல.

மூலம்: லின் கோல்பர்ன் ஷப்பீரோ

© TamilOnline.com