மகாகவி பாரதி கதைகள்
பாரதியாரின் கவிதைகள் நம்மை அடிமை கொண்டனவென்றால் அவர் எழுதிய பல கதைகள் சிரிக்க வைப்பவை, இறுதியில் அரிய கருத்தைச் சொல்பவை. அவரது பிறந்த நாளை ஒட்டி (டிசம்பர் 11) அவரது குட்டிக் கதைகள்:

ஆனைக்கால் உதை
ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு.

போகும்போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமான காலைக் காட்டிப் "பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன் ஜாக்கிரதை!" என்பான்.

"சாதாரணக் காலால் அடித்தால்கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடிப்பட்டால் நாம் செத்தே போவோம்" என்று பயந்து பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒருநாள் கடைக்காரன் பாராதிருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப்போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெருமுனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி "அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை" என்றான்.

மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். "வெறும் சதை" யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து "எலும்புள்ள" கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?

கவிராயனும் கொல்லனும்
ஐரோப்பாவிலே மகா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப்பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம் போன படிக்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்து விட்டது; உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்ப முண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன், "நீ யாரடா, பயித்தியம் கொண்டவன், என்னுடைய சாமான்களை யெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்?" என்றான். "உனக்கென்ன?" என்று கேட்டார் கவிராயர்.

"எனக்கென்னவா! என்னுடைய சொத்து தம்பீ, என்னுடைய ஜீவனம்!" என்றான் கொல்லன்.

அதற்குக் கவிராயர்:"அதுபோலவேதான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக் கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே; என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய், எனக்கு அதுதான் ஜீவனம். இனிமேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே" என்று சொல்லிவிட்டுப் போனார்.

பிரார்த்தனை
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க.

- மகாகவி பாரதியார்

© TamilOnline.com