அமெரிக்கத் தமிழ் மையம்: ஆண்டு விழா
அக்டோபர் 19, 2014 அன்று நியூ ஹெவன் மாநகரில் அமெரிக்கத் தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் தேசிய கீதத்துடன் தொடங்கிய மையத்தின் ஆண்டு விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார். மையத்தின் தலைவரும் நிறுவனருமான முனைவர் பழனி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் விவேக் சிறப்புரை ஆற்றியதோடு திரைப்பாடல்கள் சிலவற்றைப் பாடினார். தொழிலதிபரும் புரவலருமான ஜெகதீசன் பூலா, நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் தலைவருமான காஞ்சனா பூலா மற்றும் தொழிலதிபரும் புரவலருமான ராகவன் கிருஷ்ணமூர்த்தி, கனெக்டிகட் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஸ்ரீமதி ராகவன் ஆகியோர் விவேக் அவர்களுக்குச் சிறப்புச் செய்தனர். நியூ யார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கவிதா வேலவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நியூ ஜெர்சி அனிதா கிருஷ்ணா இசைக் குழுவினர் மெல்லிசை வழங்கினர். நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com