சர்வலகு: மாணவர்களுக்கு மேடை வாய்ப்பு
அக்டோபர் 26, 2014 மாலை, சான் ஹோசே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அரங்கில், 'அகாடமி ஆஃப் இண்டியன் கல்சர்' ஏற்பாடு செய்திருந்த திருமதி. கஸ்தூரி சிவகுமார் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரிக்கு, வருண் விஸ்வநாதன், சத்யா ரமேஷ் இருவரும் வித்வான் திரு. ரமேஷ் ஸ்ரீநிவாஸனுடன் இணைந்து மிருதங்கம் வாசித்தனர். டாக்டர். சரவணப்ரியன் ஸ்ரீராமன் வயலின் வாசித்தார்.

வளரும் கலைஞருக்கு மேடையில் வாய்ப்புக் கொடுத்து அவரது திறமைமேல் நம்பிக்கை கொள்ள வைப்பது, பயிற்சியின் முக்கியமான அங்கமாகும். அவ்வகையில் வருணுக்கும் சத்யாவுக்கும் கிடைத்த வாய்ப்பு ஒரு சீரிய முயற்சியாகும். 'சர்வலகு தாளவாத்யக் கலை மையம்' தொடங்கிய புதிய திட்டத்தின்கீழ் இது நடந்தது. இங்கே பயிலும், அரங்கேற்றம் செய்த அல்லது செய்யவிருக்கும் மாணவர்கள், பெரிய கலைஞர்களுக்குத் துணைப் பக்கவாத்தியக் காரர்களாக மேடையேறுவர்.

இந்த நிகழ்வில் பாடிய திருமதி. கஸ்தூரி, நெய்வேலி சந்தானகோபாலனின் மாணவி. தனது இனிமையான குரலில் அவர் பல நுட்பங்களை வெளிப்படுத்தினார். கச்சேரியை அடதாள வர்ணத்துடன் தொடங்கினார். ஸ்ரீரஞ்சனியில், தியாகராஜரின் 'சொகசுகாம்ருதங்க தாளமு', பந்துவராளியில் தீக்ஷிதரின் 'ராமனாதம் பஜேஹம்' ஆகியவற்றைப் பாடினார். இரண்டாவதில் நெரவல், கல்பனா ஸ்வரம் ஆகியவை மிக அருமையாக அமைந்திருந்தன. கோபாலகிருஷ்ண பாரதியின் 'என்னேரமும் உந்தன்' என்ற தேவகாந்தாரி ராகப்பாடல், தீக்ஷிதரின் 'ஸ்ரீ ராமசரஸ்வதி', கரகரப்ரியாவில் தியாகராஜரின் 'பக்கல நிலபதி', 'ஸ்மர சுந்தராங்குனி' என்ற ஜாவளி ஆகியவற்றுக்குப் பின்னர் ஹம்ஸாநந்தி ராகத் தில்லானாவைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.

குரு. ரமேஷ் ஸ்ரீநிவாசன் வளரும் கலைஞர்களைச் சிறப்பாக வழிநடத்தினார். தன்னுடன் இணைந்து வாசிக்க

சந்தர்ப்பம் அளித்ததோடு, தனியாக வாசிக்கவும் வாய்ப்புக் கொடுத்தார். தனி ஆவர்த்தனம், (கொறைப்பு?) ஆகியவற்றிலும் அவர்களுக்கு வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். இது இளம் கலைஞர்களுக்கு நல்ல அனுபவ அறிவைக் கொடுத்திருக்கும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனி இரு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்றார் குரு ரமேஷ். மற்ற கலைஞர்களுடன் வேறு புதிய மாணவர்கள் இணைந்து இதுபோல் வாசிப்பார்கள் என அறிவித்தார். இது தனது மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். அவர் இதற்கு,வளைகுடாப் பகுதி ரசிகர்கள் மற்றும் கலைஞர்களது ஆதரவை வேண்டுகிறார். இந்த நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழாக்கம்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com