தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள்
தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும் என்று மேரிலாண்ட் துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்தார்.

டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, அறக்கட்டளை இயக்குனர் வேலு ராமன் மற்றும் தன்னார்வத் தொண்டர்களிடம் இதனைத் தெரிவித்தார். திருக்குறள் போட்டிகள் மூலம் உலகெங்கும் திருக்குறளை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக வேலு ராமன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ராஜன் ஆலோசனை செய்து வருகிறார்.

அறநெறியில் வாழத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய திருக்குறளை, அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த அறிவுத்தலங்கள் பெரும் பங்களிக்கும், தமிழகம் மற்றும் புதுவையில் 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள் அமையும்போது அது உலக அளவில் ஒரு பிரம்மாண்டமான சாதனையாக திகழும் என்பதில் ஐயமில்லை.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com