பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். மார்ச் 21, 1923 அன்று, நாச்சிமுத்துக் கவுண்டருக்கும் ருக்மிணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த மகாலிங்கம், லயோலா கல்லூரியில் பயின்றார். பின்னர் அண்ணா பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றார். தந்தையின் தொழிலை பொறுப்பேற்று நடத்தத் துவங்கினார். சக்தி குழுமம், சக்தி கல்வி நிறுவனங்கள், ஓம் சக்தி மாத இதழ் உட்படப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டார். பல்வேறு சிறந்த சமூகப் பணிகளை ஆற்றியதுடன், 15 ஆண்டுக் காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் பங்களித்தார். மிக ஆழ்ந்த தமிழ்ப்பற்று, ஆன்மீக ஈடுபாடு, இந்திய தேசிய உணர்வு என்னும் அரும்பண்புகளின் இருப்பிடமாக அவர் திகழ்ந்தார்.

வள்ளலார்-காந்திய நெறியில் எளிமை, அன்பு, இன்சொல், பணிவு, நேர்மை போன்றவற்றோடு இறுதிவரை வாழ்ந்து காட்டிய இவர், "அருட்செல்வர்" என்று அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைகழகங்களின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் உட்படக் கணக்கற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். வர்த்தமானன் பதிப்பகத்துடன் இணைந்து திருவருட்பா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட பல நூல்கள் மலிவு விலையில் வெளியாக இவரே காரணம். ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளில் காந்தி-வள்ளலார் விழா நிகழ்த்துவது பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நெடுங்காலப் பழக்கம். இந்த ஆண்டும் அந்த விழாவில் அமர்ந்திருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.

அவரது தென்றல் நேர்காணல் பார்க்க: ஜனவரி 2003 இதழ். ஓர் ஒப்பற்ற தமிழ்மகனுக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com