அரங்கேற்றம்: நந்திதா குமார்
ஆகஸ்ட் 30, 2014 அன்று 'தாளஸ்ருதி நாட்டியப் பள்ளி' மாணவி செல்வி. நந்திதா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மாண்ட்கோமெரி பள்ளி வளாகத்தில் நடந்தது. புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்த சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் மங்களம் முடியும்வரை நீடித்தது. கிருஷ்ண கௌத்துவத்தின் ஜதி லயத்தில் மயங்கி எழுவதற்குள் கணேஷ மல்லாரியின் அலாரிப்பு மிகவும் அருமை. தொடர்ந்து ஆடிய முருக சப்தத்தின் அடவும், அபிநயமும் நல்ல அனுபவமாக இருந்தது. பாலமுரளியின் 'அம்மா ஆனந்ததாயினி' வர்ணத்தில் குரு. ரேணுகா ஸ்ரீநிவாசனின் மார்க்கமும், முத்திரையும் பார்த்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாட்டியம், நிருத்யம், நிருத்தம் என்று எல்லாவற்றையும் சிறப்பாக எடுத்துக்காட்டியது. இடைவேளைக்குப் பிறகு வந்த 'அலைபாயுதே'விலும் 'யாரோ இவர் யாரோ'விலும் நந்திதா சிருங்காரம் கலந்து, புராண காலத்தைக் கண்முன் நிறுத்திவிட்டார். அடுத்து வந்த பதஞ்சலியின் சிதம்பர நடனம் மெய்சிலிர்க்க வைத்தது.

நந்திதா தனது 12 வருட நாட்டியப் பயிற்சிக்கும் திறனுக்கும் பாராட்டுதலை வாங்கிக் குவித்தார். ஒரு சிறிய செய்தி: தென்றலில் மாயாபஜார், சிறுகதைகள் மூலம் நன்கறியப்பட்ட திருமதி. தங்கம் ராமஸ்வாமி அவர்களின் பெயர்த்திதான் நந்திதா.

அசோக்குமார்,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com