அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன்
செப்டம்பர் 7, 2014 அன்று, குரு டெல்லி சுந்தர்ராஜன் அவர்கள் முன்னிலையில், அவரது மாணவன் செல்வன். விக்னேஷ் தியாகராஜனின் வயலின் அரங்கேற்ற நிகழ்ச்சி Woodside Performing Arts Center அரங்கில் நடந்தது. கண்டஜாதி அட தாளத்தில் அமைந்த காம்போதி வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்த கீர்த்தனைகளில் ஆனந்த பைரவியில் சஞ்சாரம், அதன்பின் பூர்வி கல்யாணியில் ராகம், கல்பனா ஸ்வரம் என்று அனாயசமாக வாசித்து வியக்க வைத்தார் விக்னேஷ். தோடியில் அமைந்த தியாகராஜ ஸ்வாமிகளின் "கதனுவாரிக்கி" கிருதியை மிக விஸ்தாரமாகவும் நேர்த்தியாகவும் வாசித்தார் விக்னேஷ். மூத்த வித்வான்கள் திரு. நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), ஆதம்பாக்கம் சங்கர் (கடம்) ஆகியோரின் பக்கமும் தனி ஆவர்த்தனமும் சிறப்பாக அமைந்திருந்தன. பூர்ண ஷட்ஜம், கிரணாவளி போன்ற அபூர்வ ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் மற்றும் தேஷ் ராகத்தில் அமைந்த ராகம், தானம், பல்லவி கச்சேரியின் சிறப்பம்சமாகும்.

வசந்தா வெங்கட்ராமன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com