மகாத்மா காந்தி - பொன்மொழிகள்
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது.

- மகாத்மா காந்தி

நான் உங்களுக்கு ஒரு தாயத்துத் தருகிறேன். எப்போதெல்லாம் சந்தேகம் ஏற்படுகிறதோ, எப்போதெல்லாம் 'நான்' என்பது மிகுகிறதோ, அப்போது இந்தச் சோதனையை மேற்கொள்ளுங்கள்: நீங்கள் பார்த்தவர்களிலேயே மிகுந்த வறுமையும் பலவீனமும் கொண்டதொரு முகத்தை நினைவு கூருங்கள். "நான் செய்ய நினைக்கும் செயலால் இவருக்கு ஏதாவது பயனுண்டா? இதனால் இவர் எதையாவது பெறுவாரா? இதன் காரணமாக இவரது வாழ்க்கையும் விதியும் இவரது கைப்பிடிக்குள் மீண்டுவருமா? வேறு வார்த்தைகளில் சொன்னால், இதனால் பசியிலும் ஆன்ம தாகத்திலும் வாடும் கோடிக்கணக்கானவர்கள் சுயராஜ்யம் பெறுவார்களா?" என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

அப்போது உங்கள் ஐயங்களும், 'நான்' என்ற உணர்வும் கரைந்துருகி மறையும்.

- மகாத்மா காந்தி

ஒரு புரட்சியாளனின் சாகசத்தையும் தியாகத்தையும் நான் மறுக்கவில்லை. ஆனால் தவறான நோக்கத்துக்காகச் செய்யப்படும் சாகசம் நல்ல நோக்கத்துக்குத் தீங்கு செய்வதுடன், உன்னதமான ஆற்றலை விரயப்படுத்துகிறது. தவறான சாகசமும் தியாகமும் மக்கள் கவனத்தை நல்ல நோக்கத்திலிருந்து வசீகரித்துத் திசை திருப்புவதன்மூலம் இதைச் செய்கிறது.

- மகாத்மா காந்தி

சூழ்நிலை எதுவானாலும் கொலையோ தீவிரவாதமோ நல்லதென நான் ஏற்கமாட்டேன்.

- மகாத்மா காந்தி

அகிம்சை வழியேற்ற சுதந்திர இந்தியாவில் குற்றம் இருக்கும், குற்றவாளிகள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை இருக்காது. வேறெந்த நோயையும்போல, குற்றமும் ஒரு நோய் - சமூகக் காரணங்களால் ஏற்பட்ட நோய். கொலை உட்பட எல்லாக் குற்றங்களும் நோயாகவே கருதப்படும். அப்படிப்பட்ட இந்தியா உருவாகுமா என்பது வேறு கேள்வி.

- மகாத்மா காந்தி

நான் ஒரு தீர்க்கதரிசியல்ல. நான் ஒரு செயல்முறை லட்சியவாதி என்று கூறிக்கொள்பவன். அகிம்சை மதம் ஏதோ ரிஷிகளுக்கும் முனிவர்களுக்குமானதல்ல. சாதாரண மனிதர் அனைவருக்கும் உரியது.

- மகாத்மா காந்தி

அகிம்சை மனிதகுலத்தின் சட்டம். அது மிருக பலத்தைவிட எண்ணற்ற மடங்கு பெரியதும் உயர்ந்ததும் ஆகும்.

- மகாத்மா காந்தி

அகிம்சை வழிமுறை தனிமனிதனுக்குச் சரிப்படும் ஆனால் மக்கள் சமூகத்துக்கு உதவாதென்று நினைப்பது பெருந்தவறு.

- மகாத்மா காந்தி

© TamilOnline.com