டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா
ஜூன் 7, 2014 அன்று டெட்ராய்ட் மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் நான்காவது ஆண்டு விழா லிவோனியாப் பள்ளியில் நடைபெற்றது. தெ. ஞானசுந்தரம், மணிமேகலை ஞானசுந்தரம், ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். எம்டிஎஸ் பள்ளிக் குழந்தைகள் சேர்ந்திசையாக தமிழ்த்தாய் வாழ்த்து, இந்திய, அமெரிக்க தேசிய கீதங்களைப் பாடினர். கணபதி ராமன் வரவேற்புக்குப் பின் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் மக்களைக் கவர்ந்தன. காந்தி வேடத்தில் குழந்தைகள் மேடையில் தோன்றிக் காந்திய சிந்தனைகளைக் கூறினார்கள். நிறங்கள், எண்கள், மாதங்கள் போன்றவற்றைக் கூறும் பாடல்கள், ஆத்திசூடி, பாரதி மற்றும் பிற கவிஞர்களின் பாடல்கள், பீர்பல் கதைகள், இயற்கையின் சிறப்பை வெளிப்படுத்தும் உரைகள், இந்தியாவைப் பற்றிய செய்திகள், தமிழ்ப்பள்ளியைக் குறித்து, தங்கள் ஊர்களைக் குறித்துச் செய்த கருத்துப் பகிர்வு என்று கலக்கினார்கள். தமிழ்ப் பள்ளி முதல்வர் அபிராமி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த தெ.ஞானசுந்தரம், குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் புதுச்சேரி கம்பன் இருக்கையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தஞ்சைப் பல்கலையில் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து ஆழ்வார்களைப் பற்றிய நூல்கள், வைணவ உரைவளம், கம்பனும் வான்மீகியும், கம்பனின் பாத்திரப் படைப்புகள் பற்றி தனித்தனியே நூல்கள் எழுதியவர். கம்பன் கழகம், கபிலர், சடையப்பர், திருவாவடுதுறை விருதுகள் பல பெற்ற இவர் ஒரு நற்றமிழ் நாவலர்.

ட்ராய் கம்யூனிகேஷன் சென்டரில் இவரது "கல்வியிற் பெரிய கம்பன்" சொற்பொழிவு 8ம் தேதி மாலை நடைபெற்றது. சான்றோர்கள் அடங்கிய நல்ல அவை அன்று அமைந்தது. கம்பனில் சந்த நயம், அவர் கையாண்ட ஆழ்வார்கள், திருமுறைகள், திருக்குறள், வான்மீகமும் கம்பனும் வேறுபடும் இடங்கள் என்று அவர் நிகழ்த்திய சொற்பொழிவு கேட்டாரைப் பிணித்தது. இந்த நிகழ்ச்சியும் டெட்ராய்ட் தமிழ்சங்கத் தமிழ்ப்பள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்ப் பள்ளிகளில் 250 மாணவர்கள் பயில்கிறார்கள் என்பது சிறப்பு.

உமையாள் முத்து,
மிச்சிகன்

© TamilOnline.com