சுதேசி ஐயா
ஜூன் 7, 2014 அன்று Y.G. மகேந்திராவின் 'சுதேசி ஐயா' நாடகம் விரிகுடாப் பகுதி ரெட்வுட் சிடியின் காரிங்டன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரட்டிய தொகை அக்ஷயா USA டிரஸ்ட் மற்றும் இந்தியா லிடரசி ப்ராஜக்ட் அமைப்புகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. முக்கிய விருந்தினராகத் திரு. லேனா தமிழ்வாணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். திரை நட்சத்திரங்கள் ஜெயஸ்ரீ, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் தோன்றி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.

முன்னேற்றம் என்ற போர்வையில் நமது பண்பையும் கலாசாரத்தையும் இழக்கக்கூடாது என்ற அருமையான கருத்தைக் கருவாகக் கொண்டு இந்த நாடகம் வடிவமைக்கப் பட்டிருந்தது. சிகாகோவில் இருந்து வந்தோரே இதில் நடித்திருந்தது நாடகத்தின் சிறப்பு. சிறுவயது YGM ஆக நடித்த சிறுவன் ரிஷப் அருமையான தமிழ் உச்சரிப்புடன் திறமையாக நடித்து அமெரிக்காவில் வளர்ந்த சிறுவனா என்று வியக்க வைத்தான். சென்ற ஆண்டு அமெரிக்காவில் நடந்த கர்நாடிக் ஐடல் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய சிறப்பும் ரிஷபிற்கு உண்டு. மகாத்மா காந்தியாகத் தோன்றிய கார்த்திக்கின் உருவப் பொருத்தமும், மேக்கப்பும் அருமை. சிறப்பாக ஒலி, ஒளி அமைத்த கலை ரவியையும் குறிப்பிட வேண்டும். மகேந்திராவின் மச்சினனாக நடித்த ரங்கா, அவருக்கு இணையாக நடித்து மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து விரிகுடாப்பகுதியின் Amateur Artists of Bay Area வழங்கிய 'காசி அல்வா' குறுநாடகம் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. T.R. ரவி கதை வசனம், T.S. ராம் இயக்கம், T.T. கார்த்திகா இசை என்று நாடகத்தை ஜமாய்த்துவிட்டனர். அஷோக் சுப்ரமணியத்தின் தலைப்புப் பாடல் மனதில் நிரம்பி ஹம் செய்யவைத்தது. இந்த நாடகத்தில் கோபால் பார்த்தசாரதி, சுஜாதா ராஜகோபால், ராஜாமணி, ராம் ராமச்சந்திரன், தீபா லக்ஷ்மிநாராயணன், முரளி ஜம்பு, ஷண்முகா, கிரிஜா மோகன், வீரவேல் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் 'இளையராகம்' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. T.T. பாலாஜி தொகுத்து வழங்க விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என்று மூன்று தலைமுறைப் பாடல்களையும் அளித்தனர். மகேந்திரா தன்பங்குக்கு விசில் மூலமாகவே ஒரு பாடலை அளித்து குஷிப்படுத்தினார். இளையராகம் குழுவினர் கோபால் திருவேங்கடம், ஈஸ்வர் சுவாமிநாதன், கௌஷிக் ஸ்ரீனிவாசன், நாதன் நாராயணன், கௌஷிக் வெங்கடேஷ், பத்மநாபன் ராமசாமி, ராதிகா ஐயர், ரங்கராஜன் ராமச்சந்திரன், ரஞ்சனி ராமகிருஷ்ணன், ஷங்கர் ரகு சீதாரமா ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அக்ஷயா, ILP தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டிய திருமதி. உமா வெங்கடராமன் பாராட்டுக்குரியவர்.

© TamilOnline.com