டாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
ஏப்ரல்19, 2014 அன்று ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 13ம் ஆண்டுவிழாவில், மாணவர்கள் நடத்திய சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள்' நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு உதவியாளார்கள் என 40 பேர் கொண்ட குழு நான்கு அரசர்கள் குறித்த நாடகத்தை வடிவமைத்து, இயக்கி இருந்தார்கள். மழலை வகுப்பு முதல் 7ம் வகுப்புவரை பயிலும் 220 மாணவர்களும் இடம்பெறும் வகையில் நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.

தாத்தா பாட்டியை பார்க்க தஞ்சாவூர் வரும் அமெரிக்கப் பேரக்குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் கதையைச் சொல்வது போல் சோழ சாம்ராஜ்ய நாடகம் ஆரம்பமானது. பாண்டியர் காலத்தில் கிரேக்க நாட்டின் மெகஸ்தனிஸ், மார்கோ போலோ வருகை, மன்னன் அவையில் நீதி கேட்கும் கண்ணகி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றன. சேரர்கள் வரலாற்றில் கணைக்கால் இரும்பொறை, புலவர் மோசி கீரனார்க்கு விசிறி வீசிய பெருஞ்சேரல் இரும்பொறை, கண்ணகி சிலைக்கு இமயம் சென்று கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவன் ஆகியோர் காலத்தை எடுத்துரைத்தன. பல்லவர் ஆட்சி காலத்தில் சீனாவிலிருந்து ஹியுன் செங் வருகிறார். வாதாபி யுத்தம், காஞ்சியின் மாட்சி, ,மாமல்லபுர சிற்பங்கள் என பல்லவர்கள் ஆட்சியின் சிறப்புகள் இடம்பெற்றன.

நடன ஆசிரியைகள் சூரியா ரவி, ஹேமா ஞானவேல், அன்னபூரணி சுப்ரமணியன், கல்பனா ரவிசங்கர் ஆகியோர் நடனங்களை அமைத்திருந்தனர். சிறப்பு அம்சமாக சிலம்பாட்டமும் இருந்தது. நன்றியுரை வழங்கிய சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர்–இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு கூறுகையில் மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுவதால்தான் இத்தகைய சாதனைகள் சாத்தியமாகிறது என்றுரைத்தார்கள். ஆசிரியை ஹேமா ஞானவேல் வரவேற்புரை ஆற்றினார். விசாலாட்சி வேலு தொகுத்து வழங்கினார்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com