பனிமழை
வசந்தம் பூமிக்கு
வர்ணம் பூசுவதற்குமுன்
வானம் பூசுகின்ற
வெள்ளை வண்ணம்

கால் பட்டு
கால் பட்டு
காயமான பூமிக்கு
கார்மேகம் தரும்
உறைபனி
ஒத்தடம்

வான் பறக்கும்
மேகமிட்ட
முட்டைகள்
பூமியை
அடைகாக்கும்
அதிசயம்

மேகத்திலிருந்து
மழலையாய்
பிறந்த
மழைத்துளி
மண்ணை அடையும்
போது நரைகூடி
முதுமையான
மாயம்

இலை இழந்த
மரங்களுக்கு
இலவம் பஞ்சாடை

தார்ச் சாலைகளின்
தேகம் வெளுக்க
மேகம் பூசும்
மாவு

வீட்டிலிருக்கும்
குடிமகனை
வெள்ளை மாளிகையில்
வைத்துப் பார்க்கும்
பூமியின் பறந்த
மனது

குருப்ரசாத்

© TamilOnline.com