சுட்டுப்புடுவேன், சுட்டு...
குறும்புக்காரர் மட்டுமல்ல; அல்லது கண்டால் பொறுக்க மாட்டாத கோபக்காரரும் கூட பாரதிதாசன்.

கவிதைகள் மட்டுமல்ல; திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். அப்படி ஒருமுறை 'காளமேகம்' என்ற படத்துக்கு கதை, வசனம், பாடல்கள் எழுத அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இயக்கம் எல்லீஸ் ஆர். டங்கன்.

பாரதிதாசனின் நண்பர் பி.எஸ். செட்டியார். அவர் பத்திரிகைகளில் "கதை, வசனம், பாடல்கள்: பி.எஸ். செட்டியார்" என்று விளம்பரப்படுத்தினார்.

இந்த விளம்பரத்தைக் கண்டு கோபம் கொண்டார் பாரதிதாசன். செட்டியாரை எச்சரித்தார். ஆனால் செட்டியார் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. விளம்பரம் அவ்வாறே தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

இதனால் மிகவும் சீற்றம் கொண்டார் பாரதிதாசன். செட்டியாரைத் தொடர்பு கொண்டவர், "என்ன பி.எஸ்.செட்டி! உனக்குப் பலமுறை சொல்லி விட்டேன். தொடர்ந்து அப்படியே விளம்பரம் வருகிறது. என் விஷயத்தில் ஜாக்கிரதையா நடந்து கொள். ஏன் தெரியுமா? நான் புதுச்சேரிக்காரன். சுட்டுடுவேன்" என்றார்.

அதன் பின்னர்தான் பத்திரிகைகளில் "கதை, வசனம், பாடல்கள்: பாரதிதாசன்" என்று வந்தது.

சிறந்த கவிஞர் மட்டுமல்ல; தாம் எழுதிய பாடல்களைப் போலவே தகாதது கண்டால் கொதித்தெழுபவராகவே பாரதிதாசன் தன் வாழ்நாளில் இருந்தார்.

"மனிதன்" இதழ்த் தொகுப்பிலிருந்து

© TamilOnline.com