குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
மரத்தின் மறுப்பு
பின்வரும் பனிக்காலம்
பிடிக்கவில்லை யென்று
பல மரங்களும் பிடிக்கின்றன
சிவப்புக் கொடிகளை!

இலையுதிர் காலம்
சித்திரையில் தன்
சிறு விரல்களில் வைத்த
மருதாணியை
கலைக்க மறந்த
கலைத்துவிட்ட
நேற்றுக் கலைத்ததுபோல்
நெடுஞ்சாலைகளின்
இருபுறமும் மரங்கள்..

பனிக்காலம்
இலையை இழந்த
மரத்திற்காக
மண் பூணுகிறது
விதவைக் கோலம்..

ஞானம்
எரிந்த வத்திகுச்சியைப்
பார்த்த பிறகும்
இன்னும் எதற்கு
தலைக்கனம்.

பனிமழை
குளிர்காலத்தில்
மனிதனுக்கு மட்டுமல்ல
மனஇறுக்கம்
மேகத்திற்கும் கூடத்தான்

குருப்ரசாத் வெங்கடேசன்,
எலிகாட் சிடி, மேரிலாந்து

© TamilOnline.com