காபி டீ புரொடக்‌ஷன்ஸ்
வித்தியாசமாகக் கதை சொல்லும் ஆர்வத்தினாலும், சினிமா தொழில்நுட்பத்தில் கொண்ட பற்றினாலும் பிறந்ததுதான் காபி டீ புரொடக்‌ஷன்ஸ். கலிஃபோர்னியாவின் பே ஏரியாவில் நான்கு உறுப்பினர்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று 15 பேருடன் விரைவாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இயக்குனர் ராகவன் ஸ்ரீனிவாசன் சான் ஹோசேயில் ஒரு தொலைத்தொடர்புக் கம்பெனியில் மென்பொருள் வடிவமைப்பாளர். குறும்படம் இயக்குவது இவரது பேரார்வம்.

காபி டீயின் முதல் குறும்படம் 'Fade' வசனமில்லாத, மொழி வேறுபாடுகளைக் கடந்த ஒரு இனிமையான காதல் கதை. இந்தப் படம் 2013 கொல்கொத்தா குறும்பட விழாவிற்குத் தேர்வு செய்யப்பட்டது.

செப்டம்பர் 2013ல் நாளைய இயக்குனர் சீசன் ஐந்திற்கான போட்டியைக் கலைஞர் டிவி அறிவித்தது. அச்சமயம் காபி டீ புரொடக்‌ஷன்ஸ் தனது இரண்டாவது படைப்பான 'பேய் கதை' படத்தை முடிக்கும் தறுவாயில் இருந்தது. இந்த வாய்ப்பைத் தனது கனவுப் பாதைக்கு ஒரு படிக்கல்லாக எண்ணிய ராகவன் இப்படத்தைப் போட்டிக்குச் சமர்ப்பித்தார்.

பேய் கதை நவீனயுகத் திகில் படம். ராகவனும் அவரது குழுவினரும் நாளைய இயக்குனர் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட இப்படம் காரணமானது. இப்போது காபி டீ புரொடக்‌ஷன்ஸ் போட்டியின் இரண்டாவது சுற்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் அறிய:
வலையகம் - www.kaapitea.com
முகநூல் - www.facebook.com/kaapitea

© TamilOnline.com