எதுவும் முடியும்!
சுவாமி விவேகானந்தர் பரிவ்ராஜகராக இந்தியா முழுதும் சுற்றித் திரிந்த சமயம். அப்போது மீரட்டில் தங்கியிருந்தார். 'ஜான் லுப்பக்' என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்ட சுவாமிகள், அவற்றை நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வருமாறு தன் சகதுறவியான அகண்டானந்தரிடம் கூறினார். உடனே அகண்டானந்தரும் அவற்றைத் தேடிக் கொணர்ந்து தந்தார். அவை பெரிய தலையணை அளவில் இருந்தன. மறுநாளே அந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறி, அகண்டானந்தரிடம் கொடுத்து விட்டார் விவேகானந்தர்.

அகண்டானந்தரும் திருப்பிக் கொடுக்க நூல் நிலையத்திற்குச் சென்றார். நூலகருக்கு மிகுந்த ஆச்சரியமாகிவிட்டது.

"சுவாமிஜி, படிக்கவில்லையா என்ன! உடனே ஏன் திருப்பிக் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அகண்டானந்தர், "இல்லை. சுவாமிகள் படித்து முடித்து விட்டார். அதனால்தான் திருப்பிக் கொண்டுவந்தேன்" என்றார்

ஆனால் அதனை நூலகர் ஏற்கவில்லை. "இதெல்லாம் சாத்தியமே இல்லை. இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதென்பது யாராலும் முடியாது" என்றார் திட்டவட்டமாக. விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர்.

உடனே சுவாமி விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு நூலகத்தை அடைந்தார். நூலகரிடம், "நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். வேண்டுமானால் என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டுப் பரீட்சிக்கலாம்" என்றார்.

நூலகரும் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்தப் பெரிய புத்தகங்களில் இருந்து பலப்பல கேள்விகளைக் கேட்டார். சளைக்காமல் ஒவ்வொன்றுக்கும் தெளிவாகப் பதில் கூறினார் சுவாமி விவேகானந்தர்.

நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிகள் ஒரு மிகப் பெரிய மேதை என்பதை ஒப்புக் கொண்டார். அதே சமயம் இது எப்படிச் சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு விவேகானந்தர், "ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்தால், அவனால் எதுவும் சாத்தியமாகும். பிரம்மச்சரியத்தின் ஆற்றலுக்கு முன் இதெல்லாம் உண்மையில் வெகு சாதாரணம்" என்று விளக்கினார்.

© TamilOnline.com