ஜோ டி க்ருஸுக்கு சாகித்ய அகாதமி விருது
தமிழ் எழுத்தாளர் ஜோ டிக்ருஸ் (51) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்தவர் ஜோ டிக்ருஸ். கடல்சார் மரபில் வளர்ந்தவர். தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்று, பின் சென்னை லயோலாவில் எம்.ஏ. பொருளாதாரம், திருச்சி புனித வளனார் கல்லூரியில் எம்.ஃபில் பயின்றார். சென்னையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் சரக்குப் போக்குவரத்துத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவரது முதல் நாவலான 'ஆழிசூழ் உலகு' கடல்வாழ் மக்களின் வாழ்க்கையைப் பேசுவது. அதற்கே சாகித்ய அகாதமி விருது எதிர்பார்க்கப்பட்டது. அவரது இரண்டாவது நாவலான 'கொற்கை' அதைப் பெற்றுள்ளது. இதுவும் கடல்வாழ் மக்களின் வாழ்க்கையைப் பேசுவதே! ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல், கொற்கைத் துறைமுகத்தில் 1914ல் தொடங்கி 2000ம் ஆண்டில் நிறைவு பெறுகிறது. பரதவர் சமூகத்தின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் தாக்கம், சுதந்திரப் போராட்டம், நவீனத்துவத்தின் வருகை, அதனால் பரதவர் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் உழைத்து இந்நாவலை எழுதியிருக்கிறார் டிக்ருஸ். பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கடல்சார் மக்களின் வாழ்க்கையைக் கூறும் 'மரியான்' படத்துக்கு வசனம் எழுதியதும் இவர்தான்.



© TamilOnline.com