அரங்கேற்றம்: கார்பி சௌத்ரி
அக்டோபர் 19, 2013 அன்று செல்வி. கார்பி சௌத்ரியின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ரமோனில் உள்ள டஹர்டி அரங்கில் நடைபெற்றது. டாக்டர். பிந்து ஷங்கர் நடத்தி வரும் விருந்தாவன் நாட்டியப் பள்ளியின் மாணவியாவார் கார்பி.

ஊத்துக்காடு வெங்கடகவியின் 'ஆனந்த நர்த்தன கணபதிம்' என்ற பாடலுடன் அரங்கேற்றம் தொடங்கிய பின் கல்யாணி ராக ஜதீஸ்வரத்தில் சூடு பிடித்தது. மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தில் மேடையில் கார்பி தெரியவில்லை, துர்கையின் ரௌத்திரமே வடிவெடுத்து நின்றது. அரங்கேற்றத்தின் நடுநாயகமாக அமைந்தது அருணாசலக் கவிராயரின் மோகன ராக வர்ணம் 'ஏன் பள்ளி கொண்டீரையா?', கலாக்ஷேத்திராவின் திருமதி. சாரதா ஹாப்மன் அவர்களால் நடனம் அமைக்கப்பட்ட இந்த வர்ணத்துக்குத் திருமதி. ருக்மணி தேவி தம் இளமைக் காலத்தில் சில அரங்குகளில் ஆடியுள்ளது குறிப்பிடத் தக்கது.

முத்துசுவாமி தீட்சிதரின் 'ஆனந்த நடன பிரகாசம்' பாடலுக்கு நடராசரின் ஆடல் மிடுக்கைக் கண்முன் கொணர்ந்தார் கார்பி. அடுத்துவந்த பந்தாட்ட நடனம் குறிப்பிடத் தக்கது. திலங் ராகத்திலான 'குற்றாலக் குறவஞ்சி'ப் பாடலுக்கு, நாயகி வசந்தவல்லி துள்ளிக் குதித்துத் தோழியருடன் ஆனந்தமாகப் பந்தாடுவதை கார்பி தன் உடல்மொழியாலும் அபிநயங்களாலும் உயிர்கொடுத்தார். 'ராதிகா தவ விரகே கேசவா' என்ற அஷ்டபதி வெகு அழகு. காஞ்சி காமாட்சியின் மேல் ஹிந்தோள ராகத் தில்லானவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பாடகி திருமதி. ஆஷா ரமேஷ், மிருதங்கம் திரு. என். நாராயணன், வயலின் திருமதி. சாந்தி நாராயணன் ஆகியோர் தம் திறத்தால் அரங்கேற்றத்திற்கு வளம் சேர்த்தனர். அசாமியப் பெற்றோருக்குப் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த கார்பியின் பரத நாட்டியத்தில், எல்லைகளைக் கடந்த பரதநாட்டிய மொழியே மேலோங்கி நின்றது என்பதில் ஐயமில்லை.

செந்தமிழ்ச்சேய்,
சான் ரமோன்

© TamilOnline.com