பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிவகாயின் சபதம்' நாட்டிய நாடகம்
அக்டோபர் 27, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், திருச்சிற்றம்பலம் நாட்டியப் பள்ளியுடன் இணைந்து அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகத்தை ஃப்ரீமான்ட் ஓலோனி கல்லூரி ஸ்மித் அரங்கில் இரு காட்சிகளை வழங்கியது. பிரபல நாட்டியக் கலைஞர் மதுரை ஆர். முரளிதரன், அவரது மாணவி தீபா மகாதேவன், இவர்களுடன் இளங்கலைஞர்கள், நாடக நடிகர்கள் மற்றும் ந்ருத்யோல்லாசா நடனப் பள்ளி, ஏரோ டான்ஸ் அகடமி, மைத்ரி நாட்யாலயா ஆகியன இணைந்து இதனை வழங்கியது. நிகழ்ச்சியின் மூலமாக திரட்டப்பட்ட நிதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் நிவாரணப் பணிக்காக சேவா இன்டர்நேஷனல் மூலமாக அளிக்கப்படுகிறது.

இந்த நாட்டிய நாடகத்தை மதுரை ஆர். முரளிதரன் எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்துப் பல இடங்களில் மேடையேற்றியுள்ளார். சான் ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இதுவே முதல்முறை. முரளிதரன், உமா, சித்தார்த் கேளம் ஆகிய கலைஞர்கள் தவிர இதில் நடித்த ஐம்பதுக்கும் மேலான கலைஞர்கள் நாட்டியம் பயின்ற, நாடகங்களில் நடிக்கும் திறமையான கலைஞர்கள் ஆவர்.



காதல், வீரம், கலைகள், சைவம், புத்தமதம், வரலாறு, போர்கள், சதித்திட்டம், துரோகம், வீரம் என்று பல அம்சங்களும் நிறைந்த இந்த நாவலை முரளிதரன் இரண்டரை மணி நேர நாடகமாக வடித்திருக்கிறார். அவரே நாகநந்தியாகவும், சாளுக்கியப் புலிகேசியாகவும் பிரமாதமாக நடித்தார். சிவகாமியாக தீபா மகாதேவனும், பின்னர் நாட்டியமாமணி உமா முரளியும் தோன்றி அற்புதமான அனுபவத்தை அளித்தனர்.
நரசிம்மவர்ம பல்லவராக நடிக்க அட்லாண்டாவில் இருந்து வந்திருந்த நாட்டியக் கலைஞர் சித்தார்த் கேளம் முரளிதரனுக்கு ஈடாக நடித்திருந்தார். மகேந்திரவர்ம பல்லவராகவும், மாறுவேடத்தில் வரும் வஜ்ரபாகுவாகவும் இரு வேடங்களில் பிரபல நடிகரான திருமுடி துளசிராம் அபாரமாக நடித்தார். ஆயனசிற்பியாக நவீன் நாதனும், ஸ்ரீனி ஸ்ரீகாந்த், அக்‌ஷயா கணேஷ், ஜம்பு ஆகியோர் சிறப்பாக நடித்தனர். விஸ்வேத்தா நடனக் குழுவினர் காவடி, கிராமிய நடனங்களை அளித்தனர். சுபா ராஜேஷ் குழுவினர் கரகாட்டம் ஆடினர். அருண், உமேஷ், ஷங்கர் ஆகியோர் ஒலி, ஒளி அமைத்திருந்தனர். அரவிந்தன் வீடியோவை இயக்கினார். தினேஷ் சந்திரசேகர் புகைப்படம் எடுத்தார்.

நித்யவதி சுந்தரேஷ் குழுவினர் நிகழ்ச்சித் தயாரிப்பு, ஒப்பனை ஆகியவற்றை நேர்த்தியாகச் செய்தனர். பல்லக்குகள், கத்தி, கேடயம், ஈட்டி, காவடி, குதிரை, யானை என்று ஏராளமான தத்ரூபமான பொருட்களை நாடகத்துக்கென்றே தன்னார்வத் தொண்டர்கள் உருவாக்கியிருந்தனர். முக்கியமாக யானையும், பல்லக்குகளும் பெரும் உற்சாகத்தைப் பெற்றன. யானைக்குள் இருந்த ரவி மற்றும் வெங்கடேஷ் பாபு துல்லியமாக யானையை வழிநடத்தினர். தரமானதொரு நிகழ்ச்சியில் கிடைத்த வருமானத்தைப் பேரிடர் மீட்புப் பணிக்கு உதவியதில் பாரதி தமிழ்ச் சங்கம் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தது. தவிர, மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு வெளிவரவும் பாரதி தமிழ்ச் சங்கம் ஒரு பகுதி நிதி ஏற்பாடு செய்துள்ளது.

தகவல்: ச. திருமலைராஜன், ராஜாமணி
படங்கள் உரிமை: தினேஷ் சந்திரசேகர் போடோகிராபி

© TamilOnline.com