'அக்ஷயா' கிருஷ்ணனுடன் தீபாவளி
நவம்பர் 8, 2014 அன்று அக்ஷயா டிரஸ்ட் திரு. நாராயணன் கிருஷ்ணன் வளைகுடாப் பகுதிக்கு வருகை தந்தார். அபிராமி கலைமன்றம் மற்றும் அக்ஷயாவிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகிய 'வெங்கடா3' நாடகத்திற்காக உழைத்த தன்னார்வப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அக்ஷயாவின் புதிய கட்டிடம், அதில் வசிக்கும் முதியோர், அவர்களுக்குச் செய்யப்படும் சேவைகள் பற்றிய புதிய ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. 'மதுரை மாவட்டத்தில் இனிமேல் திக்கற்ற முதியோர்களே இல்லாமல் அக்ஷயா டிரஸ்ட் செய்துவிட்டது' என்று கூறி, அதற்கு உதவி செய்ததற்காக நன்றி தெரிவித்தார். அக்ஷயாவுக்கு வரும் நன்கொடையில் ஒரு சதவிகிதமே நிர்வாகச் செலவுக்கும், எஞ்சிய 99 சதவிகிதம் நேரடியாக முதியவர்களுக்குச் சென்று சேர்கிறது என்றும் குறிப்பிட்டார். திருச்சி மாவட்டத்திலும் இதுபோன்று செய்யத் திட்டம் இருப்பதற்காகவும், அதற்கும் ஒத்துழைப்புத் தேவை என்று கேட்டுக் கொண்டார். அருமையான தீபாவளி விருந்துடன் கிருஷ்ணன் அவர்கள் கம்பிமத்தாப்பு ஏற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.

நிகழ்ச்சியைத் திருமதி. உமா வெங்கட்ராமன் ஏற்பாடு செய்திருந்தார்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com