NETS: குழந்தைகள் தினவிழா
நவம்பர் 9, 2013 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் குழந்தைகள் தினவிழாவை ஃப்ராமிங்காமில் உள்ள கீப்டெக் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் மாறுவேட அணிவகுப்பு. தனித்திறன் பிரிவில் பாடல், ஆடல், வாத்திய இசை என்று பிரமிக்க வைத்தனர்.

குறளைப் பொருளுடன் எப்படிக் கேட்டாலும் கூறிய குழந்தைகளின் திறமை நடுவர்களான திருமதி. உமா நெல்லைப்பன், திரு. இளங்கோ சின்னசாமி, திரு. ரமேஷ் பீளமேடு ஆகியோரைத் திக்குமுக்காடச் செய்தது. 'சூப்பர் டான்சர்' கண்களுக்கு விருந்து. 6 முதல் 16 வரை பங்கேற்றுக் குழுவாக நடனத் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகள் கைதட்டலை அள்ளினர். நடுவர்களாகத் திருமதி. சுஜா மெய்யப்பன், திருமதி. ஷீதல் புவனேந்திரா, திருமதி. தேனு ராஜன் பங்கேற்றனர். நெட்ஸ் தலைவர் திரு. ராஜ் வேல்முருகன் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். திருமதி. சுபா சுரேஷ் மற்றும் திருமதி. பமிலா வெங்கட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். திரு. கமலநாதன் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com