குறும்படங்கள் திரையிடல்
கலிஃபோர்னியாவில் இயக்குநர் லீனா மணிமேகலையின் குறும்படங்கள் டிசம்பர் 3ம் தேதி சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றமும் இந்திய குமுகாய மையமும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியில் இயக்குநர் லீனா மணி மேகலையின் மாத்தம்மா, பலிபீடம், Break the shackles என்ற படங்கள் திரையிடப்பட்டன. மாத்தம்மா ஒரே நாளில் எடுக்கப்பட்ட "சன் டிவி சிறப்புப் பார்வை டாக்குமென்டரி" என்ற தரத்தில் இருந்தது.

குழந்தைகளைக் கடவுளுக்கு நேர்ந்து கொள்வதில் குறை காணும் இப்படம், ஆண்கள் காமுக வெறியர்கள் என்ற பார்வையோடு நின்று விடுகிறது.

மருத்துவ வசதிகளும், சத்துணவும் தருவதோடு மட்டுமல்லாமல், நேர்ந்து கொண்ட குழந்தைகளைக் காமுக வன்முறைக்கு இரையாக்குவது தெய்வக்குற்றம் என்ற நம்பிக்கையை வளர்ப்பதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முறைகளில் ஒன்று என்பதைத் தவிர்க்கிறார் இயக்குநர்.

பலிபீடம் படம் தமிழ்நாட்டுக்குள் சிதறியிருக்கும் சிறுபான்மைத் தெலுங்கு ஜாதி ஒன்றுக்குள் நிலவும் குழந்தை மணக் கொடுமைகளை விவரிக்கிறது. மாத்தம்மா, பலிபீடம் ஆகிய இரண்டுமே பெரு நீரோட்டத்திலிருந்து விலகி வாழும் சிறுபான்மைத் தெலுங்குச் சாதிகளைப் பற்றியவை என்று முதலிலிலேயே பறைசாற்றும் படங்கள். இதனால் அவ்வப்போது தெரியும் "விலங்கியல் பூங்காவுக்கு வேடிக்கை பார்க்கப்போகும் பட்டணத்துக் கண்ணோட்டம்" மற்றும் பிரச்சாரத் தொனி உறுத்துகின்றன. ஒரு தேர்ந்த ஆவணப்பட இயக்குநரால் பார்வையாளர்களை அந்நியப் படுத்தாமல் மனித நேயத்துடன் கதை சொல்லியிருக்க முடியும்.

Break the shackles உலகமயமாக்கலால் தலித்துகள் படும்பாடு பற்றிச் சொல்ல வருகிறது. ஆனால், வேறு எதற்கோ தலித்துகளைப் பற்றி எடுத்த படங்களுடன், தலித் இயக்கத் தலைவர் ஒருவரின் நேர்காணல்களை ஒட்டி, அவ்வப்போது உலகமயமாக்கல் என்று மந்திரம் சொல்லி மசாலா செய்திருக்கிறார் இயக்குநர். அவரையும் மீறிப் படத்துக்கு வலிமை சேர்ப்பது ஏழை எளியவர்களின் குரல்கள். ஆயிரம் அடக்குமுறை செய்தாலும், அழுத்தம் திருத்தமாகவும், தெள்ளத் தெளிவாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லும் இவர்கள் குரல்கள் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. எங்களுக்கு உதவி செய்ய யார் முன் வருவார்கள்?

உள்ளூர் மக்களா, தமிழ் மக்களா, இந்திய மக்களா, உலக மக்களா என்று திரை வசனத்தனமான குமுறலோடு படம் முடியும்போது நமது தார்மீகச் சீற்றம் உலகமயமாக்கலின் மீதல்ல, நம்மில் சிலரையே பிறப்பால் இழிவானவர் என்று நடத்தும் நமது சமூகத்தின் மீதுதான்.

விறன்மிண்டன்

© TamilOnline.com